சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
27. அதிர்ஷ்டம் கிடைக்கும் வழிகள்!
செய்யுள்:
உத்யம: சாகசம் தைர்யம் புத்தி: சக்தி: பராக்ரம: |
ஷடேதே யத்ர வர்தந்தே தத்ர தேவஸ்ஸஹாயக: ||
-விக்கிரமாதித்த சரிதம் -68
பொருள்:
கடின உழைப்பு, சாகசம், மன தைரியம், நற்குணம், உடல்வலிமை, பராக்கிரம் என்ற ஆறு குணங்கள் உள்ளவர்களுக்கு கடவுள் அருள் கிடைக்கும்.
விளக்கம்:
சத்துவகுணம் உள்ளவர்களை அதிர்ஷ்டம் வந்தடைகிறது. அத்தகைய ஆறு சாத்வீக குணங்களை இந்த ஸ்லோகத்தில் கூறுகிறார்கள்.
புருஷப் பிரயத்தனம் என்பது ஒரு தவம். அதற்குத்தான் தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். அதற்குத் துணையாக புத்தி கூர்மையும் மனத் திண்மையும் உடல் வலிமையும் இருக்க வேண்டும் என்பதே இதன் உட்பொருள்.
கடின உழைப்பு என்பது செயலின் வெற்றிக்கு சந்தர்பத்துக்கு ஏற்ப உடலால் செய்யும் முயற்சி. சாகசம் என்பது கடினம் என்று தெரிந்தும் பின் வாங்காமல் அந்தப் பணியை ஏற்றுச் செய்வது. தைரியம் என்பது அச்சமில்லாத திடச் சித்தம். புத்தி கூர்மை என்பது பிரச்சினைகளைத் தீர்க்கும் சமயோசித அறிவு. வல்லமை என்பது உற்சாகம், மந்திர சக்தி, நிபுணத்துவம் முதலான வெற்றிக்குத் தேவையான குணங்கள். பராக்கிரமம் என்பது எடுத்துக்கொண்ட செயலை வெற்றிகரமாக முடிப்பதற்கும் இடையில் ஏற்படும் எதிர்பாராத தடைகளை தாண்டுவதற்கும் தேவையான வீரம்.
சாகசத்தையும் பராக்கிரமத்தையும் கடைபிடித்து கடவுளின் அருளைப் பெற்ற சத்ரபதி சிவாஜியை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். சத்ரபதி சிவாஜி வெறும் 200 படைவீரர்களோடு ஷாயிஸ்தகான் படைத்தளத்திற்குள் புகுந்து அவனுடைய கூடாரத்தைக் கிழித்து உள்ளே நுழைந்தது சாகசம். அவனை உறக்கத்திலிருந்து எழுப்பி எதிர்த்தது பராக்கிரமம்.
சண்டையிட இயலாமல் ஷாயிஸ்தகான் புறமுதுகிட்டு ஓடினான். சுலோகத்தில் கூறப்பட்ட ஆறு குணங்களையும் தன்னுள் கொண்ட சத்ரபதி சிவாஜிக்கு பவானி மாதா துணையாக நின்று வாளைப் பரிசளித்தாள்.