காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி உத்ஸவம் நடைபெற்றது!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாளான நேற்று காலை தீர்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. அனல் கொதித்த கோவில் குளத்தின் படிகளில் காத்திருந்த ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் புனித நீராடினர்!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோத்ஸவம் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 19ஆம் தேதி கருடசேவை யுடனும் 23ஆம் தேதி தேரோட்டமும் கோலாகலமாக நடைபெற்றது.
ஒன்பதாம் நாள் உத்ஸவமான நேற்று காலை பல்லக்கு உத்ஸவம் நடைபெற்றது. இதில் உபய நாச்சிமாருடன் வீதி உலா சென்ற பெருமாள் விளக்கடி கோவில் தெரு மூங்கில் மண்டபம் இரட்டை மண்டபம் நான்கு ராஜ வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தார். பின் கோவிலில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன
முற்பகல் 11 45க்கு கோவிலில் உள்ள அனந்தசரஸ் புஷ்கரணி தெப்பக்குளத்தில் பெருமாளுக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் புனித நீராடினர்!
காஞ்சிபுரத்தில் நேற்று காலை 10.30க்கே 39 டிகிரி வெப்ப நிலை நிலவியது! தீர்த்தவாரி நடந்த குளத்தின் படிகளில் நிற்பது தீ மிதிப்பது போல் அனல் தகித்தபடி இருந்தது. அதையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள் படிகளில் காத்திருந்து வரதராஜ பெருமாளை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்! தொடர்ந்து கோயில் தெப்பக் குளத்தில் புனித நீராடினர்!
பின்னர் நேற்று இரவு புண்ணியகோடி விமானம் உத்ஸம் நடந்தது. பத்தாம் நாள் உத்ஸவமான இன்றுடன் வைகாசி பிரம்மோத்ஸவம் நிறைவு பெறுகிறது.