ஒலிக்கின்ற சிறுமணிகளின் இனிய ஸ்வரங்களால் மகிழ்வூட்டுபவர். தாண்டவ நடன அசைவுகளில் பாதத் தாமரைகளால் தாளமிடுபவர். தொந்திமேல் படரும் நாக ஹாரத்துடன் மிளிர்பவர். ஈசானரின் புதல்வரான கணாதீசரைப் போற்றுவோம்.
புஜங்கள் மலர்க்கொடிகளென உயர்கின்ற காட்சியினால், வேரிலிருந்து அசைகின்ற கொடிகள் போல புருவங்கள் சுழல, தேவகன்னியர்களால் சாமரம் வீசி சேவிக்கப் படுபவர். ஈசானரின் புதல்வரான கணாதீசரைப் போற்றுவோம்.
– கணேச புஜங்கம் 1,5 (ஸ்ரீ சங்கரர்)
ஸ்ரீ கணேசர் மீது ஆசார்யர் பாடியுள்ள இரண்டு அழகிய துதிப்பாடல்களில் இனிய தாளகதியுடன் அமைந்த “முதாகராத்த மோதகம்” என்ற கணேச பஞ்சரத்னம் மிகவும் பிரபலமானது.
மற்றொன்று ஒன்பது பாடல்கள் கொண்ட இந்த கணேச புஜங்கம். இதில் முதலில் நர்த்தன கணபதியின் ஸ்வரூபமும், பின்பு யோகிகளின் தியானத்தில் வெளிப்படும் கணபதியின் சச்சிதானந்த ஸ்வரூபமும், இறுதியில் பரம்பொருளாகிய கணேச தத்துவமும் அழகுற வர்ணிக்கப் படுகின்றன. இசைஞானி இளைராஜா மிக அழகாக துல்லியமான சம்ஸ்கிருத உச்சரிப்புடன் இந்தத் துதியை இசையமைத்துப் பாடியுள்ளார். இங்கு கேட்கலாம் – https://youtu.be/DrjlGk9Xw78
படம்: கர்நாடகா நுக்கேஹள்ளி (ஹாசன் அருகில்) லக்ஷ்மி நரசிம்மர் ஆலய சுற்றில் உள்ள நர்த்தன கணபதி. 12ம் நூற்றாண்டு ஹொய்சளர் காலச் சிற்பம்.
குறிப்பாக இந்த சிற்பத்தில் துதிக்கையில் விளையாட்டாக தண்டோடு பறித்த ஒரு தாமரையை ஏந்தியிருப்பதாக வடித்திருப்பது மிக அழகு. யானைகள் குளத்தில் இறங்கி தாமரைகளைத் தண்டோடு பறிக்கும் காட்சி நமது பழைய இலக்கியங்களில் நெடுக வரும் ஒன்று.
மேற்கூறியதில் உள்ள முதல் சுலோகத்தில் “சலத்-தாண்ட³வோத்³த³ண்ட³வத்-பத்³ம-தாலம்” என்ற வரிக்கு தாண்டவ நடன அசைவுகளில் பாதத் தாமரைகளால் தாளமிடுபவர் என்ற பொருளே பொதுவாகத் தரப்படுகிறது. ஒரு புத்தகத்தில் மட்டும் ‘அசைகின்ற தாண்டவ சமயத்தில் உயர்த்திய தண்டுடன் கூடிய தாமரைகளின் தாளத்தை உடையவர்’ என்று பொருள் தரப்பட்டுள்ளது. அதாவது, துதிக்கையில் உள்ள தாமரையின் அசைவு தாளத்தைக் காட்டுவது போல இருக்கிறதாம். நல்ல ரசமான பொருள் தான்.
ரணத்க்ஷுத்³ரக⁴ண்டானினாதா³பி⁴ராமம்ʼ
சலத்தாண்ட³வோத்³த³ண்ட³வத்பத்³மதாலம் ।
லஸத்துந்தி³லாங்கோ³பரிவ்யாலஹாரம்ʼ
க³ணாதீ⁴ஶமீஶானஸூனும்ʼ தமீடே³ ॥1॥
உத³ஞ்சத்³பு⁴ஜாவல்லரீத்³ருʼஶ்யமூலோ –
ச்சலத்³பூ⁴லதாவிப்⁴ரமப்⁴ராஜத³க்ஷம் ।
மருத்ஸுந்த³ரீசாமரை꞉ ஸேவ்யமானம்ʼ
க³ணாதீ⁴ஶமீஶானஸூனும்ʼ தமீடே³ ॥5॥
रणत्क्षुद्रघण्टानिनादाभिरामं
चलत्ताण्डवोद्दण्डवत्पद्मतालम् ।
लसत्तुन्दिलाङ्गोपरिव्यालहारं
गणाधीशमीशानसूनुं तमीडे ॥१॥
उदञ्चद्भुजावल्लरीदृश्यमूलो –
च्चलद्भूलताविभ्रमभ्राजदक्षम् ।
मरुत्सुन्दरीचामरैः सेव्यमानं
गणाधीशमीशानसूनुं तमीडे ॥५॥
- ஜடாயு, பெங்களூர்