spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்இன்று... ஆளவந்தார் திருநட்சத்திரம்!

இன்று… ஆளவந்தார் திருநட்சத்திரம்!

- Advertisement -
alavanthar swami

ஆளவந்தார்: இன்று ஆளவந்தார் திருநட்சத்திரம்
ஆடி உத்திராடம் (02.08.2020)

இவருடைய தனியன்:
யத் பதாம்போருஹத்யாந வித்வஸ்தாசேஷ கல்மஷ:
வஸ்து தாமுபயாதோஹம் யாமுநேயம் நமாமி தம்

பொருள் – எந்த ஒருவரின் தாமரை போன்ற திருவடிகளைத் த்யானிப்பதன் மூலம் எனது அனைத்துப் பாவங்களும் நீங்கப் பெற்றனவோ, எதனால் நான் இந்த உலகில் ஒரு மதிக்கத்தக்க பொருளாக உள்ளேனோ, அப்படிப்பட்ட பெருமை உடைய யாமுனாசார்யரை வணங்குகிறேன்.

சுசௌ மால்யுத்தராஷாடா ஜாதம் யாமுநதேசிகம் ஸ்ரீராம மிச்ர ஸரோஜாச்ரித மாச்ரயே

பொருள் – ஆடி உத்ராடத்தில் அவதரித்தவரும் ஸ்ரீராமமிச்ரர் என்ற மணக்கால் நம்பியின் திருவடித் தாமரைகளை ஆஸ்ரயித்தருமான யாமுநாசார்யர் என்ற ஆளவந்தாரை ஆஸ்ரயிக்கிறேன்

வாழி திருநாமம்:

மச்சணியும் மதிளரங்கம் வாழ்வித்தான் வாழியே
மறை நான்கும் ஓருருவில் மகிழ்ந்துகற்றான் வாழியே
பச்சையிட்ட ராமர்பதம் பகருமவன் வாழியே
பாடியத்தோன் ஈடேறப் பார்வைசெய்தோன் வாழியே
கச்சி நகர் மாயனிரு கழல் பணிந்தோன் வாழியே
கடக உத்தராடத்துக் காலுதித்தான் வாழியே
அச்சமற மனமகிழ்ச்சி அணைந்திட்டான் வாழியே
ஆளவந்தார் தாளிணைகள் அனவரதம் வாழியே

வரலாறு:

திருக்குடந்தையில் எழுந்தருளியிருக்கும் சார்ங்கபாணி என்ற ஆராவாமுதன் வழி வகுக்க, நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை “தேடி கிடைக்கப்பெற்று” நாட்டிற்களித்தவர் நாதமுனிகள். இவருடைய பேரன் ஆளவந்தார். இருவரும் காட்டுமன்னார் குடியில் (வீரநாராயணபுரத்தில்) அவதரித்தவர்கள். ஈசுவரமுனிக்கு மகனாக கிபி. 912 ஆம் ஆண்டு ஆடிமாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தார். வைணவ ஆச்சாரியர், நாதமுனிகளின் சீடரான மணக்கால் நம்பி, ஈசுவரமுனியின் மகனுக்கு யமுனைத்துறைவன் என பெயர் சூட்டினார். மணக்கால் நம்பிக்குப் பிறகு ஆசாரிய பட்டம் பெற்றவர். யமுனைத்துறைவன் என்ற ஆளவந்தார். இராமானுசரின் முதன்மை குரு. திருமலையில் திருவேங்கடவன் பூமாலைகளை சேர்த்துவைக்கும் இடம் இவருடைய பெயரால் யமுனாத்துறை என்று அழைக்கப்படுகிறது.

நாதமுனிகள், தன் மகன் ஈசுரமுனிக்குப் பிறக்கும் குழந்தைக்கு யமுனைத்துறைவன் எனப் பெயர் சூட்டி, வைணவத் திருமறையெழுத்துக் காப்புப் புகட்டுமாறு தன் மாணாக்கர் உய்யக்கொண்டாரை வேண்டிக் கொண்டு, திருநாடு சென்றார். அந்தப் பணியை உய்யக்கொண்டார், தன் மாணாக்கர் மணக்கால் நம்பியிடம் ஒப்படைத்துவிட்டுக் காலமானார். மணக்கால் நம்பி ஈசுவரமுனியின் மகனுக்கு முறைப்படி யமுனைத்துறைவன் எனப் பெயர்சூட்டி வாழ்த்தினார்.

மகாபாஷ்ய பட்டரிடம் யமுனைத்துறைவன் பால கல்வி பயின்று வந்த காலத்து, பட்டருக்கு அரசவையிலிருந்து ஒர் ஓலை வந்தது. அதில் பாஷ்ய பட்டர் ஆக்கியாழ்வானை வாதில் வெல்ல வேண்டும் இல்லையேல் தோல்வியை ஒப்புக்கொண்டு கப்பம் கட்டவேண்டும் என எழுதப்பட்டிருந்தது. ஆக்கியாழ்வான் முன்னமே பலமுறை இவ்வாறு பலரை வென்று தனக்கு அடிமையென எழுதி வாங்கிக்கொண்டு அவர்களிடம் கப்பம் பெறுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான்.

அவ்வண்ணமே வந்த கடிதத்தை கண்ணுற்று வருத்தம் கொண்ட மகாபாஷ்ய பட்டரின் வருத்தம் தீரும் வண்ணம், யமுனைத்துறைவன், தான் தன் குருவுக்கு பதிலாக அச்சவாலை ஏற்பதாக அரசவைக்கு மறுவோலை அனுப்பினார். அவையில் ஆக்கியாழ்வானுக்கும் யமுனைத்துறைவனுக்கும் இடையே சொற்போர் நடந்தது.

