சாஸ்திர வ்யஸனம் என்றால் நன்கு சாஸ்திரங்களைக் கற்பது சாஸ்திரங்களை நன்கு கற்பது தவறா என்றால், வித்யாரண்யர் அதற்குக் காரணம் தந்துள்ளார்.
சாஸ்திர வ்யஸனம் இருக்கக் கூடாது என்று நாம் சொல்வதற்குக் காரணம், அது கர்வத்தில் முடியும் என்பதால்தான். ஆகவே, அது இருக்கக் கூடாது. சாஸ்திரம் படிக்கப் படிக்க அஹங்காரமும் அதிகமாகிவிடும். எப்போது ஒருவனுக்கு அஹங்காரம் வந்திருக்கிறதோ அப்போது அவனது கதி அதோகதிதான். ஆகவே சாஸ்திர வ்யஸனம் இருக்கக் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது
இதற்கு ஓர் உதாரணத்தை சாந்தோக்ய உபநிஷத்தில் நாம் பார்க்கலாம்.
ருக்வேதம் பகவோsத்யேமி யஜுர்வேதம் ஸாமவேதமாதர்வணம்
நாரதர் ஓரிடத்தில், “நான் ரிக் முதலான வேதங்களையெல்லாம் படித்திருக்கிறேன், அவற்றைப் படித்திருக்கிறேன். இவற்றைப் படித்திருக்கிறேன்…” என்று அடுக்கிக்கொண்டே போனார். அவரிடம், “ஆத்மாவைப் பற்றி தெரிந்து கொண்டிருக்கிறாயா?” என்று கேட்கப்பட்டபோது அவர்,
ஸோsஹம் பகவோ மந்த்ரவிதேவாஸ்மி நாத்மவித்
என்றார்.
“மந்திரங்களை அறிந்தவனாயிருக்கிறேனே ஒழிய ஆத்மாவைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லை. இவ்வாறு இருப்பதனால் பிரயோஜனம் ஒன்றுமில்லை என்பதால் மிகவும் வருத்தப்படுகிறேன். தாங்கள்தான் என்னைக் கைதூக்கிவிட வேண்டும்” என்று ஸனத்குமாரரிடம் நாரதர் வேண்டிக் கொண்டார்.
அவ்வளவு படித்த நாரதருக்கு மேற்கொண்டு ஏதாவது படிக்க வேண்டியிருந்தா என்றால், ஆத்ம தத்துவத்தைத் தெரிந்து கொள்ளாமல் வேறெந்த சாஸ்திரங்களைப் படித்தாலும் அது பிரயோஜனமில்லை.