சென்னையிலுள்ள, கந்தகோட்டத்து முருகனின் அருள் அளப்பரியது.
ஒரு சமயம், முருகனடியார்கள் எல்லாம் ஒன்று கூடி, நம் கோயிலுக்கு உற்சவ விக்ரகம் கண்டிப்பாக உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர்.
சிற்ப சாஸ்திர வல்லுணர்களின் திறமைசாலிகளைச் சலித்தெடுத்து, மிக நுடபறிவு கொண்ட ஒருவரை தேர்வு செய்தனர். சிற்ப சாஸ்திரரிடம், உற்சவ முருகனாக
பஞ்சலோகத்தில், விக்ரகம் ஒன்றை வார்த்து தரும்படி ஒப்படைத்தனர்.
சாஸ்திரரும் புடம்போட்டு எடுத்தபின், வார்ப்படத்தை பிரித்த போது, விக்ரகம், ‘மினு மினு’ வென மின்னியது, அதன் ஒளிச் சிதறல்கள் கண்களைக் கூசச் செய்தது.
ஆனால், வார்ப்படத்திலிருந்த பிரித்தெடுத்த பகுதிகள் பூராவும் முட்கள்போல சிறு பிசிறுகளாய் இருந்தன.
கோயில் பொறுப்பாளர்கள் அனைவருமாக சேர்ந்து, சிற்பசாஸ்திர முதன்மையாளரிடம், சிற்பம் நல்லா வந்திருக்கிறது. ஆனால், வெளித்துருத்தியிருக்கும் முட்கள் போலான பிசிறுகளை நீக்கினீர்களென்றால், சிற்பம் இன்னும் அழகாக இருக்கும் என்றனர்.
தலைமை சிற்பியும், சரி! துருத்திய பிசிறுகளை எல்லாம் சுத்தப்படுத்தி தருகிறேன் என்று சொல்லி, அதற்குண்டான கருவியுடன் விக்ரகத்தை தொட்டார்.
அவ்வளவுதான், சிற்பத்தை தொட்ட மாத்திரத்தில், மின்சாரம் தாக்கியவர்போல், தூரப் போய் விழுந்தார்.
பக்கத்திலிருந்தவர்கள் ஓடி வந்து, சிற்பசாஸ்ததரரை தூக்கி வைத்து ஆசுவாசப் படுத்தி என்ன ஆச்சு! ஐயா என்றனர்.
என் தேகமெல்லாம் மின்சாரம் பாய்ந்தது போலிருக்கிறது. ஒரே பதட்டமாக இருக்கிறது வாய் குழறி குழறிக் கூறினார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு தெளிந்து எழுந்த சிற்பி, கண்களில் மிரட்சியோடு ஆலயப் பக்தர்களை நோக்கி கைகளைக் கூப்பி, இந்த விக்ரகம் நீறு பூத்த அணலாக இருக்கிறது. இதைச் சுத்தத் தூய்மையாக்கும் சக்தி என்னிடம் இல்லை. என்னை விட்டு விடுங்கள், இது என்னால் இயலாது என்று கூறி போய்விட்டார்.
பிசிறுகளுடன் இருக்கும் உற்சவ விக்ரகத்தை தீண்டப் பயந்து, வழிபாட்டுக்கு எடுத்துக் கொள்ளாமல், விக்ரகத்தை ஒரு அறையில் இருந்தவாரே பாதுகாப்பாக வைத்து பூட்டி விட்டனர்.
இந்தச் செயலுக்குப் பின்பு, இரண்டு ஆண்டுகளும் கடந்து போய்விட்டன.
ஒருநாள், காசியில் இருந்து சாம்பையர் எனும் துறவி, கந்தகோட்டத்து முருகனைத் தரிசிக்க ஆலயத்திற்குள் புகுந்தார்.அவர் மூலவரைத் தரிசித்த பின், ஆர்வத்தோடு உற்சவர் இல்லையா? எனக் கேட்டார்.சிவாச்சாரியாரும், விக்ரகம் வார்ப்பெடுத்து உருவான விபரம் முதல், அனைத்தையும் சாம்பையரிடம் கூறிவிட்டு, ஆலய முக்கியஸ்தரரிடம் அழைத்துப் போய் கொண்டு விட்டு விட்டார்.
இதன்பின், கோயில் நிர்வாகிகளைச் சந்தித்த சாம்பையர், அந்த உற்சவ விக்ரகத்தை நான் பார்க்கலாமா? என்றார்.
சாம்பையருடைய தோற்ற கோலத்தைக் கண்டு கட்டுப்பட்ட நிர்வாகிகள், உற்சவர் இருந்த அறையைத் திறந்து விட்டனர்.
அறைக்குள் நுழைந்த சாம்பையர், சில நிமிடத்தில் வெளியே வந்தார். அப்போது அவர் உடல் சிலிர்த்த வண்ணமிருந்தது. இதை, ஆலய நிர்வாகிகளும் கூடியிருந்த பக்தர்களும் கண்கூடாகப் பார்த்தனர்.சாம்பையர், கூடியிருந்த அனைவரையும் பார்த்து, நீங்கள் அனைவரும் பாக்கியசாலிகள்! என்றார். நாங்கள் பாக்கியசாலிகளா?, எங்களுக்கு, நீங்கள் என்ன சொல்ல வர்றீங்க!. விபரமா சொல்லுங்க சாமி என்றனர் அனைவரும்.
