ஒரு புழு நதியில் விழுந்து விட்டது பாய்ந்து வந்த நீரின் ஓட்டம் அதை இழுத்துக்கொண்டு சென்றது. அப்பொழுது வழியில் இருந்த ஒரு நீர்ச்சுழலில் அது சிக்கிக்கொண்டதால் அங்கேயே வட்டமடித்துக் கொண்டிருந்தது. உயிரை காப்பாற்றிக்கொள்ள அது எவ்வளவு முயன்றும் அதனால் தப்பிக்க இயலவில்லை. சிறிது நேரத்திற்கு பின் நீரின் ஓட்டம் திசை மாறியதால் அதே சுழலில் இருந்து வெளியே வந்தது.
நல்லவேளையாக சுழலில் இருந்து தப்பித்து விட்டோம் என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது மற்றொரு சூழலில் மாட்டிக்கொண்டது. மறுபடியும் அதே சுழலோடு வேகமாக சுற்றத் தொடங்கியது. இரண்டாவது சுழலிலிருந்து ஒரு வழியாக தப்பித்து கொண்டு வெளியே வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் அடுத்த சுழலில் விழுந்தது.
அதிர்ஷ்டவசமாக இரக்க மனம் படைத்த ஒருவன் அப்பொழுது அதன் நிலைமையைப் பார்த்து பரிதாபப்பட்டு புழு இருக்கும் இடத்திற்கு சென்றான் பக்குவமாக அதை சுழலில் இருந்து வெளியே எடுத்தான். பிறகு கரைக்குச் சென்று நீர் இல்லாத இடமாகப் பார்த்து காய்ந்த நிலத்தில் அதை வைத்தான் தகுந்த சமயத்தில் வந்து அவன் காப்பாற்றாமல் போயிருந்தால் வாழ்க்கை நீரிலேயே முடிந்திருக்கும்.
நேரம் செல்ல செல்ல நீரின் மட்டம் அதிகமாக வாய்ப்புண்டு என்று நினைத்தபோது நதியில் இருந்து சற்று தள்ளி இருந்த ஒரு மரத்தில் தங்கிக் கொண்டது.
சுழலில் சிக்குண்டு புழுவைப் போலவே மனிதன் பிறப்பு என்னும் சம்சார சாகரத்தில் மாட்டிக்கொண்டு தவிக்கிறான். சுகத்தை எப்படியாவது அடைந்து விடவேண்டும் என்று மக்கள் முயற்சி செய்கிறார்கள். அப்படி கிடைத்த சுகத்தை அவர்கள் ரசித்து பார்த்ததும் மேலும் அச்சுகத்தை கூட்டிக் கொள்ளவும் இன்பம் அதுதான் என்ற மாயையும் அவர்களை மேலும் மேலும் அழுத்தி ஈர்த்து இழுக்கிறது.
அவர்களை எண்ணற்ற பல காரியங்களில் அச்சுகம் ஈடுபடுத்துகிறது. இவ்வாறு கர்மாவிலும் சுகத்திலும் மனிதர்கள் மாறி மாறி ஈடுபடுவதால் ஒரு சுழற்சி உண்டாகி விடுகிறது. பிறகு அதிலிருந்து வெளியே வர முடியாமல் அவர்கள் தத்தளிக்கிறார்கள்.
இச்சூழல் உலக வாழ்க்கை எனும் நதியில் ஏற்பட்ட ஒரு சுழலைப் போல் இருக்கின்றது எப்படி புழுவானது ஒரு நீர் சுழலிலிருந்து மற்றொன்றில் போய் விழுந்தது அப்படியே மனிதன் இறந்த பிறகு ஒரு பிறவியில் இருந்து மற்றொரு பிறவி அடைகிறான். கர்மா சுகம் பிறப்பு இறப்பு இவ்விரு சக்கரங்களிலும் மாட்டிக்கொண்டு தப்பிக்க வழி தெரியாமல் தவிக்கும் ஒருவனை காப்பாற்றுவதற்கு மேலே உதாரணத்தில் புழுவை காப்பாற்ற வந்த இரக்க மனம் படைத்தவர்களாக சத்குரு தோன்றி அவனை காப்பாற்றுகிறார்.
குருவின் கருணையும் வழிகாட்டுதலையும் பெற்றுக் கொண்டதும் கரையில் சேர்ந்த புழுவைப்போல அவன் மேற்கொண்ட முயற்சிகளை செய்தால் உயிருள்ள போதே அடையும் மோஷ நிலையை, ஜீவன் முக்த நிலையைப் அவன் அடைவது உறுதி.