குருவின் முகத்தாமரையிலிருந்து பெறப்படும் அறிவுதான் பலனளிக்கும். குருவின்றி எவ்வளவு புத்தகங்களை நாம் படித்தாலும் ஞானம் பெற முடியாது.
எந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அது விஷயமாக உள்ள மிகப் பழமையான சம்பிரதாயத்தை நாம் குருவின் மூலமாகத்தான் தெரிந்துகொள்ள முடியும்.
குருவாக இருப்பதற்கு யார் தகுதியுடையவர்? சங்கர பகவத்பாதாள் “கோ குரு?” என்ற கேள்வியை எழுப்புகிறார்.
அதாவது “யார் குரு?” என்று கேட்கிறார். அதற்கு அவரே கொடுத்துள்ள விடை.
அதிகததத்த்வ: சிஷ்யஹிதாயோத்யத: ஸததம்
இவை இரண்டும்தான் குருவின் இலட்சணங்கள்
முதலாவது அதிகததத்த்வா: – குருவிற்கு சாஸ்திரமும் சம்பிரதாயமும் தெரிந்திருக்கும். மேலும், அவர் தத்வ ஞானியாகவுமிருப்பார்.
இரண்டாவது இலட்சணம் சிஷ்யஹிதாயோத்யத்: ஸததம் – குருவானவர் எப்போதும் சிஷ்யனின் முன்னேற்றத்திற்காகவே பாடுபடுவார்.
ஒருவன் பண்டிதனாக இருந்து மற்றவர்களுக்குக் கற்றுத் தருவதில் விருப்பமில்லாதிருந்தால் அவனுடைய பாண்டியத்தினால் மற்றவர்களுக்கு என்ன பயன்?
ஆனால், தன்னிடம் சரியான முறையில் அணுகிய சீடனுக்கு தத்துவத்தை உபதேசிப்பது குருவின் கடமையாகும். ஆகவே, பகவத்பாதாள் குறிப்பிட்டுள்ள இவ்விரு தகுதிகளும் எவரிடம் இருக்கின்றனவோ அவர்தான் “குரு” ஆவார்.
ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்