ஒரு ஊரில் பரம வைஷ்ணவ பக்தன் இருந்தான். அவனுக்கு பத்ரி நாராயணனை சேவிக்க ஆசை. அந்தக் காலத்தில் நடந்தே செல்ல வேண்டும்; ஆகையால் பயணச் செலவுக்கு தினமும் உண்டியலில் காசு சேமிக்க ஆரம்பித்தான்!
இதற்கிடையில் அவனுக்கு திருமண ஏற்பாடு நடந்தது. திருமண செலவுக்கு உண்டியல் பணம் உதவியது! பிறகு மீண்டும் அவன் பாத யாத்திரை செல்ல, உண்டியலில் பணம் சேமிக்க ஆரம்பித்தான்!
அதற்குள் அவனுக்கு மகன் பிறந்தான்! மறுபடியும் உண்டியல் உதவியது! பிறகு ஒரு பிள்ளை! அதற்கும் அதே உண்டியல்!
பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி, திருமணம் பேரன், பேத்தி இப்படியே காலம் கழிந்தது..!
தன் கடமை முடிந்தது என எண்ணிய அவர் இம்முறை உண்டியல் பணத்தை எடுத்து கொண்டு கிளம்பினார். ஒரு வழியாக பத்ரி நாராயணனை சேவிக்க பல மாதங்களாக நடந்து, பத்ரிநாத் வந்தடைந்தார்!
அந்த முதியவர் இவர் கோவில் வாசலில் வந்து நிற்க சரியாக… பட்டர் நடை சாத்த சரியாக இருந்தது!
பட்டரோ இனி ஆறு மாதங்களுக்குப் பிறகு நடை திறக்கப்படும் என கூற, முதியவர் அதிர்ந்தார்! பட்டரின் கால்களைப் பிடித்து கொண்டு அழ ஆரம்பித்தார், முதியவர்.
அய்யா என் வாழ்வின் இலட்சியம் இது! ஒரு முறை அவனை சேவித்து விடுகிறேன்… தாங்கள் நடை திறந்தால் என கண்ணீர் விட்டு அழுதார்!
பட்டரோ அசைவதாக இல்லை மூடிய நடை திறக்கப்படாது என கூறி நகர்ந்தார்! இவரோ தன் தலை விதி எண்ணி வருந்தினார்!
இனி மேல் எந்தக் காலத்தில் நான் மீண்டும் நடந்து வந்து, இந்த பத்ரிநாதனை சேவிக்க என அழுது கொண்டு புலம்பினார்!பட்டரோ அய்யா மலையை விட்டு அனைவரும் இறங்கப் போகிறோம், வாரும் எனக் கூற… கிழவனோ, நீங்க போங்க நான் சிறிது நேரம் அமர்ந்து விட்டாவது வருகிறேன் எனக் கூறினார்!
சரி என அனைவரும் இறங்க சிறிது நேரத்தில் இருட்டத் தொடங்கியது! அப்போது, ஒரு சிறுவன் அங்கு வருகிறான்.
அவன் அந்த முதியவரிடம், ‘ஏ தாத்தா! இங்க என்ன தனிமையில் அமர்ந்து உள்ளீர்’ எனக் கேட்க… அவரோ அந்தச் சிறுவனிடம் தன் வயிற்றெறிச்சலைக் கூறி அழுகிறார்!
இதைக் கேட்ட சிறுவனோ சரி வாரும்.. அருகில்தான் நான் தங்கியுள்ள குகை உள்ளது. அங்கு வந்து உணவருந்தி பிறகு பேசிக் கொள்ளலாம் எனக் கூறி அவரை அழைத்துச் சென்றான்.
அவருக்கு உணவளித்து தாத்தா உறங்கு! எல்லாம் நல்லதாகவே நடக்கும் எனக் கூறிச் சென்றான்!
முதியவரும் நாரயணா கோவிந்தா.. என்று பக்தியோடு நாம ஸ்மரணம் செய்து விட்டு உறங்கினார்!
பொழுது விடிந்தது! கிழவனோ குகையை விட்டு வெளியே வந்தால், கோவில் திறந்துள்ளது! கூட்டமோ ஏராளம்! கிழவனுக்கோ அதிர்ச்சி…
என்னடா இது! பட்டர் ஆறு மாதம் ஆகும் என்றார்; நடை திறக்கப் பட்டு உள்ளதே என நேராக பட்டரிடம் சென்று, ‘ஏ சாமி கோவில் திறக்கப்படாது என சொன்னீங்க! இப்ப மறுநாளே திறந்து இருக்கீங்க’ன்னு கேட்க…
பட்டரோ யோசித்தார்! இந்த முதியவர் ஆறு மாதங்களுக்கு முன்பு நடை சாத்திய நேரம் அல்லவா வந்தவர் என நினைத்து…
சரி அய்யா முதலில் நாரயணனை வணங்கி விட்டு வா எனக் கூற… இவரும் உள்ளே சென்றார்!
அங்கே நாரயணன் அந்தச் சிறுவனாகத் தந்த காட்சி இவரை மெய் சிலிர்க்க வைத்தது!
ஆறு மாதப் பொழுதை அரை நாள் பொழுதாக மாற்றிய வள்ளலே! அடியார் பொருட்டு நீ ஆடாத நாடகம்தான் என்னவோ எம் வேந்தே… எனப் பரவசத்தில் ஆடினார்.
ராம் க்ருஷ்ண ஹரி பாண்டு ரங்க ஹரி!
- ஸ்ரீவைஷ்ணவிஸம் குழு