சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
42. கல்வி அறிவு பெறும் வழிகள்!
செய்யுள்:
குரு சுஸ்ரூஷயா வித்யா புஷ்கலேன தனேன வா |
அதவா வித்யயா வித்யா சதுர்தீ நோ பலப்யதே ||
பொருள்:
குரு சேவை செய்வதன் மூலம் கிடைப்பது, தாராளமாக பணம் செலவழிப்பதன் மூலம் பெறுவது, ஒரு கலையைக் கொடுத்து வேறொரு கலையைக் கற்றுக் கொள்வதால் பெறுவது என்று ஞானத்தைப் பெறும் மார்க்கங்கள், வழிமுறைகள் மூன்று. அவ்வாறு அன்றி வித்யையை கற்பதற்கு நான்காவது உபாயம் இல்லை.
விளக்கம்:
ஞானம் பெறுவதற்கு மூன்று வழிகள் உள்ளன என்கிறார் கவி. இந்த மூன்று வழிகள் மூலம் ஜிஞ்ஞாசுகள் அறிவு பெறுகிறார்கள்.
வினயம், சமர்ப்பணம், பகிர்தல் என்ற மூன்றும் மாணவர் அறிவு பெறும் வழிகள். குருவைச் சரணடைந்து அவருக்குப் பணிவோடு சேவை புரிந்து அவரிடமிருந்து கல்வி அறிவைப் பெறுவது முதல் மார்க்கம். முன்பு பாரதிய குருகுலங்களில் இவ்விதம்தான் கல்வி பெறப்பட்டது. எப்போதுமே கல்வி அறிவு பெறுவதற்கு பணிவும் சிரத்தையும் தேவை என்பது இதன் தாத்பர்யம்.
இரண்டாவது மார்க்கம் பணம் செலவு செய்து கற்பது. முன்பு குருதட்சிணை சமர்ப்பிக்கும் பழக்கம் இருந்தது. இப்போது பள்ளி, கல்லூரிகளில் கல்விக் கட்டணம், டொனேஷன் மட்டுமேயன்றி கல்வியறிவு பெறத் தேவையான நூல்கள் வாங்குவதற்கும் பணம் தேவைப்படுகிறது. அது மட்டுமல்ல ஒரு நல்ல சொற்பொழிவைக் கேட்க செல்ல வேண்டுமென்றாலும் ஒரு கல்விச் சுற்றுலா செல்ல வேண்டுமானாலும் செலவுக்கு பின்வாங்கக் கூடாது. அதனால் அர்பணிப்பு என்பது இரண்டாவது வழியாக கூறப்பட்டது.
மூன்றாவது பரஸ்பரம் பகிர்தல். புது விஷயங்களை ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொள்ளும் முறை. இது பத்து புத்தகங்களை படிப்பதற்குச் சமம். கல்வி, விஞ்ஞான கருத்தரங்குகள் நடக்கின்றன. அதில் பங்கு பெறுபவர்கள் தம் தம் அனுபவங்களை நேர்மையாக பகிர்ந்து கொள்ளும்போது அவற்றுக்கு பயன் கிடைக்கிறது. இது மூன்றாவது உபாயமாக கூறுகிறார் கவி. இவற்றைத் தவிர நான்காவது மார்க்கம் இல்லவே இல்லை என்று நிச்சயமாகக் கூறுகிறார்.