ஸ்ரீ APNSwamiயின் எழுத்தில்
“வரம் தரும் மரம்”
(அத்தி வரதர் வைபவம்)
பகுதி – 1 – பூவில் பிறந்த பிரமன்
நான்கு யுகங்களில் முதன்மையான க்ருதயுகம். படைக்கும் இறைவனாம் நாராயணன் பாற்கடலில் படுத்துக் கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் உள்ளான். இதற்கு முன்னதான நான்கு யுகங்களின் முடிவான கலியுகத்தில், மக்களின் பாவங்கள் அதிகமாகத் தொடங்கின. தர்மம் முழுவதுமாக அழிந்து அதர்மம் தலைவிரித்தாடத் தொடங்கியது. கொடூர குணம் கொண்டவர்களாக ஜீவன்கள் கொலை பாதகங்களைச் செய்ய ஆரம்பித்து விட்டனர். இனியும் பாவிகளின் பாரத்தை பூமி தாங்காது என உணர்ந்த பகவான், அனைத்தையும் ஸம்ஹாரம் செய்தான்.
காக்கும் கடவுள் அழித்தானா! எனில், ஆம்!! அனைத்தும் அழியாமல் இருப்பதற்காக அழித்தான். இஃதென்ன விந்தை!! வார்த்தைகளின் வெளிப்பாடுகளில் தெளிவில்லையே! எனத் தோன்றும். ஆனால் அதுதான் உண்மை. தொடர்ந்து செய்யும் தீமைகளினால் ஜீவன்கள் மீளா நரகத்தில் விழுந்து உழலுவார்கள். அத்தகையவர்களைக் காப்பாற்ற வேண்டுமெனில், அழிக்க வேண்டும். மஹாப்ரளயத்தை உண்டு செய்து, அழித்துப், பின்னர் அனைத்தையும் முன்போல உண்டாக்க வேண்டும்.
அனைத்துலகும் காக்கும் அருளாளன், அனைத்துக்கும் அதிபதியான எம்பெருமான், ப்ரளயம் (ஊழி வெள்ளம்) எனும் காரணத்தை முன்னிட்டு உலகனைத்தையும் தனது வயிற்றுனுள் வைத்துக் காக்கிறான். பெருவெள்ளத்தில் சிக்கியவர்களை கரையேற்றும் போது, உலகத்தை வயிற்றுள் வைத்து காப்பாற்றுதல் நிகழ்கிறது. வெளியிலிருந்து பார்க்கும்போது அழிவின் காரியமாக ப்ரளயம் தோன்றினாலும், ஆக்கபூர்வமான படைப்பிற்கு முந்தைய நிலை இது, என்பதை உணர வேண்டும்.
வெள்ளம் வடிந்த பின்பு, இனி மீண்டும் ப்ரபஞ்ச ச்ருஷ்டி செய்ய வேண்டுமல்லவா! அதைத்தான் தற்போது பாற்கடலில் படுத்துக் கோண்டு யோசிக்கிறான் பரந்தாமன். தனது வயீற்றினின்றும் ஒரு பிள்ளையை முதலில் பிறப்பித்து, அவனிடம் ப்ரபஞ்சத்தைப் படைக்கும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுத், தான் சிறிது காலம் ஓய்வெடுக்க எண்ணினார். நீண்டதொரு ஆலோசனைக்குப் பிறகு பரந்தாமன் நாபியிலிருந்து (வயிறு) ஒரு தாமரை நீண்டது. பரந்தாமன் பத்மநாபனானான். அத்தாமரையில் பிறந்த பிள்ளைக்கு, திசைமுகன் (நான்முகன்) எனப் பெயர் சூட்டினான். அவனே ப்ரம்மதேவன்.
‘நாபி‘ என்றால் ‘தொப்புள்‘ என்பது பொருள். பெருமானின் தொப்புள்கொடியிலிருந்து பிறந்தான் ப்ரம்மா. அதனால் அவன் நாராயணனின் முதல் பிள்ளையானான்.
“பிரமனே! இவ்வுலகைப் படைத்து அவரவர்களுக்குரிய செயல்களில் ஜீவன்களை நிலை நிறுத்துவது உனது பொறுப்பு” என அன்புக் கட்டளையிட்டான்.
“எவ்வளவு பெரிய பொறுப்பு!!! அதைவிட, பாக்கியம் என்று சொல்வதுதானே சரி?!! நான்குபுறமும் நோக்கியுள்ள தனது நான்கு முகங்களாலும் இடைவிடாது வேதாத்யயனம் செய்து வந்ததால் பிரமனுக்குக் கிடைத்த பாக்யம் இது. வேதத்தைச் சொன்னால், வேதபுருஷனாம் நாராயணன் மகிழ்வானன்றோ! “தந்தை சொல் மிக்க மந்திரமில்லை“ என்பர் பெரியோர். தந்தை நமக்குச் செய்யும் உபதேசம்தான் வாழ்க்கையின் வழிகாட்டியாக விளங்கும் மந்திரம்.
மற்றொன்றையும் காணலாம். மந்திரம் என்றால் வேதம். அந்த வேதம், பகவானாலேயே பிரமனுக்கு முழுதும் உபதேசிக்கப்பட்டது. அந்த வேதத்தின் பொருள் என்ன? என்றால், அது ‘தந்தையின் சொல்‘. ஆம்!! அகில உலகின் ஆதிநாயகனாக விளங்கும் பரமாத்மா தந்தை; அவனைச் சொல்லும் வேதம், மந்திரம். வேதங்கள் முழுதும் நாராயணனையே பரம்பொருளாகக் கூறுகின்றனவே. எனவே தந்தை சொன்ன சொல், மற்றும் தந்தையைச் சொல்லும் சொல் என இரண்டும், ஒன்றாகிய வேதமந்திரத்தை எப்போதும் ஓதி வந்தான் ப்ரம்மதேவன்.
தந்தையின் சொற்படி வேதத்தை ஓதியதால் கிடைத்த பெரும் பதவி, “ப்ரஜாபதி“ என்பதாகும். அதாவது “மக்களைப் படைக்கும் மகத்துவம் பெற்றவன்” என்று பொருள். நன்மக்களைப் பெறும் பெற்றோர் மகிழ்வர். நால்வகையான பிள்ளைகள் பிறந்தால் சற்றே கர்வமும் தலையெடுக்குமல்லவா!
விசித்ரமான இந்த ப்ரபஞ்சத்தை இறைவன் படைத்ததின் நோக்கமே நமது அகங்காரம் ஒழிய வேண்டும் என்பதற்குத்தான். இறுமாப்புடன் இருப்பது இறுக்கமான ஒருமனநிலையை உண்டாக்கும். தெளிந்த மனதோ சிந்தனையை சிறக்கச் செய்யும். அவரவர் விதிக்கப்பட்ட காரியங்களைச் செய்வதில் அகங்காரம் எங்கிருந்து உண்டாகும்?! நாபிஜாதனுக்கு ஆபிஜாத்ய மதம் உண்டானது. இதன் பொருள் அறிவது கடினம். அறிந்தால் அளவிடற்கரிய ஆனந்தம்.
அன்புடன்,
ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.
இது போன்ற கட்டுரைகளைப் படிக்க…
https://apnswami.wordpress.comமேலும்… நாட்டு நடப்புகளுடன் சுவையான ஸம்ப்ரதாய விஷயங்களை அறிந்திட https://apnswami.wordpress.com/blogpages/
மற்றவர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்… உங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் பதிவு செய்யுங்கள்..