கிருஷ்ண ஜெயந்தி நாளை விமரிசையாக உலகமெங்கும் கொண்டாடப்படும் வேளையில் கிருஷ்ணருக்கு பிடித்தமான பலகாரங்கள் பற்றி காண்போம்.
கிருஷ்ணன் பிறந்த தினத்தை நாம் கிருஷ்ணஜெயந்தியாக கொண்டாடுகிறோம்.குழந்தையான கண்ணனை நேசிக்காதவர்கள் உண்டா ? அவன் அழகும் குறும்பும் கதைகளில் கேட்கும் போதே நாமும் அவன் வயதொத்த சிறாராக ஆசை மேலிடும். ஒவ்வொரு வீட்டிலும் பிறக்கும் மழலை செல்வம் கண்ணனாக இருக்கவேண்டும் என்ற அவா எழும்பும். நம் வீட்டில் இருக்கும் குழந்தையை கண்ணனாகவே கொஞ்சி மகிழுவோம்.
இந்த ஆசையின் வெளிப்பாடு தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று நம் வீட்டு பிள்ளை செல்வங்களுக்கு கண்ணன் வேடமிட்டு அழகு பார்க்கும் ஒன்றாக வெளிப்படுகிறது.
கண்ணனுக்கு வெண்ணெய், பால் மிகவும் பிடிக்கும். அவனுக்கு பிடிக்கும் இதை அவனுக்கு படைத்து மகிழ்வோம். அவல் இதுதானே ஏழை குசேலனை செல்வந்தராக மாற்றியது. அவலில் செய்த பண்டங்களோ, அல்லது வெல்லமும் அவலும் கலந்தோ படைக்கலாம். பாலில் செய்த இனிப்புக்கள், வெண்ணெய்யில் செய்தவை என படைக்கலாம்.
கொய்யாபழம், நாவல் பழம் இதுவும் கண்ணனுக்கு பிடித்த பழம். புளியங்காய் பிடித்த காயாகவும் கருதப்படுகிறது.
உன்னி அப்பம் என்று அழைக்கப்படும் சிறிய அப்பம் வெல்லச்சீடை,தட்டை, தேங்காய் சீடை, அதிரசம், உப்புச்சீடை, வடை, காப்பரிசி போன்ற பலகார வகைகள் செய்து கிருஷ்ணனை வணங்கி அருள் பெறுகிறார்கள்.