பேயாழ்வார் திருநக்ஷத்ரம் ஐப்பசி சதயம் இன்று!
ஸ்ரீ பேயாழ்வார் த்வாபர யுக கலியுக சந்தி, சித்தார்த்தி வருஷத்தில் சுக்ல பக்ஷம் தசமி திதி வியாழக் கிழமை திருசதயம் நக்ஷத்ரத்தில் ஸ்ரீ நந்தகம் என்னும் திருவாளின் அம்சமாய், திருமயிலை ஆதிகேசவப் பெருமாள் கோவில் கிணற்றில் செவ்வரளி மலரில் திரு அவதாரம்.
பேயாழ்வார் அவதாரம் செய்தருளிய கிணற்றில் இன்றும் உத்ஸவம் நடைபெறுகிறது. மயிலையில் உள்ள இரு பெருமாள் கோயில்களான கேசவப் பெருமாள், மாதவ பெருமாள் கோயில்களில் பேயாழ்வார் அவதார உத்ஸவம் விமர்சையாக நடைபெறுகிறது.
பேயாழ்வார் தனியன்
த்ருஷ்ட்வா ஹ்ருஷ்டம் ததா விஷ்ணும் ரமயா மயிலாதிபம் |
கூபே ரக்தோத்பலே ஜாதம் மஹதாஹ்வயம் ஆச்ரயே ||
சீராரும் மாடத் திருக் கோவலூர் அதனுள்
காரார் கரு முகிலைக் காணப் புக்கு – ஒராத்
திருக் கண்டேன் என்று உரைத்த சீரான் கழலே
உரைக் கண்டாய் நெஞ்சே யுகந்து
- குருகை காவல் அப்பன் அருளிச் செய்த மூன்றாம் திருவந்தாதி தனியன்
உபய விபூதி உக்தன் என்று அனுசந்தித்தார் முதல் ஆழ்வாரான பொய்கை ஆழ்வார்.
அதுக்கு வாசக சப்தம் நாராயண சப்தம் என்றார் பூத்ததாழ்வார்.
அதுக்கு ஸ்ரீ சப்தம் கூட்டிக் கொள்ள வேணும் என்கிறார் இவ்வாழ்வார்.
திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று -1-
சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்
தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் -காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்
தேனமரும் பூ மேல் திரு -100-
ஸ்ரீ எம்பெருமான் புகலிடமாவது, ஸ்ரீ பெரிய பிராட்டியார் திருவடிகளை என்றும் புகலிடமாகப் பற்றினாருக்கு என்று தலை கட்டி அருளிகிறார்.
பேயாழ்வார் வாழி திருநாமம்
திருக்கண்டேன் என நூறும் செப்பினான் வாழியே
சிறந்த ஐப்பசியில் சதயம் செனித்த வள்ளல் வாழியே
மருக்கமழும் மயிலை நகர் வாழ வந்தோன் வாழியே
மலர்க்கு அரிய நெய்தல் தனில் வந்து உதித்தான் வாழியே
நெருக்கிடவே இடைகழியில் நின்ற செல்வன் வாழியே
நேமிசங்கன் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே
பெருக்கமுடன் திருமழிசைப்பிரான் தொழுவோன் வாழியே
பேயாழ்வார் தாளிணை இப்பெருநிலத்தில் வாழியே
பேயாழ்வார் திருவடிகளே சரணம்