(ராத்திரி வேளைல, யாரோ வரப்போறா தோசை வார்த்து வைங்கோன்னு சொன்னா அது சங்கடமாத் தோணலாம் இல்லையோ? அதே எனக்கு வேணும்னு கேட்டா சிரமத்தை பார்க்காம சிரத்தையா செய்வேள்தானே?-பெரியவா) (பெரியவா நடத்தின லீலை)
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
ஆசார்யா காஞ்சிபுரத்துல இருந்த காலகட்டம் அது. ஒருநாள் ராத்திரி வழக்கமான மடத்துக் காரியங்கள் எல்லாம் முடிஞ்சு எல்லாரும் தூங்கப் போறதுக்கு தயாராகிண்டு இருந்த நேரம் அது.கிட்டத்தட்ட பத்தரை,பதினொரு மணி இருக்கும் .அந்த சமயத்துல ரொம்ப தொலைவுல இருக்கிற ஒரு ஊர்ல இருந்து
வயசான பெண்மணி ஒருத்தர் பரமாசார்யாளை தரிசனம் பண்ண வந்தா.
பரமாசார்யா அந்த பெண்மணிக்கு ஆசிர்வாதம் பண்ணிட்டு, மடத்துல கைங்கர்யம் செஞ்சுண்டிருந்த ஒருத்தரைக் கூப்பிட்டார்.
“எனக்கு ரவாதோசை திங்கணும் போல இருக்கு… பண்ணித் தர்றியா?” அப்படின்னு கேட்டார்.
எல்லாருக்கும் ஆச்சர்யமான ஆச்சரியம்.அமிர்தமாவே இருந்தாலும் ஆசைப்படாத பெரியவா,ரவாதோசை வேணும்னு கேட்கிறார்.அதுவும் எனக்கு திங்கணும் போல இருக்குன்னு சொல்றார். எல்லாத்தையும் விட ஆச்சரியம், கிட்டத்தட்ட பாதி ராத்திரியை நெருங்கிண்டு இருக்கிற இந்த சமயத்துல சாப்பிடப்போறதா சொல்றார்!
ஒரு நாளைக்கு ஒருவேளைதான் சாப்பிடறவர்,அதுலயும் பெரும்பாலும் கைப்பிடி நெல் பொரியைத்தவிர வேற எதையும் தவிர்க்கறவர், ரவாதோசை வேணும்னு கேட்கறார்னா அந்த ஆச்சர்யத்தை எப்படிச் சொல்றது?
உடனடியா உக்ராண அறைக்குப் போனவா, சங்கடமான விஷயம் தெரியவந்தது. அது என்னன்னா ரவாதோசை வார்க்கறதுக்கு முக்கியத் தேவையான ரவை ஒரு துளி கூட இல்லைங்கறதுதான்.
இத்தனை நேரத்துக்கு அநேகமாக எல்லா கடையும் மூடியிருக்கும். என்ன பண்ணறதுன்னு புரியாம தவிச்ச நேரத்துல ஊர்ல இருந்து வந்திருந்த அந்த மூதாட்டி விறுவிறுன்னு வெளியில் கிளம்பி, ஊர் முழுக்க அலைஞ்சு ஏதோ ஒரு கடை திறந்திருக்கிறதைப் பார்த்து ,ரவையை வாங்கி,மூச்சுவாங்க அவர்களிடம்
கொண்டுபோய் கொடுத்தா.
அப்புறம் என்ன! பத்துப் பன்னிரண்டு ரவா தோசை வார்த்து பெரியவாகிட்டே கொண்டு போய் கொடுத்தா.
அத்தனை தோசையிலயும் இருந்து ஒரு விள்ளல் மட்டும் எடுத்து வாயில போட்டுண்ட ஆசார்யா, “ரொம்ப நன்னா இருக்கு.திருப்தி ஆயிடுத்து இதெல்லாம் கொண்டுபோய் உள்ளே வைச்சுட்டு, எல்லாரும் தூங்கப் போங்கோ!” அப்படின்னார்.
என்னடா இது. ஒரு விள்ளல் சாப்பிடறதுக்காகவா, இந்த வேளைகெட்ட வேளைல இத்தனை ஆசையா கேட்கறாப்புல கேட்டார்னு எல்லாருக்கும் மறுபடியும் ஆச்சரியம். இருந்தாலும் எதுவும் பேசாம ஆசாரியா சொன்னமாதிரி உள்ளே கொண்டு வைச்சுட்டு தூங்கப் போனா எல்லாரும்.
கொஞ்ச நாழியாச்சு. ஆந்திராவுல இருந்து நாலஞ்சு வைதீகாள் பெரியவாளை தரிசிக்கணும்னு மடத்துக்கு வந்தா. வழியில் ஏதோ தடை ஏற்பட்டதால வர்றதுக்கு
இத்தனை நேரம் ஆச்சுன்னும், சொன்னா. ராத்திரி மடத்துல தங்கி இருந்துட்டு விடியற்காலம் ஆசார்யாளை தரிசனம் பண்றதாகவும் அனுமதிக்கணும்னும் கேட்டா.
விஷயத்தை பரமாசார்யாகிட்டே சொல்லப்போனார் ஒருத்தர். ஆனா அவர் சொல்றதுக்கு முன்னாலயே, “என்ன, என்னைப் பார்க்க வைதீகாள்லாம் வந்திருக்காளா? இருக்கட்டும் அவாள்லாம் பாவம் பசியோட வந்திருப்பா, ரவா தோசைகளை எடுத்துவைக்கச் சொன்னேனே, அதையெல்லாம் அவாளுக்கு சாப்பிடக் குடு..!”-பெரியவா.
சொல்லப் போனவர் திகைத்து நின்னுட்டார். சிலபேர் வருவாங்கறதை முன்கூட்டியே தெரிஞ்சுண்டதே ஆச்சரியம்.அதோட அவா பசியோட இருப்பா, அவாளுக்காக ஏதாவது பண்ணிவைக்கணும்கறதையும் மகா பெரியவா தெரிஞ்சுண்டிருக்கார்னா எப்பேர்ப்பட்ட ஞானதிருஷ்டி.
“என்ன அப்படியே நின்னுட்டே? யாருக்க்கோ தர்றதுக்காக தனக்கு ரவாதோசை வேணும்னு ஏன் இவர் கேட்டார்?னு யோசிக்கிறியோ? பெருசா ஒரு காரணமும் இல்லை. இந்த ராத்திரி வேளைல, யாரோ வரப்போறா தோசை வார்த்து வைங்கோன்னு சொன்னா அது சங்கடமாத் தோணலாம் இல்லையோ? அதே எனக்கு வேணும்னு கேட்டா சிரமத்தை பார்க்காம சிரத்தையா செய்வேள்தானே?வந்திருந்த வைதீகாளுக்கு ரவாதோசைன்னா ரொம்ப இஷ்டமாம்.தங்களுக்காக பெரியவா நடத்தின லீலையைக் கேட்டு சிலாகிச்சு ,கண்ணுல ஜலம் வழிய நெகிழ்ந்து போனா. அந்த மகேஸ்வரனே தன்னோட பிரசாதத்தை தங்களுக்கு தந்ததா நினைச்சுண்டு ஆனந்தமா சாப்பிட்டா.