சுபாஷிதம்…. ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்,:, பிஎஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
கண்மூடித் தனமாக பின்பற்றக்கூடாது!
செய்யுள்:,
கதானுகதிகோ லோகோ ந லோக: பாரமார்திக: !
கங்கா சைகத லிங்கேன நஷ்டம் மே தாம்ரபாஜனம் !!
பொருள்:
உலகத்தில் ஒருவர் செல்லும் வழியில் அப்படியே செல்வதைத் தவிர சுயமாக உண்மையை அறியும் முயற்சியை யாரும் செய்வதில்லை. கங்கை நதி தீரத்தில் மணலில் ஒளித்து வைத்த என் செப்புச் சொம்பைக் காணவில்லை.
விளக்கம்:
யாரோ, எதற்கோ, எவ்விதமோ, ஏதோ ஒன்றை செய்யத் தொடங்குவார்கள். ஆட்டு மந்தை போல் ஜனங்கள் அதையே கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவார்கள். இதனை கதை வடிவில் குறிப்பால் உணர்த்தும் ஸ்லோகம் இது.
தான் சேர்த்த செல்வத்தை ஒரு செப்புப் பாத்திரத்தில் மறைத்து வைத்து ஒரு சாது காசி நகருக்குச் சென்றார். கங்கை நதியில் இறங்கிக் குளிக்கும் முன்பாக செப்புச் சொம்பை எங்காவது பத்திரமாக மறைத்து வைக்க எண்ணினார். நதிக்கரையில் மணலில் புதைத்து வைத்து அடையாளமாக ஒரு மணல் லிங்கத்தை பிடித்து வைத்துவிட்டு நீராடச் சென்றார். அங்கு ஸ்நானம் செய்ய வந்த யாத்திரீகர்கள் அதை பார்த்துவிட்டு இவ்வாறு மணலில் லிங்கம் பிடித்து வைத்து விட்டு குளிக்கச் செல்ல வேண்டும் போலும் என்று நினைத்தார்கள். சாது குளித்துவிட்டு கரையேறி வந்து பார்க்கையில் கங்கைக் கரையில் நூற்றுக்கணக்கான மணல் லிங்கங்கள் உருவாகி இருந்தன. அவற்றில் தன் சொம்பை எங்கே என்று தேடுவார்?
காரணம் அறியாமல் கண்மூடித்தனமாக பிறரை பின்பற்றுவது தவறு என்று சுட்டும் ஸ்லோகம் இது.