ஒருவன் தூங்கச் சென்றான் சிறிது நேரத்தில் ஒரு கனவு கண்டான். அதில் ஒரு புலி தன்னை துரத்துவதாக அவன் கண்டான். உடனே அதனிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக ஓட ஆரம்பித்தான் புலியின் வேகம் இவனுடைய வேகத்தைக் காட்டிலும் அதிகமாக இருந்ததால் புலிக்கும் அவனுக்கும் இடையே இருந்த இடைவெளி சுருங்கிக்கொண்டே வந்தது
அவனுக்கு இதை பார்க்கும் பொழுது பயம் வந்து விட்டது அந்த பயத்தினால் அவன் விதிர்விதிர்த்து உடனே எழுந்து கொண்டான். அவனுடைய நெஞ்சம் படபடத்தது. நெற்றியிலும் கைகளிலும் வியர்க்க ஆரம்பித்தது. அவனால் கனவில் பார்க்கப்பட்ட புலியானது சந்தேகமில்லாமல் ஒரு பொய் ஆனாலும் விழித்தபோது உண்மையான காரியம் நடைபெற்றதைப் போல் அவனுக்கு தோன்றியது. இப்பொழுது அந்தப் பொய் உண்மையாகிறது.
சிலர் வாதம் செய்யும் போது இவ்வுலகம் வெறும் தோற்றம் என்றும் பிரம்மம் மட்டுமே சத்தியம் என்றும் அத்வைதிகள் கூறிக் கொண்டிருக்கிறார்கள் அப்படி என்றால் இப்போலியான உலகத்தில் இருக்கும் வேதங்களால் போதிக்கப்படும் உபதேசங்களும் பொய்யாய் தான் இருக்க வேண்டும். ஆகையால் வேதங்களால் நமக்கு உண்மையான அறிவை உண்டாக்க முடியாது எனவே வேதங்களின் அடிப்படையிலேயே விளங்கும் அத்வைத தத்துவம் பிரயோஜனம் அற்றது என்று ஒரு ஆட்சேபனையை கிளப்புவார்கள்.
இது ஒரு அர்த்தமற்ற விவாதம் ஆத்மாவின் நிலையில் இருந்துதான் இவ்வுலகத்தின் பொய் தன்மையை அத்வைதிகள் கூறுகிறார்கள். வியவஹார நிலையில் இருந்து பார்க்கும்போது இவ்வுலகமும் வேதங்களும் நிச்சயம் இருக்கின்றன என்பதை அவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். மேற்கண்ட உதாரணத்தில் பார்த்ததுபோல் பொய்யான பொருள் இருந்தும் உண்மையான பலன் ஏற்பட முடியும் என்பதும் அத்வைதிகள் கூறும் மற்றொரு பதிலாகும்.
இருப்பினும் வேதங்களால் ஆத்ம ஞானத்தை உண்டாக்கி அதன் மூலம் ஒருவனை பிரம்மத்தில் நிலைக்க வைக்க முடியும்