சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
46 ஆபத்தில் தைரியம்!
செய்யுள்:
தாவத் பயாத்தி பேதவ்யம் யாவத் பயமனாகதம் |
ஆகதம் து பயம் வீக்ஷ்ய நர: குர்யாத் யதோசிதம் ||
பொருள்:
ஆபத்து நேராமல் கவனமாக இருக்க வேண்டும் என்றால் அச்சம் இருக்க வேண்டும். ஆனால் உண்மையில் அந்த ஆபத்துக்கு ஆளாக நேரும் போது அச்சப்படக்கூடாது. சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தைரியமாக நடந்து கொள்ள வேண்டும்.
விளக்கம்:
ஆபத்து நேரும்போது தைரியமாக இருக்கும்படி அறிவுரை கூறும் சுலோகம் இது. ஆபத்து நேராமல் தகுந்த கவனத்தோடு அனைத்து முன்னெச்சரிக்கைகளும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் ஒருவேளை ஆபத்து நேர்ந்து விட்டால் பயப்படாமல் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். தனிமனித வாழ்விலும் சரி நாட்டுப் பாதுகாப்பிலும் சரி இந்த ஸ்லோகத்தை அறிவுரையாகக் கொள்ளலாம்.
அச்சம் என்பது கோழைகளுக்கு நடுக்கம் விளைவிக்கும் உணர்வு. நம் தைரியத்தைப் பார்த்து பயத்திற்கே பயம் விளைய வேண்டும். வீரன் ஒருமுறைதான் மரணிப்பான். கோழை ஒவ்வொரு கணமும் மரணிப்பான் என்ற பழமொழிகள் கூட உள்ளன.
பயம் என்னும் அனாவசிய கற்பனை பயந்தாங்கொள்ளியின் இயல்பு என்பர் மனோதத்துவ நிபுணர்கள். கடவுள் உன்னை விட வேறானவர் என்று நினைக்கும் போது பயம் ஏற்படுகிறது என்பர் ஆன்மீகவாதிகள்.
பகை நாட்டிற்கு தகுந்த விதத்தில் புத்தி புகட்ட வேண்டும் எனில் போர் கட்டாயம் நடக்க வேண்டியதே! நம் நாட்டின் மீது அடிக்கடி நடக்கும் கொடுமையான தாக்குதல்களை முழுமையாக நிறுத்துவதற்கு என்னென்ன செயல்களை முக்கியமாகச் செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்ய வேண்டும்.
நஷ்டத்தை கண்டு அஞ்சாமல் பகைவனை அழிப்பது என்ற முக்கிய இலக்கில் நமக்கு ஏற்படும் சிறு காயங்களுக்கு அஞ்சக் கூடாது என்னும் செய்தியை இந்த ஸ்லோகம் அளிக்கிறது.