சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
52. செல்வத்தின் பயன்
ஸ்லோகம்:
தானம் போகோ நாச: திஸ்ரோ கதயோ பவந்தி வித்தஸ்ய |
யோ ந ததாதி ந புங்க்தே தஸ்ய த்ருதீயா கதிர்பவதி ||
-பர்த்ருஹரி நீதி -35
பொருள்:
செல்வத்திற்கு மூன்று பயன்கள். தேவையானவருக்கு தானம் அளிப்பது, தான் அனுபவிப்பது, திருடர்களால் வரும் இழப்பு. தானமும் செய்யாமல், தானும் அனுபவிக்காமல் இருந்தால் செல்வத்திற்கு இழப்பு ஏற்படும்.
விளக்கம்:
கடவுள் அளித்த ஐஸ்வர்யத்திற்கு நாம் பாதுகாப்பாளர் (ட்ரஸ்டி) என்று உணரவேண்டும். உரிமையாளர் என்று கருதக் கூடாது என்கிறது இந்த ஸ்லோகம்.
பிறரோடு பகிர்ந்து கொள்வதே செல்வம் படைத்திருப்பதன் முதல் பிரயோஜனம். அதன் பிறகுதான் நாம் அனுபவிப்பது என்று தெரிவிக்கும் உயர்ந்த ஸ்லோகம் பர்த்ருஹரி அருளியது.
உலகில் யாராவது ஒரு சிலரிடம் மட்டுமே செல்வம் இருந்தால் அது அமைதியின்மைக்கு வழிவகுக்கும். உறவினர்களிடையிலோ, சமுதாயத்திலோ, தேசங்கள் இடையிலோ இந்த நிலை நன்மை பயக்காது. செல்வத்தின் பயனை அறிந்து அதன் நன்மை தீமைகளை உணர்ந்து தேவை இருப்பவர்களுக்கு தானம் செய்ய வேண்டும்.
வறியவர்கள் இல்லாத சமுதாயம் உருவாக வேண்டும். முன்பு செல்வந்தர்கள் சத்திரம் கட்டினார்கள். மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, இருப்பிடப் பிரச்சினைகளை தீர்ர்த்தார்கள். சுயநலமின்றி சேவைகளை ஆற்றினார்கள். இல்லாதோருக்குக் கொடுப்பது கடமை என்ற சுய உணர்வோடு தனக்கு எந்தவித உதவியும் செய்யாதவர்களுக்குக் கூட தக்க சமயத்தில் தகுதியானவர்களுக்கு அளிக்கும் தானம் சாத்வீக தானம் என்று பகவத்கீதை குறிப்பிடுகிறது.
பிறரோடு பகிர்ந்து கொள்ளும் குணம் நம் பண்பாட்டின் ஒரு பகுதி. அதிதிகளைத் தேடி உணவளிக்கும் பழக்கம் நம்முடையது. அவ்வாறு பிறருக்கும் அளிக்காமல், தானும் சாப்பிடாமல் இருந்தால் அந்த உணவு என்னவாகும்? ஊசிப் போகும். செல்வமாக இருந்தால் அரசனுக்குச் சேரும். அல்லது திருடன் களவாடிச் செல்வான். அல்லது அருகதையற்றவர்களைச் சென்றடையும்.
நிறைய சம்பாதியுங்கள்! சம்பாதித்த செல்வத்தை நல்ல முறையில் பயன்படுத்துங்கள் என்று போதனை இந்த ஸ்லோகத்தில் கிடைக்கிறது.