வேலூர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்கு ஆக.5ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தொகுடியின் தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது.
வேலூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் உள்ள 14 லட்சம் வாக்காளர்களுக்கு அதிமுக தரப்பில் 80% பேருக்கு தலா 300 ரூபாயும் திமுக தரப்பில் 70% பேருக்கு தலா 200 ரூபாயும் பணப்பட்டுவாடா செய்யப் பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப் படுகின்றன.
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், திமுக., பொருளாளர் துரைமுருகனின் மகன் என்பதும், கல்லூரிகளுக்கு அதிபதி என்பதும் பணப்புழக்கம் தாராளமாக இருக்க காரணம். அதே போல், அதிமுக கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும் புதிய நீதிக்கட்சியின் ஏசி சண்முகமும் பொறியியல் கல்லூரியை நடத்தி வருபவர் என்பதால், இருவர் பக்கமும் பணப் புழக்கம் அதிகம் என்கிறார்கள்.
ஏற்கெனவே பணம் புழங்கியதால்தான் தேர்தல் அதிகாரிகள் வேலூரில் முன்னர் தேர்தலை நிறுத்தினர். அந்த அளவில் ஒரே ஒரு தொகுதியாக வேலூர் தொகுதி, தேசிய அளவில் பெரும் பிரபலம் அடைந்துவிட்டது.
இந்நிலையில், பணம் படைத்த இருவரும் மீண்டும் போட்டியிடுவதால், பொறியியல் கல்லூரிகளுக்கு இருவரும் சொந்தக்காரர்கள் என்பதால், அந்த தொகுதியில் பணம் விளையாடும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்கெனவே இருந்து வந்தது.
இந்த நிலையில், ஜூலை 30ஆம் தேதி மாலை மற்றும் 31ஆம் தேதி காலை என இரு வேளைகளில் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வசிக்கும் 80% வாக்காளர்களுக்கு அதிமுக தரப்பில் ஒரு ஓட்டுக்கு தலா 300 ரூபாய் என 35 கோடி ரூபாய் வரை பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது!
அதுபோல் திமுக தரப்பில் 31ஆம் தேதி மாலை மற்றும் நேற்று காலை என இரு வேளைகளில் ஓட்டுக்கு 200 ரூபாய் வீதம் 70 சதவீத வாக்காளர்களுக்கு 20 கோடி ரூபாய் வரை பணப் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.
பணம் விளையாடும் வேலூரில் பணம் சென்றடைந்த சதவீதத்தை வைத்து யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது தெரிந்துவிட்டால், ஓட்டுக்குப் பணம் வாங்கிக் கொண்டுதான் வாக்காளர்கள் வாக்களித்து வெற்றி பெறவைக்கிறார்கள் என்பதும் தெளிவாகிவிடும்!