spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்விஜயபதம்; வேத மொழியின் வெற்றி வழிகள் (29): தலைமைப் பண்பு!

விஜயபதம்; வேத மொழியின் வெற்றி வழிகள் (29): தலைமைப் பண்பு!

- Advertisement -

விஜயபதம் – வேத மொழியின் வெற்றி வழிகள் – 29. Leadership
(சமஸ்கிருத இலக்கியம் அளிக்கும் தலைமைப் பண்புகள், அரசு தர்மங்கள், வெற்றிக்கான வழிமுறைகள்)

தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழில் ராஜி ரகுநாதன்

Leadership: கோபத்திற்கு அணையிட வேண்டும்!

ஒரு கிராமத்தில் கோவிலருகில் ஒரு பாம்பு வசித்து வந்தது. யாத்ரீகர்களுக்கு அச்ச்சமேற்படும் விதமாக நடந்து கொண்டது. ஒருவரைக் கடித்து விட்டது. தீர்த்தயாத்திரை செய்தபடி அந்த கிராமத்துக்கு வந்த ஒரு சாதுவிடம் அந்த கிராமத்தினர் சர்ப்ப பயம் குறித்து விவரித்தனர். சாது தன் தவ வலிமையால் அந்த பாம்பை அழைத்து புத்தி கூறினார். யாரையும் துன்புறுத்தாமல் வாழும்படி பணித்தார். பாம்பு சம்மதித்தது. மீண்டும் திரும்பி வந்த சாது அந்த பாம்பைக் கண்டார். உடலெங்கும் காயங்களோடு மெலிந்து கிடந்தது பாம்பு. “சுவாமி! நீங்கள் கூறியபடியே அஹிம்சை விரதம் கடைப்பிடித்து வருகிறேன். ஆனால் என்னை அனைவரும் கல்லால் அடித்து துன்புறுத்துகின்றனர்” என்று தன் வருத்தத்தை வெளியிட்டது. “யாரையும் கடிக்க வேண்டாம் என்றுதானே உன்னிடம் கூறினேன்! தற்காப்புக்காக புஸ்ஸென்று பயமுறுத்த வேண்டாம் என்று கூறவிலையே! கோபம் வருவது போல் நடி” என்றார் சாது.


ராமனுக்கு வந்த கோபம்:
ஸ்ரீராமனின் குணங்களில் ‘ஜிதக்ரோத:’ – கோபத்தை வென்றவன் என்பதும் ஒன்று. அதே நேரம் கோபம் வந்தால் தேவர்களையே நடுங்கச் செய்பவன் என்றும் கூறுகிறார் வால்மீகி. இதன் பொருள்… தர்மத்திற்கு தீங்கு விளைவிக்கும் அதர்ம சக்திகளிடம் கோபத்தைக் காட்டவேண்டும். வெறுப்பினால் எழும் கோபத்தை வெல்ல வேண்டும்.

ராவணன் சீதையை அபகரித்தபின் ஸ்ரீராமன் வனமெங்கும் சீதையைத் தேடித் துயருற்றான். சீதைக்கு யார் என்ன தீங்கு செய்தனரோ என்றெண்ணி ஆத்திரமடைந்தான். “சீதையை பத்திரமாக் என்னிடம் ஒப்படைக்காவிட்டால் இந்தக் கணமே என் பராக்கிரமத்தை காண்பிப்பேன்” என்று கோபத்தை வெளிப்படுத்தினான். “இப்போதே பாணத்தைச் செலுத்தி யக்ஷர், கந்தர்வர், ராட்சசர், மானுடர் அனைவரையும் அழிப்பேன். சூரியனும் சந்திரனும் உதயமாகாதபடி செய்வேன். வாயுவை ஸ்தம்பிக்கச் செய்வேன். நதிளையும் கடலையும் வற்றச் செய்வேன். மூவுலங்களாக உழலும் இந்த ஜகத்தினை அழித்திடுவேன்” என்று கோபத்தோடு உக்கிர மூர்த்தியாகப் பகர்ந்தான் ராமன்.

“புலனடக்கம் கொண்டவனாக, தயா மூர்த்தியாக விளங்குவதால் தேவர்கள் என்னை பராக்கிரமம் அற்றவனென்று நினைக்கிறார்கள்” என்கிறான் ராமன் மானுட இயல்பான கோபம் ராமனை வருத்தியது. பூமித் தாய்க்குக் சமமான பொறுமை கொண்டவனுக்கு காலாக்னிக்குச் சமமான கோபம் வந்தது. அப்படிப்பட்ட கோபத்தைப் பார்த்து சமுத்திர ராஜன் நடுநடுங்கினான். சுக்ரீவன் வெடவெடத்தான். அதற்குமுன் பலமுறை தனக்கு வந்த கோபத்தைக் கட்டுப்படுத்திய அண்ணனான ராமனின் கோபத்தைக் குளிர்விக்கும் பணி லடசுமணம் மேல் விழுந்தது.

