ஒருவன் தன் நண்பனிடம் எனக்கு இனிப்பு பண்டங்கள் உண்பதில் பிரியம் என்று சொன்னான். அதனால் யார் கொடுத்தாலும் அவற்றை வாங்கிக் கொள்ள நான் தயங்குவதில்லை என்றும் கூறினான். தினமும் ஏதாவது ஒரு இனிப்பை சாப்பிட வேண்டும் என்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன் என்று பெருமையுடன் கூறினான்.
சில நாட்கள் சென்றன அவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டு படுத்த படுக்கையானார் அவனை பரிசோதித்த மருத்துவர் அவனுக்கு சர்க்கரை வியாதி என்றும் தொற்றுநோயால் காய்ச்சல் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதைப்பற்றி எல்லாம் கேள்விப்படாத அவனுடைய நண்பன் இனிப்பு பொட்டலத்துடன் அவன் வீட்டிற்கு வந்து உனக்காக இந்த இனிப்புக்களை வாங்கி வந்திருக்கிறேன் என்று அவனிடம் கொடுத்தான் இதைக் கேட்டு திடுக்கிட்ட அந்த நோயாளி ஐயோ இனிப்பா வேண்டவே வேண்டாம் அந்த பொட்டலத்தை இங்கிருந்து அப்புறப்படுத்து இனிப்பு பண்டங்களின் மீது ஆசை போய்விட்டது இனிமேல் அது எனக்கு விஷத்தைப் போன்றது என்று கூறினான்.
சந்தோஷத்தை கொடுத்த பொருள் மற்றொரு சமயத்தில் துக்கத்தை கொடுப்பதாக உள்ளதை இந்த கதையின் மூலம் அறியலாம். சந்தோஷத்தைக் கொடுக்கும் இனிப்பு என்றால் இயற்கையாகவே எப்பொழுதும் அவ்வாறே இருக்க வேண்டும் எப்போதுமே வெறுக்கக்கூடாது.
ஆனால் அவ்வாறு இன்றி சுகத்தின் விருப்பும் வெறுப்பும் மாறி இருப்பது அடிப்படையில் ஒருவனுடைய ஆசையின் விளைவு. ஒரு நோய் ஒருவனுடைய அடிப்படையை பலவீனப்படுத்துவது இல்லை உண்மையில் ஆராய்ந்து பார்த்தால் சுகம் கொடுப்பதாக நாம் நினைக்கும் எந்த பொருளும் ஆனந்தத்தைக் கொடுக்கும் தன்மை உடையது அல்ல. இப்படி பகுத்துப் பார்க்கும் பொழுது வைராக்கியம் ஏற்படுகிறது.
தந்தை தன் குழந்தையை கொஞ்சினார் முத்தமிடும்போது சொரசொரப்பான அவருடைய மீசையும் தாடியும் குழந்தையின் மிருதுவான முகத்தை முட்கள் போல் குத்தின. வலியால் குழந்தை அழத்தொடங்கியது. அதை சமாதானப்படுத்துவது கொண்டு அவர் மீண்டும் முத்தமிட்டு கொண்டே இருந்தார் அது மேலும் அதிகமாக கத்தியது.
ஆத்மாவின் பொருட்டே எல்லா பொருட்களும் ஒருவனுக்கு பிரியமானவை ஆக இருக்கின்றன பிரகதாரண்யக உபநிஷத் நமக்கு இதனை சொல்லிக் கொடுக்கிறது ஒருவன் மனைவியை நேசிக்கிறான் அவளுடைய சுகத்திற்காக மட்டுமல்ல அவள் தன்னுடைய மனைவி என்று நினைக்கிற காரணத்தினாலும் தன்னுடைய சந்தோஷத்தை அவளுடைய சந்தோஷத்தோடு சம்பந்தப்படுத்திக் கொள்வதாலும் தான் அவ்வாறு முடியும்.
எதுவரையில் ஒரு பொருள் ஒருவனுக்கு இன்பத்தை அளிக்குமோ அது வரையில் தான் அவனுக்கு அப்பொருளின் மீது விருப்பம் இருக்கும் அதே போல் துன்பம் தரும் வரையில் தான் பொருள் வெறுக்கப்படுகிறது ஒரே பொருள் எல்லா சமயங்களிலும் விரும்பபடுவதுமில்லை வெறுக்கப்படுவதும் இல்லை. சில நேரங்களில் நமக்கு முன்பு பிடிக்காமல் இருந்தது அது பிறகு பிடிக்க ஆரம்பித்துவிடும்.
எதன் மீது ஆசை வைத்தோமோ பிறகு பிடிக்காமல் போய்விடும். ஆனால் ஆத்மாவின் மேலிருக்கும் விருப்பமானது என்றுமே குறைவதில்லை. தான் எப்போதுமே மிகவும் நேசிக்கப்பட கூடியதாக இருக்கிறது என்று சதஸ்லோகி என்னும் கிரந்தத்தில் ஆதிசங்கரர் புலன் இன்பங்களில் உண்மைத்தன்மையை அற்புதமாக எடுத்துக் கூறியுள்ளார்.
ஆனந்தத்தில் மூலகாரணம் ஆத்மாவாக இருப்பதினால் தான் அது எல்லோருக்கும் பிரியமானதாக இருக்கிறது உண்மையில் கலப்படமற்ற ஆனந்தமே ஆத்மாவின் இயற்கை தன்மை என்று உபநிஷத்துக்கள் அறுதியிட்டு உறுதியாகக் கூறுகின்றன.
இயற்கையாகவே விளங்கும் ஆத்மாவின் அந்தத் தூய்மையான ஆனந்தத்தை உணர முடியாததால் தான் ஒருவன் இந்திரிய சுகங்களில் அத்தகைய ஆனந்தம் உள்ளது என்று தவறுதலாக நினைத்து கொண்டு அவற்றை நாடிச் செல்கிறான்.
இந்திரிய விஷயங்களில் இருந்து பெறப்படுவதாக தோன்றும் சுகத்தின் அடிப்படையில் ஆனந்தமே ஆகும் ஆகையால் ஆனந்தத்திற்கு வாஸ்தவத்தில் இருப்பது ஒரு உற்பத்தி ஸ்தானம் தான் அதுவே ஆத்மா.