
காரியாபட்டி அருகே ஆவியூரில் கோயில் திருவிழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது – இதில் 60க்கும் மேற்பட்டோர் மாடு முட்டியதில் காயம்
விருதுநகர் மாவட்டம்,
காரியாபட்டி அருகே ஆவியூரில் ஸ்ரீ கருப்பண்ணசாமி கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஆவியூர் வடக்கு தெரு பங்காளிகள் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
கடந்த 2012-ம் ஆண்டு கடைசியாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி, ஜல்லிக்கட்டு தடை, கொரோனா தடை போன்ற பல்வேறு காரணங்களால் 10 ஆண்டுகளாக ஆவியூரில் நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று ஊர் மக்களின் முயற்சியால் சிறப்பாக நடைபெற்றது.

காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க வந்த காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவபரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் களத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தலின் பேரில் ஆன்லைன் மூலம் சுமார் 4500 க்கும் மேற்பட்ட காளைகள் விண்ணப்பித்திருந்த நிலையில் அதில் குலுக்கல் முறையில் சுமார் 700-க்கும் மேற்பட்ட காளைகள் தேர்வு செய்யப்பட்டது.
அதில் முதலாவதாக கோவில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து மற்ற காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்கினர். இதில் பல காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் சென்றது.
ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன