Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: வல்லபை கணேச பிரசாத மாலை!

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: வல்லபை கணேச பிரசாத மாலை!

vallabai vinayakar
vallabai vinayakar

வள்ளலார் எழுதிய வல்லபை கணேசர் பிரசாத மாலை

திரு நெடுமால் அன்றால் இடை நினது சேவடித் துணை மலர்த்துகளான்
பெருநெடு மேனி தனிற்படப்
பாம்பின் பேருரு அகன்றமை மறவேன்
கருநெடுங் கடலைக் கடத்து
நற்றுணையே கண்கள் மூன்றுடைய செங்கரும்பே
வருநெடு மருப்பொன் றிலகு வாரணமே வல்லபைக் கணேசமா மணியே. (1)

நளின மாமலர் வாழ் நான்முகத் தொருவன் நண்ணி நின் துணையடி வழுத்திக்
களிநலன் உடன் இவ்வுலகெலாம் படைக்கக் கடைக்கணித்ததை உளம் மறவேன்
அளிநலன் உறு பேரானந்தக் கடலே அரு மருந்தே அருள் அமுதே
வளிநிறை உலகுக் கொரு பெருந்துணையே வல்லபைக் கணேசமா மணியே. (2)

சீர் உருத்திர மூர்த்திகட்கு முத்தொழிலும் செய்தருள் இறைமை தந்தருளில்
பேர் உருத்திரங் கொண்டிடச் செயும் நினது பெருமையை நாள்தொறும் மறவேன்
ஆர் உருத்திடினும் அஞ்சுதல் செய்யா ஆண்மை எற்கருளிய அரசே
வார் உருத்திடு பூண்மணி முகக் கொங்கை வல்லபைக் கணேசமா மணியே. (3)

விண்ணவர் புகழும் மெய்கண்ட நாதன் வித்தகக் கபிலன் ஆதியர்க்கே
கண்அருள் செயும்நின் பெருமையை அடியேன் கனவிலும் நனவிலும் மறவேன்
தண் அருட்கடலே அருட் சிவபோக சாரமே சராசர நிறைவே
வண்ணமா மேனிப் பரசிவ களிறே வல்லபைக் கணேசமா மணியே. (4)

நாரையூர் நம்பி அமுது கொண்டூட்ட நற்றிருவாய் மலர்ந் தருளிச்
சீரை மேவுறச் செய்தளித்திடும் நினது திருவருள் நாள்தொறும் மறவேன்
தேரை ஊர் வாழ்வும் திரம் அல எனும் நற்றிடம் எனக் கருளிய வாழ்வே
வாரை ஊர் முலையாள் மங்கை நாயகி எம் வல்லபைக் கணேசமா மணியே. (5)

கும்பமா முனியின் கரக நீர் கவிழ்த்துக் குளிர்மலர் நந்தனம் காத்துச்
செம்பொன் நாட்டிறைவற் கருளிய நினது திருவருட் பெருமையை மறவேன்
நம்பனார்க் கினிய அருள் மகப்பேறே நற்குணத்தோர் பெரு வாழ்வே
வம்பறா மலர்த்தார் மழைமுகில் கூந்தல் வல்லபைக் கணேசமா மணியே. (6)

அயன் தவத்தீன்ற சித்தி புத்திகள் ஆம் அம்மையர் இருவரை மணந்தே
இயன்ற அண்டங்கள் வாழ்வுறச் செயும் நின் எழில் மணக் கோலத்தை மறவேன்
பயன்தரும் கருணைக் கற்பகத் தருவே பரசிவத்தெழு பரம் பரமே
வயன்தரு நிமல நித்தியப் பொருளே வல்லபைக் கணேசமா மணியே. (7)

முன் அருந்தவத்தோன் முற்கலன் முதலா முனிவர்கள் இனிது வீடடைய
இன்னருள் புரியும் நின் அருட் பெருமை இரவினும் பகலினும் மறவேன்
என் அரும் பொருளே என் உயிர்க்குயிரே என் அரசே என துறவே
மன் அரு நெறியில் மன்னிய அறிவே வல்லபைக் கணேசமா மணியே.(8)

துதிபெறும் காசி நகரிடத் தனந்தம் தூயநல் உருவு கொண்டாங்கண்
விதி பெறும் மனைகள் தொறும் விருந் தினனாய் மேவிய கருணையை மறவேன்
நதிபெறும் சடிலப் பவள நற்குன்றே நான்மறை நாடரு நலமே
மதிபெறும் உளத்தில் பதி பெறும் சிவமே வல்லபைக் கணேசமா மணியே. (9)

தடக்கை மா முகமும் முக்கணும் பவளச் சடிலமும் சதுர்ப் புயங்களும் கை
இடக்கை அங்குசமும் பாசமும் பதமும் இறைப் பொழுதேனும் யான் மறவேன்
விடக்களம் உடைய வித்தகப் பெருமான் மிக மகிழ்ந்திட அருட்பேறே
மடக்கொடி நங்கை மங்கை நாயகி எம் வல்லபைக் கணேசமா மணியே. (10)

பெருவயல் ஆறுமுகன் நகல் அமர்ந்துன் பெருமைகள் பேசிடத் தினமும்
திருவளர் மேன்மைத் திறமுறச் சூழும் திருவருட் பெருமையை மறவேன்
மருவளர் தெய்வக் கற்பக மலரே மனமொழி கடந்த வான் பொருளே
வருமலை வல்லிக்கொரு முதற் பேறே வல்லபைக் கணேசமா மணியே. (11)

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version