― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்நம்பிக்கையின்மை இழப்பினை தரும்: ஆச்சாரியாள் அருளமுதம்!

நம்பிக்கையின்மை இழப்பினை தரும்: ஆச்சாரியாள் அருளமுதம்!

- Advertisement -

மகாபாரதப் போர் முடிவடைந்த பின் கிருஷ்ணர் துவாரகைக்கு கிளம்பிச் செல்லும் வழியில் உத்தங்க முனிவரை சந்தித்தார்.

பிரம்மச்சாரியாக இருக்கையில் உத்தங்கருக்கு இருந்த ஆழ்ந்த குருபக்தியும் அவர் செய்த எல்லையற்ற குரு சேவையையும் வெகுவாக பாராட்டிய கிருஷ்ணர், ஏதாவது வரம் கேள் என்று அவரிடம் சொன்னார். அதற்கு உத்தங்கர் தங்களுடைய விஸ்வரூப தரிசனத்தை பார்த்த பிறகு எனக்கு வரம் எதுவும் வேண்டாம் அந்த தரிசனமே போதும் என்று பதிலளித்தார். எதை வேண்டுமானாலும் தயங்காமல் கேட்குமாறு கிருஷ்ணர் அவரை வற்புறுத்தினார்.

மாயையின் காரியம் மிக விசித்திரமானது. மோக்ஷத்தையோ அவரது திருவடிகளில் நிலையான பக்தியையோ உத்தங்கர் கேட்டு பெற்றிருக்கலாம். அதற்குப் பதிலாக தான் சுற்றித்திரியும் பாலைவனப் பகுதிகளில் நீர்நிலைகளுக்கு பஞ்சம், ஆகையால் தான் விரும்பும்போது தண்ணீர் கிடைக்க அருள் புரிய வேண்டுமெனறு கேட்டார். இறைவனும் அவருடைய விருப்பத்திற்கு இசைந்து உனக்கு எப்பொழுதெல்லாம் தண்ணீர் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் நீ என்னை நினைத்துக்கொள் உனக்கு உடனே நீர் கிடைக்கும் என்று வரமளித்தார். பின்னர் கிருஷ்ணர் துவாரகைக்கு தன் பயணத்தை தொடர்ந்தார்.

ஒருநாள் பெரிய பாலைவனத்தை முனிவர் கடந்து செல்கையில் கடுமையான தாகம் அவருக்கு ஏற்பட்டது கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் நீர்நிலைகள் ஏதும் தென்படவில்லை. ஆகையால் அவர் கிருஷ்ணரை நினைத்துக் கொண்டார். உடனே நாய்கள் புடை சூழ அழுக்கு படிந்த பயங்கரமான உருவத்துடன் கூடிய ஒரு நிர்வாண வேடுவன் அங்கு வருவதை முனிவர் கண்டார். வேடுவனின் ஆண் குறியிலிருந்து நீர் தாரை அருவி போல் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. அவன் உத்தங்கரை பார்த்து என்னிடமிருந்து தாங்கள் இந்நீரை தயவுசெய்து ஏற்றுக்கொள்ள வேண்டும் தாங்கள் தாகத்தால் கஷ்டப்படுவதை என்னால் காணமுடிகிறது. தங்கள் பால் நான் மிகவும் பரிதாபப்படுகிறேன் என்று கூறினான்.

உத்தங்கர் அந்நீரை குடிக்க மறுத்தார். அழுக்கடைந்த ஒரு வேடனின் மூத்திரத்தை குடித்து தனது தாகத்தை தீர்த்துக் கொள்வதை அவரால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இப்படி ஒரு பலனற்ற வரத்தை கொடுத்ததற்காக கிருஷ்ணரை அவர் மனதில் தூஷிக்க ஆரம்பித்தார். வேடன் உத்தங்கரை பலமுறை வற்புறுத்தியும் தண்ணீரை குடிக்க கூடாது என்ற முடிவில் அவர் உறுதியோடு இருந்தார். பசியாலும் தாகத்தாலும் வேதனையில் ஆழ்ந்தார் முனிவர். கோபத்தில் அவ்வேடுவனை கன்னத்தில் அறைந்தார். தனக்கு நேர்ந்த அவமானத்தை பொறுக்கமுடியாமல் வேடுவன் திடீரென்று தன் நாய்களோடு அங்கிருந்து மறைந்தான். உத்தங்கருக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. சிறிது நேரத்தில் கிருஷ்ணர் அங்கு தோன்றினார் .ஒரு வேடுவன் மூத்திரம் மூலமாக தாங்கள் எனக்கு நீரை கொடுத்தது உங்களுக்கு சற்றும் பொருந்தாது என்று தன் மன வருத்தத்தை முறையிட்டார்.

கிருஷ்ணர் கூறினார் உத்தங்கா உனக்காக நான் இந்திரனிடம் பரிந்து பேசி உனக்கு அமுதத்தை கொடுக்கச் சொன்னேன். ஒரு மானிடனுக்கு அமுதத்தை கொடுத்து அவனை அமரராகி விட விரும்பவில்லை என்று இந்திரன் மறுத்துவிட்டான். மீண்டும் மீண்டும் இந்திரனை கட்டாயப்படுத்தியதால் கடைசியில் இந்திரன் என் விருப்பத்திற்கு இசைந்தான். இருந்த போதிலும் தான் ஒரு வேடுவனாக சென்றுதான் அமுதத்தை உனக்கு கொடுப்பதாக கூறினான். நீ அவனை அலட்சியம் செய்து அமுதத்தை பெற மறுத்ததால் அப்போது மட்டுமின்றி அதன் பிறகும் உனக்கு அமுதத்தை கொடுக்காமல் அவன் மறைந்து விடுவான். அப்படியேதான் நீயும் நடந்து கொண்டிருக்கிறாய் என்று சொன்னார்.

மேலும் தொடர்ந்த கிருஷ்ணர் இனி பிற்காலத்தில் எப்பொழுதாவது தாகத்தைப் போக்கிக் கொள்ள உனக்கு நீர் தேவைப்பட்டால் அப்பொழுது வானத்தில் நீருண்ட மேகங்கள் தோன்றி மழையைப் பொழியும் உன் விருப்பம் போல தண்ணீரை குடித்து மகிழலாம். அம்மேகங்களும் இன்றிலிருந்து ‘உத்தம மேகங்கள்’ என்றே அழைக்கப்படும் என்று கூறி அவரை ஆசிர்வதித்து விட்டு அங்கிருந்து மறைந்தார்.

கிருஷ்ணருடைய வார்த்தைகளில் உங்களுக்கு பூரண நம்பிக்கை ஏற்படாததால் அவ்வளவு எளிதில் கிட்டாத அமிர்தத்தை கண்ணெதிரில் பார்த்தும் அதை உட்கொள்ளும் அரிய வாய்ப்பை அவர் நழுவ விட்டார். தமது விஸ்வரூப காட்சியையேகிருஷ்ணர் உத்தங்கருக்கு காட்டியிருந்தால் அவருடைய தெய்வீகத்தன்மையையும் ஒருநாளும் பொய்யாகாத அவருடைய சத்தியமான வார்த்தைகளையும் சந்தேகப்படுவதற்கும் உத்தங்கருக்கு காரணம் ஏதுமில்லை. தாகத்தால் தவித்துக் கொண்டிருக்கையில் அருகில் வேறு ஒருவரும் இல்லை என்பதும் மற்றும் வேறு எந்த நீர்நிலையும் அங்கு இருக்கவில்லை என்பதும் உத்தங்கருக்கு நன்கு தெரியும். அப்படி இருந்தும் அவர் கிருஷ்ணரை நினைத்த மாத்திரத்தில் அங்கு ஒருவர் திடீரென்று பிரசன்னமாகி அவருக்கு நீர் அளிக்கிறார் என்றால் அவரிடத்தில் உத்தங்கர் சந்தேகப்பட்டு இருக்கலாமா? மரியாதைக்குரிய பெரிய தவஸ்வியான முனிவரைப் பார்த்து தனது மூத்திரத்தை குடிக்குமாறு சொல்ல எந்த சண்டாளனுக்கும் தைரியம் இருக்காது. இத்தகைய காரணங்களைக் கொண்டு இறைவன் கொடுத்த வாக்குப்படி தமக்கு அருளியுள்ளார் என்று உத்தங்கர் உணர்ந்திருக்கலாம். இருந்தும் இறைவனுடைய வார்த்தைகளில் போதுமான சிரத்தை அவருக்கு இல்லாததாலும் மற்றும் தாம் பார்த்த திரவம் மூத்திரம் என்று தவறாக புரிந்து கொண்டதாலும் ஈடு செய்ய முடியாத பெரிய நஷ்டத்தை அவர் அடைந்தார்.

ஒருவன் அதிலும் குறிப்பாக ஆன்மீக சாதகன் இறைவன் மற்றும் குருவின் வார்த்தைகளில் பூரண நம்பிக்கை கொண்டிருத்தல் வேண்டும் அவர்களுடைய அறிவையோ அல்லது அவர்களுடைய வார்த்தைகளுக்கு இருக்கும் சக்தியையோ ஒருவன் சந்தேகப்பட்டான் என்றால் அவனுடைய இழப்பு மிகப் பெரியதாக இருக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version