நல்ல வசதியுடன் ஒரு வயதான பணக்காரன் நோய்வாய்பட்டு மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருந்தான். மும்பையில் உள்ள ஒரு பிரபலமான பெரிய மருத்துவமனையில் அவன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான்.
அங்கிருந்த பெரிய மருத்துவ நிபுணர்களை கொண்டு தனக்கு வைத்தியம் பார்க்கச் சொன்னான். அவர்கள் அவனுக்கு பல்வேறு சோதனைகளை நடத்தி விட்டு முடிவில் அது குணப்படுத்த முடியாத வியாதி என்று கூறி விட்டார்கள்.
பிறகு அவன் கேட்டுக்கொண்டதன் பேரில் நாட்டில் உள்ள புகழ்பெற்ற பல மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டார்கள். அவர்களும் அவனுடைய நிலைமையை பரிசோதித்து பார்த்து விட்டு இந்த நோயை குணப்படுத்துவதற்கான மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று உறுதியுடன் கூறினார்கள்.
அவர்களுடைய பதிலை கேட்டு திருப்தி அடையாத அவன் லண்டனுக்கு சென்றான். அங்கேயும் இதே பதிலைத்தான் மருத்துவர்கள் அவனிடம் கூறினார்கள். டாக்டர்களின் வார்த்தைகளை நம்பாமல் அவன் அங்கிருந்து அமெரிக்காவிற்கு பறந்தான். கடைசியில் அவன் அங்கு இறந்து போனான்.
மும்பை டாக்டர்களின் வார்த்தைகளிலேயே அவன் நம்பிக்கை வைத்திருந்தால் தனது முடிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அவன் உறுதி செய்து கொண்டு நமது நாட்டிலேயே உயர்ந்த புண்ணிய ஸ்தலமான காசிக்குச் சென்று தனது கடைசி நாட்களை மன அமைதியுடன் இறைவனுடைய சிந்தனைகளில் அவன் கழித்து இருக்கலாம்.
இன்னும் சிறிது நேரத்தில் இறந்து விடுவோம் என்ற நிலைமையை சந்தித்தவர்கள் நான் மட்டும் இன்னும் சில நாட்கள் உயிரோடு இருந்தால் என்னுடைய விவகாரங்களை எல்லாம் நல்லபடியாக முடித்துக் கொண்டு நிம்மதியாக துணிந்து மரணிப்பேன் என்று நினைப்பார்கள். இருப்பினும் அவர்கள் நினைத்தவாறு ஒரு சில நாட்கள் உயிர் வாழ அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் அப்பொழுதும் அவர்கள் மற்றொரு தவணையை எதிர்பார்ப்பார்கள்.
ஒருவனுடைய உயிரைக் கவர்ந்து செல்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட அத்தருணத்தில் வரும் எமன் அவன் மேல் கருணை காட்டி அவன் செய்துகொண்டு இருக்கும் காரியத்தை முடித்துக் கொள்வதற்க்காக அவனுக்கு ஒரு நொடிப் பொழுது கூட கொடுத்து காத்திருப்பதில்லை என்று சொல்லப்படுகிறது. உலக வாழ்க்கையில் பற்று வைத்திருப்பவர்கள் ஒன்று தவிர்க்க முடியாத இந்த மரணத்தைக் குறித்து ஆராய்ந்து பார்க்க தவறி விடுகிறார்கள்.
அப்படி மரணத்தை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் போது தங்களால் இயன்ற அளவு பிரயத்தனம் செய்து எப்படியாவது தங்கள் உயிரைத் தக்கவைத்துக் கொள்ளவே விரும்புகிறார்கள் விவேக உள்ளவன் இறப்பைப் பற்றி சிந்தித்துப் பார்த்து எப்பொழுது வேண்டுமானாலும் அது தன்னை வந்தடையும் என்று எண்ணி வைராக்கியத்தை வளர்த்துக் கொள்வான் அப்படிப்பட்டவன் நிலையான பரம்பொருளை அடைவதற்காக தனது முயற்சிகளை மேற்கொள்வான்