இக்கோயிலில் உள்ள மூலவருக்கு எவ்வளவு சான்னித்தியம், இருக்கிறதோ, அதே சான்னித்தியம் இந்த உற்சவ மூர்த்தத்திலும் பொதிந்திருக்கிறது என்றார். விக்ரகம் இவ்வாறு அமைவது வெகு அபூர்வமானதுதான். இங்கு இது அமையப் பெற்றதனால்தான் உங்களை நான் பாக்கியசாலி என்றேன் என்றார். தன்னை வழிபடும் அடியார்களுக்கு மூலவரைப்போல், இந்த உற்சவரும் அளவிலா அருட்செல்வத்தை வழங்குவார் இவர்.
இவரைப் பார்த்து வணக்கம், தியானம், ஆராதனை செய்யலாமே தவிர, இவர் திருமேனியில் எந்த விதமான கருவிகளும் படக் கூடாது என்றார். ஆகையால் இந்தத் தன்மை கொண்ட உற்சவ விக்ரகங்களை ஆத்ம சக்தியால் மூலம் தூய்மைப் படுத்த முடியும். இதைத் தெரியாது தவிர்த்து, ஆயுதத்தால் தீண்டித் தொட முனைந்தால், அது நடவாது போய்விடும்.
எனவே, இந்த உற்சவரை ஆத்ம சக்தியால் நானே தூய்மை செய்து தருகிறேன் என்றார். நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த பண்டிதரான சாம்பையரின் வார்த்தைகளை அப்படியே ஏற்று மகிழ்ந்த ஆலய நிர்வாகிகளும், பக்தர்களும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தனர்.
தனி அறையில், உற்சவ விக்ரகம் வைக்கப்பட்டு, திரை போட்டு மறைக்கப்பட்டது.
வடிவேலனின் முன் அமர்ந்து, வேத மந்திரங்களைச் சொல்லி, ஆத்ம சக்தியால் உற்சவரின் திருமேனி மீது இருந்த பிசிறுகளை நீக்கினார் சாம்பையர். திரை விலக்கி வெளியே வந்தார் சாம்பையர்.
பேரானந்த ஒளிபொருந்திய உற்சவ முருகரைக் கண்ட கூட்டம் மொத்தமும்.
பரவசத்தோடு, “முத்துக்குமாரசுவாமிக்கு அரோஹரா” “முத்துக்குமாரசுவாமிக்கு அரோஹரா” எனக் கூறினார்கள்.
இப்போதும் நீங்கள் கந்தகோட்டம் சென்று உற்சவரைத் தரிசிப்பது, இந்த உற்சவரான முருகனைத்தான்.இருப்பிடம்:
அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் கந்தகோட்டம் சென்ட்ரல் ரயில்நிலையம் அருகில், சென்னை.
சென்னை பாரிமுனை அருகிலுள்ள கந்தகோட்டத்தில் கோயில் அமைந்துள்ளது.
சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஐந்து நிமிட நடையில் கோயிலை அடையலாம்.
மூலவர்: கந்தசுவாமி.
உற்சவர்: முத்துக்குமார சுவாமி.
அம்மன்/தாயார்: வள்ளி, தெய்வானை.
தல விருட்சம்: மகிழம்.
தீர்த்தம்: சரவணப் பொய்கை.
ஆகமம்/பூஜை: குமார தந்திரம்
ஆலயப் பழமை: 500-லிருந்து 1000 வருடங்களுக்குள்.
பாடியவர்கள்: சிதம்பரசாமி, பாம்பன் குமரகுருபரதாச சுவாமிகள், இராமலிங்க அடிகளார்.
திருவிழாக்கள்:
தையில்18 நாள் பிரதான திருவிழா, கந்தசஷ்டி, வைகாசி வசந்த உற்சவம், ஆடிக்கிருத்திகை, பங்குனி உத்திரம்.
தல சிறப்பு:
உற்சவர் முத்துக்குமாரர் தனிக்கொடிமரத்துடன் இருக்கிறார்.
ஆலய பூஜை காலம்:
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.
ஒவ்வொரு ஆலயத்தின் அருட்செயல்களை நாம் தெரிந்து கொண்டு அத்தலத்திற்கு வணங்கச் சென்றால், நமது மனம் அந்த அருட்செயலை எண்ணி வியந்த வண்ணம், அதற்கு தகுந்தவாறு நம் மனம் அதிதீத வணக்கத்தை மேற்கொள்ளும்.
இதனால் நம் மனம், தெளிந்த தன்மையுடன், பயந்த நெறியுடன் இயங்கிக் கொள்ளும். ஆறுமுகனின் அருளாடலால் வெளிப்பட்ட அந்த உற்சவ வடிவத்தை இன்றும் கந்த கோட்டத்திற்குச் சென்றால் தரிசிக்கலாம்!
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும்
உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவுகல வாமைவேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை
பேசா திருக்க்வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்
பிடியா திருக்கவேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை
மறவா திருக்கவேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில்நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.
வள்ளலாருக்கும், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகளுக்கும், பாம்பன் சுவாமிகளுக்கும் அருள் புரிந்த கந்தக் கோட்ட கந்தசுவாமி, நமக்கும் அருள் புரிவார்!