― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசுய முன்னேற்றம்விஜய பதம்: வேத மொழியின் வெற்றி வழிகள் (8)- தலைமைப் பண்பு!

விஜய பதம்: வேத மொழியின் வெற்றி வழிகள் (8)- தலைமைப் பண்பு!

- Advertisement -
vijayapadam 1

விஜய பதம் – வேத மொழியின் வெற்றி வழிகள் – 8 – Leadership (சமஸ்கிருத இலக்கியம் அளிக்கும் தலைமைப் பண்புகள், அரசு தர்மங்கள், வெற்றிக்கான வழிமுறைகள்)

தெலுங்கில்: பி.எஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

Leadership

அவசியத்தைப் பொறுத்து தலைவன் அடங்கி இருக்க வேண்டும்:-

நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் உள்ள செல்வந்தர் ஸ்ரீபாமுலபர்த்தி வெங்கட நரசிம்மராவு. இருக்கும் ஊரில் சுகமாக வாழ்ந்து வந்தார். எப்போதும் எதற்கும் தேடிச் செல்ல வேண்டிய தேவையிருக்கவில்லை. ராமானந்த தீர்த்த சுவாமியின் தூண்டுதலால் அரசியலில் நுழைந்தார். பிரிக்கப்படாத ஆந்திரபிரதேசத்தில் 1960 ல் அமைச்சரானார். 1971ல் முதலமைச்சரானார். சிறந்த நிலச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். போராட்டங்களால் இங்கு பதவியை இழந்தாலும் மத்திய அரசில் அமைச்சரானார். வெளியுறவுத் துறை, மனித வளத்துறை போன்ற முக்கிய பொறுப்புகளை ஏற்று இந்திரா காந்தியின் நெருங்கிய நம்பிக்கைக்கு உரியவராக வளர்ந்தார். ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு நேர்ந்த மாற்றங்களால் பிரதமரானார்.

முழுவதாக ஐந்தாண்டு பணிபுரிந்த முதல் நேரு குடும்பமல்லாத பிரதமராக வரலாறு படைத்தார். பல சீர்திருத்தங்களால் தேசத்தின் எதிர்காலத்தை சீர்படுத்தினார். 1996 ல் பதவி போனபின் கூட கவலையின்றி வாழ்நாள் முழுவதும் நூல்கள் எழுதுவதிலும் ஆன்மீக நூல்களைப் படிப்பதிலும் காலம் கழித்தார். மன அமைதியோடு கவலையின்றி வாழ்ந்தார். உயரக் கூடிய மனிதனுக்கு சூழ்நிலை அனுகூலமாக இல்லாவிட்டால் அடங்கி இருப்பது கூட தெரிந்தால்தான் அமைதியாக வாழமுடியும்.


ராஜசூய யாகம் நடத்திய ஒரு சக்கரவர்த்தி யுதிஷ்டிரன். ஆனால் காலத்தின் கோலத்தால் தன் சகோதரர்களோடும் கஷ்டம் என்றால் என்னவென்று அறியாத மனைவி திரௌபதியோடும் அக்ஞாதவாசத்தின் போது வேறொரு அரசனிடத்தில் பணிபுரிய வேண்டி வந்தது.

அதற்கு எத்தகைய பணிவு இருக்க வேண்டும்? வெள்ளி ஸ்பூனோடு பிறந்த போதிலும் பிச்சை எடுப்பவரின் வாழ்க்கை நிலைமையைக் கூட புரிந்து நடந்து கொண்டால் மனிதனின் உயர்வு வெளிப்படும். அப்படிப்பட்ட புரிதல் கொண்ட உத்தம மனிதர்கள் துவாபர யுகத்தைச் சேர்ந்த பாண்டவர்கள்.

அரண்ய வாசத்திற்கு முன்வரை தர்மபுத்திரன் சக்கரவர்த்தியாக இருந்தான். ஒவ்வொரு கணமும் சேவகர்கள், ஆணையை மீறாத பணிவான தம்பியர், தர்மம் பிறழாத மனையாள், “மக்கள் மகிழும்படி அரசாள்கிறான்” என்று மக்கள் போற்றிய ஜெய கோஷங்கள்…. எப்படிப்பட்ட வாழ்க்கை அது! அரண்ய வாசத்தில் கூட சர்வ சுதந்திரனாக வாழ்க்கையை கழித்தான். நாரதர், மார்கண்டேயர் போன்ற பல முனிவர்கள் வந்து தைரியமளிக்கும் கதைகளைக் கூறிச் சென்றனர்.

