
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு கோவிலில் மாசி கொடை விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது
குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில் களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.

இக்கோவிலில் மாசிக் கொடை விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம்.இந்த வருடத்தின் மாசிக் கொடை விழா இன்று காலை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு இன்று காலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது.5 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு உஷ பூஜை, 8.23 மணியளவில் திருக் கொடியேற்றம் நடந்தது. கோவில் தந்திரி சங்கர நாராயணன் திருக்கொடி யேற்றினார். இதில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தகவல் தொடர்பு தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கலெக்டர் ஸ்ரீதர், எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத், உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சமய மாநாடு திடலில் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் 86-வது இந்து சமய மாநாடு கொடி யேற்றம் நடந்தது. தலைவர் கந்தப்பன் தலைமையில் மாநாடு தொடங்கியது. மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் மாநாட்டை தொடங்கி வைத்து விழா பேருரை ஆற்றினார்.
தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் குத்து விளக்கேற்றி சிறப்பு ரை ஆற்றினார். மாதா அமிர்தானந்தமயி மடம் குமரி மாவட்ட பொறுப்பா ளர் நீலகண்டாம்ருத சைதன்யா, வெள்ளிமலை ஸ்ரீவிவேகானந்தா ஆசிரமம் சுவாமி கருணானந்தஜி மகாராஜ், குமாரகோவில் சின்மயா மிஷன் சுவாமி நிஜானந்தா ஆகியோர் ஆசியுரை ஆற்றினர்.இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, விஜய் வசந்த் எம்.பி., கேரள முன்னாள் மந்திரி சிவகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.நண்பகல் 12 மணியளவில் கருமங்கூடல் தொழிலதிபர் கல்யாணசுந்தரம் இல்லத்திலிருந்து அம்மனுக்கு சீர் பொருட்கள் கொண்டு வரப்பட்டது. மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை விமரிசையாக நடைபெற்றது.