ஸ்ரீ சுவாமி மேல அரசாழ்வார் தர்ம உறுப்பினர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட செங்கோட்டை அன்னதானக் கமிட்டி சார்பில், அட்சய திருதியை, மஹாவியதி பாதம் , சாரதா நவராத்திரியில் சுஹாசினி பூஜை ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றது.
அன்னதானம் சில பொறுப்பேற்பாளர்களைக் கொண்டு நடத்தப் படுகிறது. தலைவராக காசிநாராயணன், செயலாளராக வெங்கடேஸ்வரன், பொருளாளராக ஸ்ரீனிவாசன் ஆகியோரைக் கொண்டு இந்த கமிட்டி இயங்கி வருகிறது.
வருடந்தோறும் சாரதா நவராத்திரியின் போது சுஹாசினி பூஜை, சிலரின் பொறுப்பேற்பில் சிறப்பாக நடத்தப் பட்டு வருகிறது. இதில் 108 சுமங்கலிப் பெண்களுக்கு பூஜை செய்து, உணவிட்டு அவர்களுக்கு புடவை பூ மஞ்சள், குங்குமம், சீப்பு, கண்ணாடி போன்ற மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்படுகின்றனர்.
10 வது ஆண்டாக நடைபெறும் இந்த பூஜை, கடந்த அக்.2ம் தேதி, புதன்கிழமை நடைபெற்றது. அதற்கு முந்தைய நாள் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி அளவில் தேவி மாஹாத்மியம் பாராயணம் நடைபெற்றது! இதில் செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த பெண்மணிகள் கலந்து கொண்டு தேவிமாஹாத்மியம் பாராயணம் செய்தனர்.
புதன்கிழமை நடை பெற்ற சுஹாசினி பூஜையில் தலா 9 பேர் எனக் கொண்டு, 12 தம்பதிகள் சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் உணவு பரிமாறி உபசரித்தனர். இதில் செங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டுமின்றி, தென்காசி, மேலகரம், குற்றாலம், இலத்தூர், ஆய்க்குடி, மேலப்பாவூர், இலஞ்சி, ஆழ்வார்குறிச்சி, இரவணசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சாம்பவர்வடகரை உள்ளிட்ட பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.