முருகப் பெருமானின் அனைத்து அறுபடை வீடுகளிலும் தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது.
இந்த திருவிழாவை முன்னிட்டு, தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் மக்கள் வந்து பால் காவடி, பன்னீர் காவடி உள்ளிட்ட காவடிகளை எடுத்து பாதயாத்திரையாகக் கோவிலை வந்த வண்ணம் இருந்தனர்.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா கடந்த 2 ஆம் தேதி பழனி முருகன் கோவிலில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோவிலில் காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றப் பட்டதில் இருந்து முருகப் பெருமான் வெள்ளி, தேவயானையுடன் பெரியநாயகியம்மன் கோயில் மண்டபத்தில் வெள்ளிக் காமதேனு, தந்தசப்பரம் உள்ளிட்ட பல வகையான வாகனங்களில் உலா வந்தார். இதனையடுத்து நேற்று பழனியில் திருக்கல்யாண வைபவமும், இரவு வெள்ளித்தேர் உலாவும் நடந்தது.
இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் அனைத்து அறுபடை வீடுகளிலும் இன்று நடைபெற உள்ளது. இதனைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டு வந்து கொண்டு இருக்கின்றனர்.
இன்று நண்பகல் 12 மணிக்குப் பழனி முருகன் கோவிலில் உள்ள பெரியநாயகியம்மன் கோயில் தேரடியில் தேரோட்டமும் மாலை 4 மணிக்குத் தைப்பூச தேரோட்டமும் நடைபெறும். இதன் காரணமாகத் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமி மலை திருத்தணி மற்றும் பழமுதிர்சோலை ஆகிய அறுபடை வீடுகளும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
வெளிநாடுகளிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மலேசியாவில் பத்துமலை முருகன் கோவிலில் லட்சக்கணக்கான மக்கள் இன்று தரிசனம் செய்து வருகின்றனர்.
தைப்பூசத்தையொட்டி, நெல்லை, குமரி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிருந்து காவடி எடுத்து, வேல்குத்தி பாதயாத்திரையாக வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.