spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்சித்ரகுப்தர் நோன்பும், முறையும், பலனும்..!

சித்ரகுப்தர் நோன்பும், முறையும், பலனும்..!

- Advertisement -
chitra pournami
chitra pournami

பன்னிரண்டு மாதங்களில் வரும் பவுர்ணமியில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் சித்ரா பவுர்ணமி கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்களை காணலாம்.

வழிபாடுகளிலும் கூட நிலவு நிறைந்த நாளிலும், நிலவு மறைந்த நாளிலும் மேற்கொள்ளும் விரதங்கள் உடனடி பலன்களை வழங்கக்கூடியவை.

அப்படிப்பட்ட பலம் வாய்ந்த நாட்களில் தான் இயற்கையில் ஏராளமான மாற்றங்கள் நடைபெறும். கடல் தண்ணீர் மேல் எழும்பும். அலையடிக்கும் அந்த நாளில் விரதமிருந்தால் அலைபாயும் உள்ளங்களுக்கு அமைதி கிடைக்கும். அப்படிப்பட்ட நாட்களில் ஒன்றுதான் சித்ரா பவுர்ணமி. சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி என்பதால், ‘சித்ரா பவுர்ணமி’ என்று அழைக்கப்படுகிறது. இது பன்னிரண்டு மாதங்களில் வரும் பவுர்ணமியில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

சித்திரை மாதத்தில் சூரியன் உச்சம் பெறுகிறார். அந்த மாதத்தில் வரும் பவுர்ணமியன்று சந்திரன் முழுமையடைகிறார். ராஜ கிரகங்களாக விளங்கும் சூரியனும், சந்திரனும் பலம்பெறுவதால் அந்த மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு முன்னோர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து விழா எடுத்துள்ளனர். மற்ற பவுர்ணமி நாட்களை விட, சித்ரா பவுர்ணமி நாளில் கிரிவலம் வருவது சிறப்பு மிகுந்தது. அன்றைய தினம் மலை வலம் வந்து முருகனை வழிபட்டால் மகத்தான வாழ்வு மலரும்.

சித்ரா பவுர்ணமியில் சித்ரகுப்தனையும் வழிபட வேண்டும். இந்த வழிபாட்டால் ஆயுள் விருத்தியும், ஆதாயம் தரும் செல்வ விருத்தியும் உண்டாகும். நமது பாவ புண்ணியங்களைப் பதிவு செய்து வைக்கும், சித்ரகுப்தனுக்கு அவர் அவதரித்த நாளில் விழா எடுப்பது சிறப்புக்குரியதாகும்.

இவர் வலக்காலை ஊன்றி இடக்காலை மடித்து சுகாசன நிலையில் வீற்றிருப்பார். வலது கையில் எழுத்தாணியும் இடக்கையில் சுவடியும் இருக்கும் மயன் மகள் பிரபாவதி மனுவின் மகள் நீலாவதி, விஸ்வ கர்மாவின் மகள் கர்ணிகி ஆகியோர் இவரது மனைவியர் அக்கிர சந்தானி என்பது இவரது கணக்குப் புத்தகத்தின் பெயர்.

‘நாம் மலையளவு செய்த பாவத்தைக் கடுகளவு ஆக்குக, கடுகு அளவாகச் செய்த புண்ணியத்தை மலையளவு ஆக்குக’ என்று வணங்க வேண்டும்.

சூரியனைப் பார்த்து கிழக்கு நோக்கிப் பொங்கல் வைத்து, சித்ரகுப்தனைச் சிந்தையில் நினைத்து வழிபட வேண்டும். சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், பச்சரிசி கொழுக்கட்டை, இனிப்புப் பலகாரங்கள் போன்றவற்றை இலையில் பரப்பி வைத்து, பழங்களில் பலாச்சுளை, முழு நொங்கு, இளநீர், நீர்மோர், பானகம், திராட்சை, மாம்பழம் போன்றவற்றையும் படைக்க வேண்டும்.

பாவங்களிலிருந்து விடுபடவும், நரகத்திற்கு போகாமலிருக்கவும் இந்த விரதம் மேற்கொள்கின்றனர். இந்த நாளில் மரணதேவனின் விசேஷ பிரதிநிதியான சித்ரகுப்தனுக்கு விசேஷ வழிபாடு செய்யப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் சித்ரா பவுர்ணமி தினத்தில் செய்யப்படும் இந்த பூஜையால் மேல் உலகில் உள்ள தேவர்கள் திருப்தியடைந்து மனிதர்களின் செயல்களை மிகுந்த பரிவுடன் தீர்மானிக்கிறார்கள்.
ஸ்லோகம்
சித்ர குப்தம் மஹாப்ராக்ஞம் லேகனீபுத்ர தாரிணம்.
சித்ரா ரத்னாம்பரதாரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்

இந்த சித்ரகுப்தனுக்கென காஞ்சிபுரத்தில் ஒரு ஆலயமும், திருவண்ணாமலையில் ஒரு சன்னதியும் உள்ளது. இதே போல் தேனி மாவட்டம் போடி அருகே கோடங்கிப்பட்டி, கோவை சிங்காநல்லூர் எமதர்மன் கோயில்களிலும் சித்ரா பவுர்ணமி தினத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்ய கடன் வசூலாகும், வாணிபம் சிறக்கும், ஆயுள்பலம் கூடும் என்பது நம்பிக்கை.

இறைவன் புரிந்த அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் முதல் திருவிளையாடல் இந்திரன் பழி தீர்த்த படலம். ஒரு சமயம் இந்திரன், பிரகஸ்பதியை அவமதித்து விட்டான் அதனால் அவனுக்கு ஆலோசனை கூறுவதை பிரகஸ்பதி நிறுத்தி விட்டார்.

குருவின் வழிகாட்டுதல் இல்லாததால் இந்திரன் பல தீய செயல்களைச் செய்து வந்தான். இதனைக்கண்ட பிரகஸ்பதி, இந்திரனை மன்னித்து மீண்டும் அவனுக்கு நல்வழிகாட்டத் தொடங்கினார்.

பிரகஸ்பதி இல்லாத சமயத்தில் தான் செய்த தவறுகளுக்குப் பரிகாரம் செய்ய நினைத்த இந்திரன், அவரிடமே யோசனை கேட்க, அவர் தீர்த்த யாத்திரை செல்லும்படி ஆலோசனை கூறினார்.

அவரின் ஆலோசனைப்படி தீர்த்தயாத்திரை மேற்கொண்ட இந்திரன், ஒரு கடம்பவனத்தை அடைந்தவுடன் தனது தோள்களிலிருந்து பாவச்சுமை அகற்றப்பட்டது போல் உணர்ந்தான்.

தன் பாவங்கள் விலகியதற்கான காரணத்தை அறிய தேடியவனின் கண்களுக்கு அந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் இருப்பது தெரிந்தது. அங்கிருந்த சுயம்பு மூர்த்திக்கு இந்திரவிமானம் அமைத்து வழிபட்டு தன் பாவத்தை போக்கிக் கொண்டான். இந்திரன் வழிபட்ட அந்நாளே சித்ரா பவுர்ணமி என்றும் கூறுகின்றனர்.

இந்திரன் வழிபட்ட அந்தப் பகுதியே பின்னர் மதுரை மாநகராயிற்றாம். இன்றும் கூட சித்ராபவுர்ணமி இரவில் தேவேந்திரனே வந்து மதுரை சுந்தரேஸ்வரருக்கு பூஜை செய்வதாக ஐதீகம்.

பெண்களுக்கு அதிக பலன்களை தரக்கூடியது சித்ரா பவுர்ணமி தினமாகும்.

இது வசந்தகாலம். காலங்களில் நான் வசந்தகாலமாக இருக்கிறேன் என்று பகவான் கண்ணன் பகவத்கீதையில் கூறுகிறார்.

ஒரு சமயம், கயிலையில் பார்வதி தேவி, தங்கப்பலகையில், சித்திரம் ஒன்றை வரைந்தார். அந்தச் சித்திரத்திற்கு, சிவனாரை உயிர் கொடுக்க வேண்டினார். அந்த‌ வேண்டுகோளை ஏற்று, சிவபெருமானும் சித்திரத்திற்கு உயிர் கொடுத்தார்.

இவ்வாறு சித்திரத்தில் இருந்து தோன்றியதால் அவர், சித்திர புத்திரன் என்றும் சித்ரகுப்தர் என்றும் அழைக்கப்படலானார். சித்திரத்திலிருந்து சித்திர குப்தர் தோன்றிதை குறிக்கும் சித்திரா பௌர்ணமி என பெயர் ஏற்பட்டது என புராணங்கள் கூறுகிறது.

அன்றைய தினத்தில், சந்திரபகவான், தம் பூரண கலைகளுடன் பிரகாசிக்கிறார். பூமிக்கு மிக அண்மையில் அன்று சந்திரபகவான் இருக்கிறார். ஆகவே, அன்றைய தினத்தில், இறைவழிபாடு செய்வது மிக அதிக நற்பலன்களைப் பெற்றுத் தரும்.

சூரியன் சிவனின் அம்சமும் சந்திரன் சக்தியின் அம்சமும் ஆவர். எனவே சித்ரா பௌர்ணமி நாளில் சிவசக்தி வழிபாடு செய்வது சிறப்பாகும்.

இந்த சித்ரா பௌர்ணமி நாளில் திருமயிலை முண்டககண்ணியம்மன் ஆலயத்திற்க்கு அருகில் தர்மராஜர் கோயிலில் உள்ள சித்திர குப்தனை மனதால் வணங்கி நீண்ட ஆயுளையும் தர்ம நெறிதவறாத வாழ்வையும் பெறுவோமாக!

பண்டைத் தமிழகத்தில் சித்திர புத்திர நயினார் நோன்பு மிகப் பிரபலமான ஒன்று அன்று விரதமிருந்து கோயில் சென்று அங்கே கூட்டமாகவோ, தனியாவோ அமர்ந்து இவரது கதையைப் படிப்பார்கள். அவ்வாறு செய்தால் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களின் பலன் குறையும் உடல் நலம் சீராக இருக்கும். புண்ணியம் கூடும். வாழ்வில் செல்வம் செழிக்கும் என்பது ஐதிகம்.

இந்த நோன்புக்கு ஒரு புராணக் கதை உண்டு:

பல காலம் முன்பாக முக்திபுரி என்ற ஊரில் கலாவதி என்ற இளம்பெண் வாழ்ந்து வந்தாள். ஒரு நாள் அவள் தன் தோழியரோடு வனத்தின் அழகைக் காணச் சென்றாள். காட்டின் நடுவில் ஒரு சிறு கோயில் இருந்தது. அங்கு சில தேவ கன்னியர் பூஜை செய்து கொண்டிருந்தனர். அதில் ஒருத்தி சித்திரகுப்த நயினாரின் கதையைப் படித்துக் கொண்டிருந்தாள். அதிசயமும் ஆச்சரியமும் அடைந்த கலாவதி வெளியில் காத்து நின்றாள். பூஜை முடிந் ததும் தேவகன்னியர் வந்தனர். அவர்களில் ஒருத்தி கலாவதியைப் பார்த்துவிட்டு அவள் அருகில் வந்தாள்.

தேவி! நீங்கள் அனைவரும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? தேவ கன்னியர்களான நீங்கள் யாரை வழிபட்டீர்கள்? என்று பணிவாகக் கேட்டாள். அதற்கு அக்கன்னி, பெண்ணே! இன்று சித்திரா பவுர்ணமி. சித்திர குப்தனின் நாளான இன்று அவரது அவதாரக் கதையைப் படித்து விரதம் இருந்து பூஜிப்பவர்களுக்கு வாழ்வில் செல்வம் செழித்தோங்கும்; நல்ல கணவன், நல்ல குழந்தை என அரிய வாழ்க்கைக் கிடைக்கும். ஆண்கள் இதைச் செய் தால் எண்ணிய காரியங்களில் வெற்றியும், இனிமையான இல்லறமும் வாய்க்கும் என்றாள்.

உடனே கலாவதி அந்த பூஜை முறையை எங்களுக்கும் கற்றுத் தந்தருள வேண்டும் என்று வேண்டினாள். அந்த தேவகன்னியும் அவ்வாறே செய்தாள். அது முதல் கலாவதி சித்திர புத்திர நயினார் நோன்பைக் கடைப்பிடித்தாள்.

அதன் பலனாக ஆகமபுரியின் அரசன் வீரசேனனின் மனைவியாகும் பலனைப் பெற்றாள். சித்திரகுப்த நயினார் நோன்பு கடைப்பிடித்ததால் தான் தனக்கு செல்வச் செழிப்பும், புகழும் மிக்க வாழ்வு கிடைத்தது எனக் கருதி அந்த நோன்பை தரணியெங்கும் பரப்பினாள் கலாவதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe