சுபாஷிதம் : ஸ்பூர்த்தி பதம்!
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
49. மரமே குரு!
செய்யுள்:
தத்தே பரம் குசுமபத்ரபலாவலீனாம்
கர்மவ்யதாம் வஹதி சீதபவாம் ருஜம் ச |
யோ தேஹமர்பயதி சான்யசுகஸ்ய ஹேதோ :
தஸ்மை வதான்ய குரவே தரவே நமோஸ்து ||
பொருள்:
மலர்கள், இலைகள், பழங்கள் இவற்றின் பாரத்தைத் தாங்கி, வெயில், மழையைத் தாங்கி, பிறருக்கு நிழலும் பழங்களும் கொடுப்பதற்காக மரங்கள் உடலை அர்ப்பணிக்கின்றன. கொடையாளிகளுக்கு மரங்கள் குருவாக நிற்கின்றன. அப்படிப்பட்ட மரங்களுக்கு வந்தனம்!
விளக்கம்:
‘வ்ருக்ஷோ ரக்ஷதி ரக்ஷித:’ என்பது புகழ்பெற்ற வாக்கியம். மரங்களை தேவதைகளாக பூஜிப்பது பாரதிய சம்பிரதாயம். நன்றி காட்டுதலின் சின்னம் இது. இந்த ஸ்லோகத்தில் மரம் ஒரு குருவாக வர்ணிக்கப்படுகிறது. குருமார்கள் தன் திறமையையும் ஞானத்தையும் சீடர்களிடம் பரப்புவார்கள்.
தன்னலமற்று பிறர் நலனுக்காகவே வாழ்க்கையை செலவிட நினைப்பவர்களுக்கு ஊக்கம் அளிப்பவை மரங்கள். இந்த வ்ருக்ஷ குருவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த ஸ்லோகம் அமைந்துள்ளது. இதில் மரத்தை ‘வதான்ய குரு’ என்கிறார். வதான்ய என்றால் அனைத்தையும் அளிப்பவர் என்று பொருள்.
மரங்களுக்கு தீங்கு செய்வது குருவுக்கு செய்யும் அபச்சாரம் என்பது உட்பொருள். அது நன்றி மறந்த செயலாகும். மரத்தில் பயனற்றது என்று எதுவுமில்லை. அதேபோல் நமக்குள்ள கல்வி, அனுபவம், தனம் போன்றவை நம்மைச் சுற்றியுள்ள உலகிற்காக அனைவரின் நலனுக்காக செலவிடவேண்டும்.
நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பார்த்த மரங்கள் தற்போது அரிதாகி வருகின்றன. அதற்கான காரணங்களில் ஒன்று மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது. சாலை விரிவாக்கம், வீடு கட்டுவது, தொழிற்சாலைகளை விரிவு படுத்துவது என்று கோடிக் கணக்கான மரங்கள் அண்மையில் காணாமல் போயின. சுற்றுச்சூழல் சமநிலை அதனால் பாழானது.
மீண்டும் உலக மேதாவிகள் அமர்ந்து குளோபல் வார்மிங் என்று அச்சம் கொண்டு மரம் வளர்ப்பதற்கு அழைப்பு விடுத்தார்கள். எத்தகைய அலட்சியப் போக்கினால் பிராண வாயு அளிக்கும் மரங்களை அழித்து உள்ளோம் என்பதை சிந்திக்க வேண்டும்.