ராமனின் கோபத்தை அணைப்பதற்கு இலட்சுமணம் மிக ஆறுதலாகப் பேசினான் இதனை வால்மீகி அழகாக வர்ணிக்கிறார். தேவேந்திரன் யயாதியை சுவர்க லோகத்திலிருந்து கீழே தள்ளிய கதையையும், வசிஷ்ட மகரிஷியின் நூறு புதல்வர்கள் ஒரே நாளில் விசுவாமித்திரரால் கொல்லப்பட்ட கதையையும் நினைவுபடுத்தினான் லட்சுமணன்.

“எல்லாம் கடவுளின் நிர்ணயத்தின்படிதான் நடக்கும் என்ற நினைவு உன் துயரத்தை விலக்கும். மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திக்க வைக்கும்” என்று ஆறுதாலாகப் பேசினான் இலட்சுமணன்.

சுமஹாந்த்யபி பூதானி தேவாஸ்ச புருஷர்ஷப !
ந தைவஸ்ய ப்ரமுஞ்சந்தி சர்வபூதானி தேஹின: !!
(ராமாயணம் ஆரண்ய காண்டம் 66-11)

பொருள்:- மனிதருள் சிறந்தவனே! மிக உயர்ந்தவையான பஞ்ச பூதங்கள், தேவர்கள், அனைத்துயிர்கள், உடல் படைத்தவர் யாரானாலும் தெய்வ சக்தியிடமிருந்து தப்பிக்க இயலாது.

நல்ல சொல் யார் கூறினாலும் ஏற்கும் குணமுடைய ராமன் தான் பெரியவன் என்ற அகந்தையின்றி இலட்சுமணன் கூறிய சொற்களை உணர்ந்தான். கோபத்தை நீக்கினான்.

லட்சுமணனுக்குக் கோபம் வந்தது:-
அதற்கு முன்பு அயோத்தியில் இருந்த போது லட்சுமணனுக்கு மிகுந்த கோபம் வந்தது. ராமனின் வனவாசச் செய்தியைக் கேட்ட கௌசல்யையின் துயரத்தைப் பார்த்து தாங்க இயலாமல் தந்தை மேல் தன் ஆத்திரத்தைக் காட்டினான். “ராமனை அநியாயமாக காரணமின்றி காட்டுக்கு அனுப்பத் துணிந்த தந்தை தசரதர் நமக்கு எதிரி போல் நடந்து கொள்கிறார். அவரை சிறை பிடிப்பேன்! தேவையானால் வதைப்பேன்! ராமனை அரசனாக்குவேன்!” என்று கொதித்தெழுந்தான். அதற்கு பதிலாக ராமன் அன்போடு லட்சுமணனிடம் பேசினான். வனவாசத்திற்கான காரணம் தெய்வ நிர்ணயமே என்றான்.

கஸ்ச தைவேன சௌமித்ரோ யொத்துமுத்ஸஹதே புமான் !
யஸ்ய ந க்ரஹணம் கிஞ்சித் கர்மணோன்யத்ர த்ருஸ்யதே !!
(அயோத்யா காண்டம் 22-21)

பொருள்:- லட்சுமணா! தெய்வம் ஆட்டுவிக்கும்படி நடப்பதைத் தவிர அதனைத் தடுப்பதற்கு வேறு வழியே இல்லை. தெய்வத்தை எதிர்ப்பது யாரால் இயலும்?

சுகம், துக்கம், பயம், குரோதம், லாபம், நஷ்டம் இவையெல்லாம் கடவுளின் தூண்டுதலால் நடப்பவை. தொடங்கிய பணிக்குத் தடையாக யூகிக்க இயலாத விதத்தில் திடீரென்று ஏதாவது நடந்தால் அது தெய்வ சங்கல்பம் என்றறிய வேண்டும்… என்று ஆறுதல் கூறினான் ராமன். லட்சுமணன் அமைதியானான். கோபத்தை விடுத்தான்.

துயரத்தில் கோபம் ஏற்படும்போது நமக்கு ஆறுதலளித்து கோபத்தைக் குறைக்கும் நண்பன் அருகிலிருப்பது மிகவும் அவசியம். இல்லாவிடில் பல அனர்த்தங்கள் நேரும். கோபத்தில் இருக்கும் தலைவன் தனக்கு நம்பிக்கையுள்ளவர்களோடு, தன் நலன் விரும்புபவரோடு தன் துயரத்தைப் பகிர்ந்து கொண்டு ஆலோசனை பெறவேண்டும். கோபத்தால் சிந்தனைத் திறன் குறைகிறது. கோபத்தில் இருக்கும் போது கடிதம் எழுதுவது, செய்தி அனுப்புவது போன்றவற்றால் பிரச்னை தீவிரமாகும். கவனமாக இருக்க வேண்டும்.


