சுபாஷிதம் : ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
17. கல்வி ஒரு நிரந்தர சாதனை!
செய்யுள்:
ஆசார்யாத் பாதமாதத்தே பாதம் சிஷ்ய: ஸ்வமேதயா |
பாதம் சப்ரஹ்மசாரிப்ய: பாதம் காலக்ரமேண ச||
பொருள்:
ஞானத்தை, குருமார்களிடம் இருந்து கால் பங்கு, சொந்த புத்தியால் கால் பங்கு, சக மாணவர்களிடம் இருந்து கால் பங்கு பெறுகிறோம். மீதி கால் பங்கு காலம் செல்லச் செல்ல அனுபவம் மூலம் அடைகிறோம்.
விளக்கம்:
ஞானத்தை அடையும் வழி நான்கு முகங்களோடு கூடியது. அனைவரும் எப்போதும் மாணவர்களே என்கிறது இந்த ஸ்லோகம். எத்தகைய கல்வியானாலும் எவ்வாறு கிடைக்கப் பெறுகிறோம் என்பதை விவரிக்கும் ஸ்லோகம் இது.
தாய், தந்தை, ஆசிரியர் ஆகியோர் குருமார்கள் என்ற பிரிவில் அடங்குவர். இவர்கள் மூலம் கால்பங்கு ஞானம் கிடைக்கிறது. சுயமான அறிவுத்திறனால் மீதி கால்பந்து ஞானம் பெறுகிறான் மனிதன். அடுத்த கால் பங்கு தன்னோடு பயிலும் சக மாணவர்களைப் பார்த்து கற்றறிகிறான்.
சிலரைப் பார்த்து இவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் சிலரைப் பார்த்து இவ்வாறு இருக்கக் கூடாது என்பதையும் கற்றுக் கொள்வான். கடைசி கால் பங்கு ஞானத்தை காலப்போக்கில் வாழ்க்கை கற்றுத்தரும். காலம் அளிக்கும் அனுபவம் அபாரமானது. அனுபவம் விலைமதிப்பில்லாதது. அதனால் மனிதன் எப்போதும் மாணவனாகத் திகழ வேண்டும்.
முழுமையான ஞானம் கிடைக்க வேண்டுமென்றால் கற்ற கல்வியை வாழ்வோடு இணைத்துக் கொள்ள வேண்டும். காலப்போக்கில் அது நலமளிக்கும். அதாவது முழுமையான ஞானத்தைப் பெறுவது நம்முடைய கையில்தான் உள்ளது. நம் முயற்சியே அதற்கு சாதனம். சுயமாக வாழ்வில் பெறும் அனுபவத்தின் மூலமாக ஞானம் முழுமையடைகிறது. ஞானம் பெறுவதற்கு குரு எத்தனை தேவையோ சுய முயற்சியும் அத்தனை தேவை!