வன்னிமந்தாரை ஸ்ரீமகா கணபதி என்ற திருநாமத்துடனேயே புராதனப் பெருமைமிக்க விநாயகர் கோயில் ஒன்று அமைந்துள்ளது, வன்னியூரில்.
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன், திருவாசல் என்ற இடத்தில் பொதுக்குளம் வெட்டத் துவங்கியபோது கிடைத்தவர், இந்த கணபதி. அப்போது இப்பகுதி, வன்னிமந்தாரை மரங்களடர்ந்த காடாக இருந்துள்ளது.
வன்னி என்பவள், மாமுனிவர் அவுரவர் மேதா தம்பதியரின் மகள். அவள் கணவன் மந்தாரன், தௌமிய முனிவன் மகன்.
இத்தம்பதியினர் ஒரு சமயம், மகாகணபதியின்வடிவை உடையவரும் அவரது பக்தருமான புருகண்டி. முனிவரைக் கண்டனர் யானை வடிவில் துதிக்கையுடன் இருந்த முனிவரின் தோற்றத்தைப் பார்த்து வன்னி பயந்து ஓடுகிறாள்.
மந்தாரனோ புருகண்டியை கிண்டல் கேலி செய்தும், மிரட்டவும் செய்கிறான். புருகண்டி, வினாயகர் பெருமைகளையும் தான் யார் என்பதையும் எடுத்துக் கூறியும் தம்பதியினர் அதைப் பெருட்படுத்தாது கேவலப்படுத்தி, மரியாதை குறைவாகவே நடந்து கொள்ள, புருசுண்டி முனிவர் சாபம் இடுகிறார்.
வன்னி, வன்னி மரமாகவும். மந்தாரன், மந்தாரை மரமாகவும் மாறிவிடுகிறார்கள்.
தவறை உணர்ந்து அவர்கள் வருந்தி, கணபதியிடம் சாப விமோசனம் கேட்கின்றனர். அவரோ, தனது அடியாரை அவமானப்படுத்திய குற்றத்தை தான் மன்னிக்க விருப்பம் இல்லையெனவும், இருப்பினும் அவர்களது பெயர் நிலைக்க, தான் வன்னி மந்தாரையை உகந்த பூஜைப் பொருளாக ஏற்று, வன்னியூர் என்கிற கிராமத்தில் கோயில் கொள்வேன் எனவும் கூறி ஆசியளித்தார். இன்றும் அந்த வாக்குப்படி கணபதி, இத்தலத்தில் கோயில் கொண்டருள்கிறார்.
வன்னி இலையாலும், மந்தாரை புஷ்பத்தாலும் தன்னை அர்ச்சித்து வழிபாடு செய்பவர்களது கஷ்டங்களைப் போக்கி ஆறுதலளிக்கிறார் வன்னி மந்தாரை கணபதி.