தலைவன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்!
எரியும் அக்னியை நீரால் தணிக்கலாம். ஏற்பட்ட கோபத்தை யார் தணித்துக் கொள்வாரோ அவரே சிறந்த தலைவர். கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளாவிட்டால் வரும் ஆபத்துகளை ஹனுமான் ராமாயணத்தில் விவரிக்கிறார்.

க்ருத்த: பாபம் ந குர்யாத்க: க்ருத்தோ ஹன்யாத்குரூனபி !
க்ருத்த: பருஷயா வாசா நர: சாதூனதிக்ஷிபேத் !!
(சுந்தரகாண்டம் 55-4)

பொருள்:- கோபமுள்ளவன் எவ்விதமான பாவத்தையும் செய்யத் துணிவான் கோபித்தவன் பெரியவர்கள் என்று கூட பாராமல் அவர்களைக் கொல்வான். கோபித்த மனிதன் சத் புருஷர்களைக் கூட கடுமையான சொற்களால் தூஷிப்பான்.

வாச்யா வாச்யம் ப்ரகுபிதோ ந விஜாநாதி கர்ஹிசித் !
நாகார்யமஸ்தி க்ருத்தஸ்ய நாவாச்யம் வித்யதே க்வசித் !!
(சுந்தர காண்டம் 55-5)

பொருள்:- அளவுக்கதிகமாக கோபம் கொண்டவன் என்ன பேசலாம் என்ன பேசக் கூடாது எனபதை அறியமாட்டான். கோபத்திலிருப்பவன் எதைச் செய்யலாம் எதைச் செய்யக் கூடாது என்ற விவேகத்தை இழந்து விடுவான்.

அதனால் நல்லவர்கள் பொறுமையோடு இருப்பார்கள். பாம்பு தன் தோலை விட்டுவிடுவதைப் போல் தன்னிடம் ஏற்பட்ட கோபத்தை விட்டு விட வேண்டும் என்று ஹனுமான் கூறுகிறான்.

கோபம் கொள்பவர்கள் பலவிதம்! கோபம் எப்போது ஏன் வருகிறது? யாராவது நாம் நினைத்தபடி நடந்து கொள்ளாவிட்டலோ, நினைத்த திட்டதில் நஷ்டம் நேர்ந்தாலோ, தனக்கு எதிராக யாரவது செயல் புரிந்தாலோ கோபம் வருகிறது. தவறு புரிந்தவர்களைத் திருத்துவதற்காக உத்தமர்கள் கோபத்தை வெளிக்கட்டுவர். அவர்களுக்கு கோபம் வந்தாலும் அது ஒரு காண நேரம் மட்டுமே இருந்து மறைந்து விடும்.

கோபம் எத்தனை நேரம் இருக்கும் என்ன்பதைப் பொறுத்து மனிதர்களை வகை பிரிக்கலாம்.

உத்தமே து க்ஷணம் கோபோ
மத்யமே கடிகாத்வயம் !
அதமே ஸ்யாதஹோராத்ரம்
பாபிஷ்டே மரணாந்தகம் !!
(போஜ சரித்ரம்)

பொருள்:- உத்தமர்களுக்கு கோபம் வந்தால் கண நேரம் மட்டுமே இருந்து மறைந்து விடும். மத்திமர்களுக்கு வந்த கோபம் இரண்டு கடிகைகள் இருக்கும். (ஒரு கடியை =24 நிமிடங்கள்). அதமர்களுக்கு வரும் கோபம் ஒரு இரவும் ஒரு பகலும் இருக்கும். இனி வாழ்நாள் முழுவதும் மனதில் கோபத்தை வைத்திருப்பவன் மகாபாவி, அசுர குணம் கொண்டவன்.


யார் உண்மையான பகைவன்?

தர்மபுத்திரனை யக்ஷன் கேட்ட கேள்வி:
க: சத்ருதர்ஜய: – மனிதனால் வெல்ல முடியாத பகைவன் யார்?

யுதிஷ்டிரனின் பதில் – க்ரோத: சதுர்ஜய: – குரோதமே வெல்ல முடியாத எதிரி.

கோபம் வந்தாற்போல் நடிக்க வேண்டும். கோபத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். கோபத்தை அடக்கும் பயிற்சி மேற்கொண்டு உத்தமர்களாக வாழ முயற்சிக்க வேண்டும்.

சுபம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe