
சகுனம் – 3
தலைவிரித் தெதிர்வருதல், ஒற்றைப் பிராமணன்,
தவசி, சந்நாசி, தட்டான்,
தனமிலா வெறுமார்பி, மூக்கறை, புல், விறுகுதலை,
தட்டைமுடி, மொட்டைத் தலை,
கலன்கழி மடந்தையர், குசக்கலம், செக்கான்,
கதித்ததில தைலம், இவைகள்
காணவெதிர் வரவொணா; நீர்க்குடம், எருக்கூடை,
கனி, புலால் உபய மறையோர்
நலம்மிகு சுமங்கலை, கிழங்கு, சூதகமங்கை
நாளும்வண் ணான்அ ழுக்கு
நசைபெருகு பாற்கலசம், மணி, வளையல் மலர்இவைகள்
நாடியெதிர் வரநன் மையாம்;
அலைகொண்ட கங்கைபுனை வேணியாய்! பரசணியும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
அலையையுடைய கங்கையை அணிந்த சடையனே!, மழு ஏந்திய பெரியோனே!, அருமை தேவனே!, தலைவிரி கோலமாக ஒருவர் எதிர்வருதலும், ஒற்றைப் பார்ப்பானும், தவம் புரிவோனும், துறவியும், தட்டானும், தனம் இல்லாத மார்பினளும், மூக்கில்லாதவனும், புல்தலையனும், விறகுதலையனும், சப்பைத்தலையும்,
மொட்டைத்தலையும், அணிகலம் இல்லாத பெண்களும், குசவன் பாண்டமும், வாணியன் மிகுந்த எண்ணெயும், இவை கண்காண எதிர் வருதல் தகாதன; நீர்க்குடமும், எருக்கூடையும், பழமும் இறைச்சியும், இரட்டைப்பார்ப்பனரும், நலம்மிகு சுமங்கலை, நன்மைமிக்க மங்கல மடந்தையும், கிழங்கும், பூப்புப்பெண்ணும், நாளும் எடுக்கும் வண்ணான் அழுக்கும், விருப்பம் ஊட்டும் பாற்குடமும், மணியும், வளையலும், மலரும். இவை தேடி எதிரே வரின் நலம் ஆகும்.