ஆனால் அக்ஞாதவாசத்தில் விராட அரசனின் சபையில் ஒரு வேலை சம்பாதித்துக் கொண்டு அந்த நேரத்தில் கூட தாம் சக்கரவர்த்திகளாக வாழ்ந்தவர்கள் என்பது வெளியில் தெரியாமல் அடங்கிப் பணிந்து வேலைக்காரனைப் போல் வாழ்ந்தார்கள். கவலைப்பட வில்லை. வெட்கப்படவில்லை. எவ்வாறு அப்படி இருக்க முடிந்தது? அப்போது அவர்களின் புரோகிதர் தௌம்யர் அடங்கி இருக்க வேண்டி வந்தால் கூட மன தைரியத்தை இழக்காமல் வெற்றிகரமாக அந்தந்த பாத்திரங்களில் எவ்வாறு வாழ வேண்டுமென்பதை பாண்டவர்களுக்கு எடுத்துக் கூறினார்.

அந்த சந்தர்பத்தில் வியாச மகரிஷி எழுதிய நாற்பது செய்யுட்களின் சாராம்சம் இது:-

*ஒரு அரசன் வேறொரு அரசனிடம் பணிபுரிவது கஷ்டம் என்பதை உணர வேண்டும். அதனை இலேசாக நினைக்கக் கூடாது.

*தன் யஜமானரான அரசனைச் சென்று தரிசிபப்தற்கு முன் துவார பாலகர்களின் அனுமதி பெற வேண்டும்.

*எத்தகைய சிறிய செயலானாலும் அரசனிடம் தெரிவித்து விட்டு செய்ய வேண்டும்.

*அரசனின் முன்னால் உத்தரவு வரும் வரை நின்று கொண்டே இருக்க வேண்டும்.

*அந்தப்புர பெண்களோடு அனாவசியமாக பேசக் கூடாது.

*அரசன் கேட்காமல் எந்தக் கடமை பற்றியும் அறிவுரை செய்யக்கூடாது.

*அரசனுக்குப் பிடிகாதவர்களோடு சிநேகம் கூடாது.

*செய்யும் பணியில் அலட்சியம், கர்வம், கோபம் இருக்கக் கூடாது.

*யஜமானரின் பேச்சை கௌரவித்தபடி பதிலளிக்க வேண்டும்.

*அரசனின் எதிரில் உயரமான ஆசனத்தில் அமரக் கூடாது.

*அரசனுக்குப் பிடிக்காத வேலைகளை செய்யக் கூடாது.

*அரசனிடம் கை நீட்டுவது, காலை நீட்டி அமர்வது, கொட்டாவி விடுவது, துப்புவது போன்ற சேஷ்டைகளை செய்யக் கூடாது.

*அரசனுக்குச் சமமான நடை, உடை, பாவனை கூடாது.

*அரச தனத்தை சிறிதும் களவாடக் கூடாது.

*அரசன் அளித்த உடைகள், ஆபரணங்களை அடிக்கடி அணிந்து காட்டவேண்டும். தான் இருக்கும் சூழலைப் பொறுத்து நடத்தை இருக்க வேன்டுமே தவிர வயது, கல்வித் தகுதி இவற்றைப் பொறுத்து அல்ல.

*யஜமானரின் எதிரில் பணிந்து நடப்பது முக்கியம், உயரதிகாரிகளின் எதிரில் கண்ணாடியில் தெரியும் மலை போல் இருப்பது உத்தமம். நமக்கு உகந்ததாக இல்லாத இடத்தில் அலட்டல் தகாது.

தலைவன் எப்போதும் ஏக சக்கிராதிபதியாக இருக்க முடியாது. தன்னை விட வயதில் சிறிய தலைவனோடு சேர்ந்து பணிபுரியவேண்டி வரலாம். அரசாங்கப் பதவி நிறைவடைந்த பின், ஒரு சாமானியத் தொண்டனாக, சாதாரண மனிதனாக வாழவேண்டி வந்தால் வாழத் தெரிய வேண்டும். உயர உயரப் பறந்தாலும் கால் பூமியில் நிற்கவேண்டும் என்ற எண்ணம் மனதில் நிலைபெற்றிருந்தால்தான் தலைவன் பதவியோடு தொடர்பின்றி பண்பாட்டோடு நடந்து கொள்வான்.

பன்னிரண்டு ஆண்டுகளை வன வாசத்தில் கழித்த பாண்டவர்கள் பல நுட்பங்களைக் கற்றார்கள். நேரம் வந்த போது வீறு கொண்டு எழுந்தார்கள். பராக்கிரம் மிக்க தலைவர்களாக போற்றப்பட்டார்கள்.

சுபம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version