Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் ஸ்ரீரங்கம் அத்யயன உத்ஸவம்… ராப்பத்து 6ம் நாளில்!

ஸ்ரீரங்கம் அத்யயன உத்ஸவம்… ராப்பத்து 6ம் நாளில்!

ranganatha ekadasi

பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ.நம்பெருமாள் திருஅத்யயன உற்சவத்தின் இராப்பத்தின் ஆறாம் நாளான இன்று ( 11.01.2020 ) பகல் ஒரு மணிக்கு மேல், பரமபத வாசலிலிருந்து எழுந்தருளி, சந்திரபுஷ்கரணி, மற்றும் மணல் வெளி பகுதியில் வழி நடை உபயங்கள் கண்டருளி, மணல் வெளியில் ஸ்ரீ.நம்மாழ்வார், ஸ்ரீ.திருமங்கை ஆழ்வார், ஸ்ரீ.இராமாநுசருக்கு மரியாதைகள் ஆகி, பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் மணல் வெளியில் எழுந்தருளினார்.

அங்கு எல்லா ஆழ்வார்களுக்கும், ஆச்சாரியர்களுக்கும் மாலை, ஸ்ரீ.சடகோபன் ஸாதிக்கப் பெற்று மரியாதைகள் ஆகி பின்னர் மணல் வெளியில் பத்தி உலாத்தல் ஆகி, புறப்பாடு கண்டருளி திருமாமணி மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

“ உந்தி மேல் நான்முகனைப் படைத்தான் * உலகு உண்டவன்
எந்தை பெம்மான் * இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால் * “ என்றும்,
“கைம்மான மழகளிற்றைக் * கடல் கிடந்த கருமணியை *
மைம்மான மரதகத்தை * மறை உரைத்த திருமாலை *
எம்மானை எனக்கு என்றும் இனியானைப் * பனிகாத்த
அம்மானை * யான் கண்டது * அணி நீர் தென்னரங்கத்தே * “ என்றும்,

“ பண்டை நான் மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் * பதங்களின் பொருளும் *
பிண்டமாய் விரிந்த பிறங்கொளி அனலும் * பெருகிய புனலொடு நிலனும் *
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும் *ஏழுமாமலைகளும் விசும்பும் *
அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான் * அரங்கமா நகர் அமர்ந்தானே *” என்றும்
“ ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி * மற்றவர்க்கு இன்னருள் சுரந்து*

மாழை மான் மட நோக்கி உன் தோழி * உம்பி எம்பி என்று ஒழிந்திலை * உகந்து
தோழன் நீ எனக்கு இங்கொழி என்ற சொற்கள் வந்து * அடியேன் மனத்து இருந்திட*
ஆழி வண்ண , நின் அடியினை அடைந்தேன் * அணி பொழில் திருவரங்கத்தம்மானே * “ என்றும்
எப்படி எல்லாம் ஸ்ரீ.ரங்கநாதன் அருள் பாலிக்கின்றான் என்பதை ஐந்து திருமொழிகளின் ஐம்பது பாசுரங்களில் ஸ்ரீ.திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்துள்ளபடி , பத்தர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் ஸ்ரீ.நம்பெருமாளை
அற்புத ஸேவையில்,

ஸ்ரீரங்கத்தில், இராப்பத்து ஆறாம் நாளான இன்று (11.01.2020 ) இன்று ஸ்ரீ.நம்மாழ்வாரும், ஸ்ரீ.திருமங்கை ஆழ்வாரும், ஸ்ரீ.இராமானுசரும் மணல் வெளியில் எழுந்தருளியிருந்தனர். ஸ்ரீரங்கராஜஸ்தவம் அருளிச் செயல் கோஷ்டியாகிக் கொண்டிருந்தனர்.

ஆயிரங்கால் மண்டபத்து மணல் வெளியில் மற்றைய ஆழ்வார்களும், ஆச்சாரியர்களும் எழுந்தருளியிருந்தனர்.

ஸ்ரீ.நம்பெருமாள் பரமபதவாசல் வழியாக புறப்பாடு கண்டருளி, ஆயிரங்கால் மண்டபத்து மணல் வெளியில் எல்லா ஆழ்வார்களுக்கும், ஆச்சாரியர்களுக்கும் மாலை , மரியாதை அருளினார்.

  • ராகவன் நெம்மேலி விஜயராகவாச்சாரி

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version