உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த மோதிலால் யாதவ் என்ற தொழிலதிபர் நேற்று தன் 73-வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். தன் பிறந்தநாளன்று ஏதேனும் புதிதாகச் செய்ய வேண்டும் என நினைத்த அவர் அங்குள்ள மாவட்ட சிறைக்குச் சென்று சில கைதிகளை தன் சொந்த செலவில் விடுதலை செய்துள்ளார்.
சிறிய தவறு செய்துவிட்டு தங்கள் தண்டனைக் காலம் முடிந்த பிறகும் அபராதம் செலுத்த முடியாமல் தொடர்ந்து சிறையிலேயே இருக்கும் 17 குற்றவாளிகளுக்கு அபராத பணத்தைச் செலுத்தி அவர்களுக்கு விடுதலை பெற்றுத் தந்துள்ளார். அனைவருக்கும் சேர்ந்து மொத்தமாக 32,380 ரூபாய் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.இது பற்றிப் பேசியுள்ள ஆக்ரா சிறை கண்காணிப்பாளர் சஷிகாந்த் மிஸ்ரா, குற்றவாளிகள் அனைவரும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல குற்றங்களில் ஈடுபட்டவர்கள். அவர்களால் அபராதத் தொகை செலுத்தமுடியாததால் தொடர்ந்து சிறையிலேயே இருந்தனர்.தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளில் சாகர் என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவரின் தண்டனை காலம் முடிந்து ஒரு வருடம் ஆகிறது. இருப்பினும் அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையான 1,089 ரூபாயை அவராலும், அவரது குடும்பத்தாலும் செலுத்த முடியாத காரணத்தால் அவர் வலுக்கட்டாயமாகச் சிறையில் இருக்கும் சூழ்நிலை உருவானது அவ்வாறு இருக்கும் சிறை கைதிகள் சிலரை தொழிலதிபர் மோதிலால் யாதவ் விடுவித்துள்ளார் என்றார்.ஒரு நாள், ஒரு தொழிலதிபர் தன் பிறந்த நாளன்று சிறை கைதிகளை விடுவித்தார் என்ற செய்தியைப் படித்து விட்டு என் மகன் என்னிடம் வந்து ‘நீங்களும் உங்கள் பிறந்தநாளன்று இதேபோல் செய்வது சிறப்பு எனக் கூறினான். அதனைக் கேட்டு நானும் இவ்வாறு செய்ய முடிவு செய்தேன். என் இளைய மகன் வழக்கறிஞராக உள்ளார். கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றால் அவர்கள் கட்ட வேண்டிய அபராதத் தொகையை நீங்கள் செலுத்தினால் கைதிகளுக்கு விடுதலை பெற்றுத் தரலாம் என என்னிடம் கூறினான். அதன் பிறகுதான் பணம் செலுத்தினேன்” என கைதிகளை விடுதலை செய்யத் தூண்டுதலாக இருந்தது பற்றி தொழிலதிபர் மோதிலால் யாதவ் கூறியுள்ளார்.