தங்கம் விலை கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அதிகரித்துக் காணப்படுகிறது. ஒவ்வொரு நாளும் விலை ஏறுமுகத்திலேயே இருக்கிறது. அதிலும், இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே விலை அதிகளவில் அதிகரித்துள்ளது.
கடந்த 2-ந்தேதி ஒரு பவுன் ரூ.27 ஆயிரத்தை கடந்த நிலையில், அதன்பின்னரும் தொடர்ந்து விலை உயர்ந்ததால், கடந்த 7-ந்தேதி ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்தை தொட்டது. இந்தநிலையில் நேற்றும் விலை அதிகரித்து தான் காணப்பட்டது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 582-க்கும், ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்து 656-க்கும் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.21-ம் பவுனுக்கு ரூ.168-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 603-க்கும், ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்து 824-க்கும் விற்பனை ஆனது.ஆவணி மாதம் பிறந்து விட்டால் திருமணங்கள் அதிகம் இருக்கும். இன்னும் விலை ஏறுவதற்கு ஏதுவாகும்.தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஒரிரு நாட்களில் ஒரு பவுன் தங்கம் ரூ.29 ஆயிரத்தை நெருங்கிவிடும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த 1ந் தேதியில் இருந்து நேற்று வரை கிராமுக்கு ரூ.293-ம், பவுனுக்கு ரூ.2 ஆயிரத்து 344ம் உயர்ந்து இருக்கிறது.கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்தாலும், வெள்ளி விலை குறைந்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் நேற்று வெள்ளி விலையும் அதிகரித்து இருந்தது. நேற்று மாலையில் கிராமுக்கு 30 காசும், கிலோவுக்கு ரூ.300-ம் அதிகரித்து, ஒரு கிராம் 47 ரூபாய் 60 காசுக்கும், ஒரு கிலோ ரூ.47 ஆயிரத்து 600 க்கும் விற்பனை செய்யப்பட்டது.