சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்:
தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
26. நமக்கு நாமே!
செய்யுள்:
உத்தரேதாத்மனாத்மானம் நாத்மானமவசாதயேத்|
ஆத்மைவ ஹ்யாத்மனோ பந்து: ஆத்மைவ ரிபுராத்மன:||
– பகவத்கீதை -6.5
பொருள்:
ஒவ்வொரு மனிதனும் தன்னை தானே உய்வித்துக் கொள்ள வேண்டும். வீழ்ந்தவன் ஆகக்கூடாது. அவனுக்கு அவனே உறவு! அவனுக்கு அவனே எதிரி!
விளக்கம்:
நமக்கு மிகவும் விருப்பமானவர் யார்? நமக்கு நாமே விருப்பமானவர் என்கிறது சாஸ்திரம். கீதாசார்யன் கூறிய இந்த பரிந்துரை அமிர்தத் துளி போன்றது. மோக்ஷ இன்பத்தோடு கூட இக லோக வாழ்க்கைக்கும் இதுவே மகாமந்திரம்.
நம் வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நாமே தீர்மானித்துக் கொண்டு அதற்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தும் செய்யுள் இது.
அண்மைக்காலத்தில் ஆளுமை வளர்ச்சி பற்றிய பாடங்களில் இந்த செய்யுளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள்.
நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் உணவுப் பழக்கங்களிலும் வாழ்க்கை நடைமுறையிலும் நியமங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். யார் கடைபிடிக்க வேண்டும்? நாமேதான் கடைபிடிக்க வேண்டும். பணியிடத்தில் முன்னேற வேண்டும் என்றாலும் சமுதாயத்தில் மதிப்பு பெற வேண்டும் என்றாலும் யார் உழைக்க வேண்டும்? நாமே தான் உழைக்க வேண்டும்!
இவ்விதமாக இவ்வுலக வாழ்க்கைக்காகவும் மறுபிறவி நலனுக்காகவும் கூட நமக்கு நாமே சிரமப்பட்டு உழைக்க வேண்டும் என்ற தெய்வீகக் கருத்தை அளிக்கிறது இந்த கீதாம்ருதம்.
பிறர் வழி காட்டலாமே தவிர பயணம் செய்ய வேண்டியது நாம் தான். அதே போல் இலக்கினை அடைய வேண்டியதும் அடைவதும் கூட நாமேதான்.
ஒவ்வொரு ஜீவனுக்கும் அவனுடைய மனமே எதிரி. அவனுடைய மனவே உறவு. எப்போதும் மனதை நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடிந்தால் அது உறவும் நட்புமாகி உதவிபுரியும். மனதினைப் பகைவனாக்கிக் கொண்டால் அது நம்முடைய வீழ்ச்சிக்குக் காரணம் ஆகிறது என்பது இதன் தாத்பரியம்.
அனுபவத்தை குருவாக எடுத்துக் கொண்டால் நாம் உய்விக்கப் படுவோம். அவ்வாறு இல்லாவிட்டால் வருத்தப்படுவோம் என்ற பொருளில் கூட பகவான் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார். அவரவர் தம்மைத்தாமே உய்வித்துக் கொள்வதற்கு முயற்சிக்கவேண்டும். யாரோ வந்து முன்னேற்றி விடுவார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது.