Home அடடே... அப்படியா? சுபாஷிதம்: பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!

சுபாஷிதம்: பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

89. பலமே வாழ்வு!
பலவீனமே மரணம்!

ஸ்லோகம்:

வனானி தஹதோ வஹ்னே: சகா பவதி மாருத: |
ஸ ஏவ தீபநாசாய க்ருசே கஸ்யாஸ்தி சௌஹ்ருதம் ||
– சாணக்கிய நீதி 

பொருள்:

வனத்தில் தோன்றும் காட்டுத் தீக்கு காற்று நண்பனைப் போல் துணையாகிறது. அதே காற்று சிறிய தீபம் அணைவதற்கு காரணமாகிறது. பலவீனமானவர்களோடு யார் நட்பு கொள்வார்கள்?

விளக்கம்:

உடலால், மனதால், பொருளால் வலிமை பெற்றிருந்தால்தான் அனைவரும் நட்புக் கொள்ள விரும்புவார்கள் என்று எடுத்தியம்பும் ஸ்லோகம் இது.

சர்ஜிகல் ஆபரேஷன் மூலம் நம் நாட்டின் வலிமை வெளிப்பட்டது. அதன்பின் உலக நாடுகள் பல நமக்கு நட்புக் கரம் நீட்டின.

தனிமனிதன், சமுதாயம், நாடு எதுவானாலும் வலிமையோடு விளங்கினால்தான் கௌரவம். “பலவீனமானவர்களுக்கு ஆத்ம ஞானம் கிடைக்காது” – “நா௨யமாத்மா பலஹீனேன லப்ய:” என்கிறது உபநிஷத்து. “பலவீனம் ஒரு பாவம்” என்பார் சுவாமி விவேகானந்தர்.

பலவீனமானவர்களைக் கண்டால் அவர்களை அவமதிக்கத் தோன்றும். ஒரு பாவச் செயலைத் தூண்டுவது பலவீனம் என்கிறது சாஸ்திரம்.

பலவீனமான விலங்கு என்பதால்தான் ஆட்டினை பலி கொடுக்கிறார்கள். குதிரையையோ, யானையையோ, புலியையோ பலி கொடுக்க மாட்டார்கள் அல்லவா? என்று பலவீனம் குறித்து விவரிக்கும் ஸ்லோகம் ஒன்று பிரசித்தமாக உள்ளது.

அஸ்வம் நைவ கஜம் நைவ வ்யாக்ரம் நைவ ச நைவ ச |
அஜாபுத்ரம் பலிம் தத்யாத் தேவோ துர்பலகாதுக: ||

போக்ரான் பரிசோதனைகள் நடத்திய பின்பு இந்தியாவின் சக்தி என்ன என்பது உலக நாடுகளுக்கு தெரிந்தது. அதன் பின் அவை நம்மோடு நடந்து கொள்ளும் முறையே மாறிவிட்டது என்றார் டாக்டர் அப்துல்கலாம்.

உலகின் எந்த சக்தியும் கண்ணெடுத்துப் பார்க்க முடியாத அளவு பலசாலியாக இந்தியாவை உருவாக்கவேண்டும் என்றார் முன்னாள்   பிரதமர் வாஜ்பாயி. பொருளாதாரத்திலும் கலாச்சாரத்திலும் இந்தியா வலிமை பெற்று மீண்டும் விஸ்வ குருவாக நிற்கும் நாள் நெருங்குகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version