அன்பு ! அஃதொன்றே இறைவனை நமக்குப் பெற்றுத் தரவல்லது !!
கோபாலாஜிர கர்த்தமே விஹரஸே விப்ராத்வரே லஜ்ஜஸே
ப்ரூஷே கோகுல ஹுங்க்ருதை : ஸ்துதி சதைர் மௌனம் விதத்ஸே விதாம் |
தாஸ்யம் கோகுல பும்ச்சலீஷு குருஷே ஸ்வாம்யம் ந தாந்தாத்மஸு
ஜ்ஞாதம் க்ருஷ்ண தவாங்ரி பங்கஜயுகம் ப்ரேம்ணாசலம் மஞ்சுளம் ||
விளக்கம் –
ஒரு பக்தர் கண்ணனைத் தேடிச் சென்று கொண்டிருந்தார்.. அந்தணர்களின் யாகசாலையில் அவன் இருக்கக்கூடும் என்று அவருக்குச் சொல்லப்பட்டது.. அங்கே விரைந்தார்.. விறைப்பாகவும் கடுகடுவென்ற பார்வையுடனும் , வருவார் போவார் ஆராயாது பலர் அங்கே யாகத் தீ வளர்த்துக் கொண்டிருந்தனர்.
இந்த பக்தரைக் கண்டுகொள்வாரில்லை.. கண்ணனையும் அங்கே காணவில்லை.. தேடிக் களைத்த அவர், அடுத்ததாகப் பலர் கூடி இறைவனைத் தோத்திரம் செய்யுமிடத்திற்கு அவனைத் தேடிச் சென்றார்..
மெத்தப் படித்த பண்டிதர்கள் பலர் அங்கே காணக் கிடைத்தார்கள்.. வாக்யார்த்தம், வேத விசாரம் இதெல்லாம் நடந்து கொண்டிருந்தது.. அங்கும் இவரைக் கண்டு கொள்வாரில்லை.. கண்ணனையும் அங்கே காணோம்.. அசரீரி போலே குரலாவது கொடுத்தானா என்றால் அதுவுமில்லை..
எங்கே இருப்பான் அவன் என்றெண்ணியவாறே நடந்த பக்தரை, என்னுடன் வாரும் என்று சொல்லி மற்றொரு பக்தர் அழைத்து சென்றார்..
முன்பின் தெரியாதவர் இப்படித் தரதரவென்று தன்னை எங்கே இழுத்துச் செல்கிறார் என்று நினைத்தபடி மூச்சிரைக்க அவருடன் ஓடிக் கொண்டிருந்தார் பக்தர்..
என்னை விடும் ஓய் !! எங்கே என்னை அழைத்துக் கொண்டு போகிறீர் நீர் ?! சாப்பாட்டிற்கா ?? எனக்கு அதெல்லாம் வேண்டாம் !! நான் பரமாத்மாவைக் காணும் பசியுடையேன்.. வயிற்றுப் பசி எனக்கில்லை.. என்னை விடும் என்று இந்த பக்தர் கத்துவதை அந்தப் பெரிய மனிதர் காதிலேயே வாங்கவில்லை..
சற்று நேரத்தில், இதென்ன திடீரென்று கோமிய கோமயங்களின் ( மாட்டு மூத்திரம் & மாட்டுச் சாணம் ) நாற்றம் வீசுகின்றதே !
இந்த ஆள் நம்மை எதற்காக மாட்டுத் தொழுவத்திற்கு அழைத்து வந்திருக்கிறார் என்று திகைத்தார்..
இவர் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போமவர் பேசலானார் !
ஸ்வாமி ! நீர் தேடும் பரமாத்மா இங்கு தான் இருக்கிறான்..
பக்தர் திடுக்கிட்டார் ! என்னது ?! பரமாத்மா இங்கிருக்கிறாரா ??
படித்த வித்வான்கள் ஸபையில் அவர்கள் பேசுவதை செவி மடுக்காத தெய்வம் ; அவர்கள் ஸ்தோத்திரங்களைக் கண்டுகொள்ளாத பெருமான் இங்கென்ன செய்கிறான் ? என்று வினவினார்..
வாருமே அவனையே கேட்டு விடலாம் என்றார் மற்றவர்..
இருவரும் கண்ணனுக்கு அருகிலே சென்றார்கள்..
அவனோ மாடுகளுடனும் கன்றுகளுடனும் பேசிக்கொண்டிருந்தான்.. ஹும் ஹும் என்றே பசுக்கள் கனைத்திட; ஏதோ அர்த்தம் புரிந்தவனாய், தலையாட்டிக்கொண்டு , அவைகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான் இறைவன் !
பக்தர் அழுத கண்ணீரோடே கண்ணனையே கேட்டார்..
ஹே ! பரமாத்மா !! அங்கே பலர் உன்னைத் துதித்துக் கொண்டிருக்க ; நீயோ இங்கே இவைகளோடே ( பசு, கன்றுகளோடே ) பேசிக் கொண்டிருக்கிறாயே ? எங்கானும் ஈதொப்பதோர் மாயமுண்டோ ? என்றார்..
கண்ணன் சொன்னான்..
ஓ !! அந்த ஸபா மண்டபத்தில், ஸ்துதிகளும் வாக்கிய விசாரங்களும் செய்பவர்களைச் சொல்கிறீரா ?!
அவர்கள் வித்யையினால் ( படிப்பினால் ) என்னையறிவதை விட்டு, வித்யையையே அடையப்பட வேண்டியதாக எண்ணுமவர்கள்.. தங்கள் அறிவில் இறுமாப்பு அவர்களுக்கு !
அவர்கள் முன்னே நிற்பதை விட என்னையே உயிராகவெண்ணும் கோபிகைகளின் பாதம் பிடிப்பதில் சுகம் காண்கிறேன் நான்..
புலன்களையடக்கியாளும் அம்முனிவர்களை விட , அவர்களுக்குத் தலைவனாய் இருப்பதை விட, இந்தக் கோபிகைகளுக்குத் தொண்டனாயிருப்பதில் ஸுகம் காண்கிறேன் நான்..
யாகாதிகள் நடக்குமிடத்திற்குச் செல்வதை விட , அங்கு ஒலித்திடும் மந்திரங்களை விட , பசு கன்றுகளின் ஹும் ஹும் என்கிற ஒலி எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது !!
திவத்திலும் பசுநிரை ..உவத்தி என்றும் கன்று மேய்த்தினிதுகந்த காளாய் என்றும் ஆழ்வார்கள் பாசுரங்கள் உள்ளனவே !!
இடையர்களின் வீட்டு முற்றத்தில் ஓடும் சேற்றில் புரண்டு கிடக்கை ; அதனையே பெரிதென எண்ணுகின்றேன் நான் !!!!
என்னுடைய பாதங்கள் தூய அன்புடையாரை நோக்கிச் செல்லுமேயொழிய ; தங்கள் அறிவைப் பெரிதெனவெண்ணும் ‘அறிவாளிகளை’ நாடாது !
தூய்மையான அன்பொன்றினால் மட்டுமே நான் அடையத்தக்கவனாக இருக்கிறேன் என்றுரைத்தான் கேசவன் !
பக்தர் கண்ணீர் உகுத்தவாறு அவனைத் தொழுது வலம் வந்தார் !!
– அக்காரக்கனி ஸ்ரீநிதி