சுபாஷிதம்… ஸ்பூர்த்தி பதம்!
108 ஞான முத்துக்கள்!தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
108. ஒவ்வொரு கணமும் தனமே!
ஸ்லோகம்:
க்ஷணஸ: கணசஸ்சைவ வித்யாமர்தம் ச சாதயேத் |
க்ஷணத்யாகே குதோ வித்யா கணத்யாகே குதோ தனம் ||
– ஹிதோபதேசம்.
பொருள்:
கல்வி கற்க விரும்புபவர்கள் ஒவ்வொரு கணமும் மதிப்பு வாய்ந்தது என்று அறிய வேண்டும். பணம் சம்பாதிப்பதை நோக்கமாகக் கொண்டவர்கள் ஒவ்வொரு பைசாவும் மதிப்பு வாய்ந்ததாக கொண்டு வீண் செலவு செய்யாமல் சேமிக்கவேண்டும். ஒரு கண நேரம்தானே என்று வீணடித்தால் படிப்பு எப்படி வரும்? ஒரு பைசாதானே என்று வீண் செலவு செய்தால் பணம் எப்படித் தங்கும்?
விளக்கம்:
வீணடித்த காலம் திரும்ப வராது. ஒரு காசைக் கூட வீணாகத் தொலைக்கக் கூடாது. கிரிக்கெட், சாட்டிங் என்று காலத்தைப் போக்கும் மாணவர்களுக்கு அறிவுரை கூறும் சுலோகம் இது.
நேரத்தையும் பணத்தையும் பொருட்படுத்தாத மனநிலையை எச்சரிக்கும் ஸ்லோகம் இது. நேரத்தையும் செல்வத்தையும் மதிப்பை அறிந்து பாதுகாக்க வேண்டும் என்று போதிக்கிறது இந்த ஸ்லோகம்.
பல துளி பெருவெள்ளம் என்ற பழமொழியைப் போல அட்சர அட்சரமாகச் சேர்ந்து அட்சயமாக ஞானம் மலர்கிறது. பைசா பைசாவாகச் சேர்ந்து பெருஞ்செல்வம் சேர்கிறது.
ஒலிம்பிக் ஓட்டப் பந்தயங்களில் பங்கு பெறுபவர்களுக்கு விநாடியின் மதிப்பு தெரியும். நிரந்தரம் சுழன்று கொண்டிருக்கும் பூமித்தாய்க்கு நானோ செகண்ட் மதிப்பு தெரியும்.
மொபைல் போனைக் கையில் பிடித்து மணிக்கணக்காக பொழுதுபோக்கும் மாணவர்களை எச்சரிக்கை செய்கிறது இந்த ஸ்லோகம்.
அனாவசிய செலவுகளைக் குறைத்து செல்வம் சேர்! தானம் செய்! வீண் பொழுது போக்காமல் ஞானம் பெறும் வழியைப் பார்! பிறருக்கு பகிர்! என்பது ரிஷிகளின் உத்தரவு.