
NO Politics
#APNTrending | The Accidental Prime Minister
ஒரு சமயம் இந்த்ரனுக்கு ப்ரம்மஹத்தி எனும் பெரும் தோஷம் உண்டானது. அதாவது அவன் இந்த்ர பதவி எனும் நாற்காலியில் அமர முடியாது. பதவியைத் துறக்க எவருக்குத்தான் விருப்பம் வரும்?! நாற்காலிக் கனவில் மிதந்த இந்த்ரனுக்கு, இனி தனக்கு அந்த பதவி இல்லையென்பதை ஏற்க முடியவில்லை. “எப்படியாவது மீண்டும் தேவேந்த்ரனாவது” எனும் உறுதியில் இருந்தான்.
ஏனைய தேவர்கள் ஒன்றுகூடி அவசர ஆலோசனை செய்தனர். தற்போதுள்ள சூழலில், இந்த்ரன் பதவியில் அமர்ந்தால், எதிர்ப்புகள் அதிகமுண்டு. ஏனெனில், அவன் நேரிடையாக ஆட்சி செய்யும் அதிகாரத்தை இழந்துள்ளான். ஆதலால் உலகம் இதை மறக்கும் வரையிலும், இந்த்ரனின் தோஷம் நீங்கும் வரையிலும், ஒரு இடைக்கால(தற்காலிக) தலைவனைத் தேர்ந்தெடுப்பது எனத் தீர்மானித்தனர்.
யாராக இருந்தாலும் அவர் சுதந்திரமாகச் செயலற்றவராக, அதே சமயம் தனது கட்டளைகளுக்குக் கீழ்படிபவராக இருக்க வேண்டும் என்பதுதான் இந்த்ரனின் பேரவா! அதுவும் சரிதான்! இதெல்லாம் பதவி படுத்தும்பாடு!
ஒருவழியாக தேவர்கள் ஒருவனைக் கண்டு பிடித்தனர். தகுதி, திறமை என அனைத்தும் உடையவன். “இவனே நமது தற்காலிகத் தலைவன்” என தேவர்கள் முடிசூட்டினர். மனமோகன ரூபனான நகுஷனை பின்புலத்திலிருந்து தான் ஆட்டிப் படைக்கலாம்; நேரடியாக அரசாட்சியில்லையெனினும், தனது கட்டளைப்படியே அவன் நடக்க வேணும்“ என தேவேந்த்ரன் நினைத்தான்.
ஆனால், ஒரு காலகட்டத்தில், இந்த்ரனின் மனைவி இந்த்ராணியையே பெண்டாள நினைத்தான் நகுஷன். அப்போது அவனுக்கு ஸப்தரிஷிகளின் சாபம் கிடைத்தது. இதனால் பாம்பானான். எதிர்பாராமல் (accidental) கிடைத்த பதவியை நகுஷன் இழந்தான். இதிகாஸ, புராணங்களிலுள்ள இக்கதையினை ஸ்வாமி தேசிகன் யாதவாப்யுதயத்தில் வர்ணிக்கிறார். பதவி பணிவைத் தர வேண்டுமே தவிர்த்து, பேராசையை தோற்றுவிக்கக் கூடாது.
நகுஷனின் வாழ்க்கை நமக்கு ஒரு பாடம் ஆயிற்று.
அன்புடன்
ஏபிஎன்
Sri #APNSwami
இது போன்ற கட்டுரைகளைப் படிக்க…
https://apnswami.wordpress.comமேலும்… நாட்டு நடப்புகளுடன் சுவையான ஸம்ப்ரதாய விஷயங்களை அறிந்திட https://apnswami.wordpress.com/blogpages/
மற்றவர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்… உங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் பதிவு செய்யுங்கள்…