சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
37. தனக்குவமை இல்லாத கொடை!
செய்யுள்:
கர்ணஸ்த்வசம், சிபிர்மாம்சம் |
ஜீவம் ஜீமூதவாஹன: ||
ததௌ ததீசிரஸ்தீனி |
நாஸ்த்யதேயம் மஹாத்மனாம் ||
பொருள்:
(கவச குண்டலங்களை தானம் அளித்தபோது) கர்ணன் தன் தோலை உரித்துக் கொடுத்தான். சிபிச்சக்கரவர்த்தி (ஒரு பறவையின் உயிர் காப்பதற்காக) தன் உடலை வெட்டி சதையை தானம் செய்தார். ஜீமூதவாஹனன் (சர்ப்பங்களின் உயிர்காக்க கருடனுக்கு) தன்னைத்தானே உணவாக சமர்ப்பித்தார். (பகைவனை அழிப்பதன் மூலம் லோக கல்யாணத்தை விரும்பி) ததீசி தன் முதுகெலும்பை தானம் செய்தார். இவ்விதம் மகனீயர்களால் கொடுக்கப்படாதது என்று எதுவுமில்லை.
விளக்கம்:
தியாக குணம் சமுதாய நலனை அடிப்படையாகக் கொண்டு இருக்குமானால் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் செய்யலாம். உள்ளம் எத்தனை விசாலமாக இருக்குமோ அத்தனை கொடுக்கலாம். உலக நன்மைக்காக தானம் செய்த புராண புருஷர்களை உதாரணம் காட்டி போதிக்கும் சுலோகம் இது.
மேலே குறிப்பிட்ட கொடை வள்ளல்கள் சாதாரணமானவர்கள் அல்லர். இப்படிப்பட்ட உதாரணங்களே நம் முன்னாலுள்ள ஸ்பூர்த்தி.
தேவையேற்படும்போது செய்யும் ரத்த தானம், இறந்தபின் செய்யும் கண் தானம், உறுப்பு தானம் போன்றவற்றை செய்யுங்கள் என்று அறிவுறுத்தும் போதனை இந்த ஸ்லோகத்தில் வெளிப்படுகிறது.
தேச சேவைக்காக இளைஞர்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்ட சாணக்கியர் பிட்சைக்குச் சென்றபோது’ ‘எனக்கு பிட்சையாக உங்கள் புதல்வன் வேண்டும்’ என்று கேட்டார். அவ்விதம் சமுதாய சேவைப் பண்புள்ள பலரும் சாணக்கியருக்குக் கிடைத்தார்கள்.
பொதுமக்களின் நலனுக்காக உடல், பொருள், உயிரை தானமாக அளிப்பதற்கும், நேரத்தை தானமாக அளிப்பதற்கும் நமக்கு உற்சாகம் அளிக்கும் நிகழ்வுகளும் உதாரணங்களும் எத்தனையோ உள்ளன. மனம் இருக்க வேண்டுமே தவிர நம்மிடம் கொடுக்க இயலாதது என்று எதுவும் இல்லை.