அரசி, சிறுபிள்ளையாக அமர்ந்திருந்த யமுனைத்துறைவன், “ஆணவம் கொண்ட ஆக்கியாழ்வானை வெல்வார்” என்று கூறினார். அரசன் ஆக்கியாழ்வான் தோற்றால், தன் நாட்டில் பாதியை யமுனைத்துறைவனுக்குக் தருவதாக கூறினான். அரசி இப்பிள்ளை தோற்றால் நான் பட்டத்தரசி நிலையைவிட்டு சேடிப்பெண்ணாக சேவை செய்வேன் என்றாள். சொற்போரில் ஆக்கியாழ்வான் கேட்ட அத்தனை வினாக்களுக்கும் விடை பகன்ற யமுனைத்துறைவன், இம்முறை தாம் மூன்றே கூற்றுகளை கூறுவதாகவும் அவற்றை மறுத்தால் தான் தோற்றதாகவும் ஒப்புக்கொள்வதாக யமுனைத்துறைவன் சவால் அறிவித்து,

“ஆக்கியாழ்வான் தாய் மலடி அல்லள்”
“இந்த அரசன் தர்மவான்”
“அரசபத்தினி, அரசனிடம் மட்டுமே தொடர்புடையவள்“

என்று கூறி மறுக்கச் சொன்னார். ஆக்கியாழ்வானால் மறுக்க முடியவில்லை. இக்கூற்றை யமுனைத்துறைவன் மறுத்து மெய்ப்பிக்க முடியுமோ? என்று அரசன் வேண்ட, யமுனைத்துறைவன் பின்வருமாறு மறுத்தார்.

ஆக்கியாழ்வான் தன் தாய்க்கு ஒரே மகன். ஒருமரம் தோப்பாகாது. அதுபோல ஒருபிள்ளை பெற்றவள், சாத்திரப்படி மலடி.

அரசன் தர்மவானாக இருந்தாலும் தன் குடிமக்கள் செய்த பாவங்கள் யாவும் அறநெறிப்படி அரசனையே சாரும். ஆகையால் இந்த அரசன் அறநெறியாளன் அல்லன்.

ஒவ்வொரு திருமண வைபவங்களிலும் மண மகன் சொல்லும் தோத்திரங்களில் ஒன்று “இவளை சந்திரன், கந்தர்வன் மற்றும் அக்னி ஆகிய தேவர்களிடம் இருந்து பெறுகிறேன்” என்ப தாகும். மக்கட்செல்வம், செல்வம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக இத்தேவதைகளின் ஆசிபெறுவதற்காக சொல்லப்படுவது.

அவ்வாறெனில் இவ்வாக்கியப்படி ஒவ்வொரு மணப்பெண்ணுக்கும் இந்நிலவுலகில் வாய்க்கும் கணவன் என்பவன் நான்காமவனாக கருதப்படுவான். இதற்கு உட்பட்ட இவ்வரசியும் அரசனிடம் மட்டுமே தொடர்புடையவள் அல்லள்.

இவற்றை செவிமடுத்த அரசி மிக்க மகிழ்ச்சிக்கொண்டு அந்த ஞானக்குழந்தை முன் மண்டியிட்டு நீர் எம்மை ஆளவந்தவரோ? என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். அரசன் தான் கூறியபடி வென்ற யமுனைத்துறைவனுக்குத் தன் நாட்டில் பாதியைத் தந்தான். அன்றிலிருந்து அரசியின் வாக்குப்படி யமுனைத்துறைவன், ஆளவந்தார் எனும் பெயரோடு அரசாட்சி செய்துவந்தார்.

ஆளவந்தார், அரசப் போகத்தில் திளைத்து வழி பிறழ்வதை உணர்ந்து வருத்தமுற்ற மணக்கால் நம்பி, தன் குரு, நாதமுனிகள் ஆணைப்படி ஆளவந்தாரை நல்வழிப்படுத்த அரசவைக்கு செல்லமுயன்றார்.

சாமான்யராக தென்பட்ட நம்பிகளை காவலர்கள் அனுமதிக்கவில்லை. ஆளவந்தாரை எவ்வாறாயினும் காணவிரும்பிய நம்பிகள் ஒரு திட்டமிட்டார். ஆளவந்தார் தூதுவளைக் கீரையை விரும்பி உண்ணும் பழக்கம் உள்ளவர். அதனால், ஆளவந்தாரின் சமையற் கூடத்தில் பணிசெய்யும் சமயற்காரனிடம் நட்புக்கொண்டு அவன் வாயிலாக தூதுவளைக் கீரையை ஆளவந்தாரின் சமையற்கூடத்திற்கு தினமும் வழங்கிகொண்டிருந்தார்.

பிறகு நிறுத்திக்கொண்டார். கீரையை உணவில் காணாத ஆளவந்தார் சமைப்பவர்களை கேட்க, அவர்கள் ஒரு பெரியவர் தினமும் வந்து கொடுத்துக் கொண்டிருந்ததையும் தற்போது அவர் வராததையும் கூறினர்.

ஆளவந்தார் அப்பெரியவரை தம்மிடம் அழைத்து வருமாறு பணிக்க, சேவகர்களும் அவ்வாறே செய்தனர். மணக்கால் நம்பியை நேரில்கண்ட ஆளவந்தார், “உமக்கு என்ன வேண்டும்” என வினவினார். நம்பி” கொள்ள வரவில்லை, கொடுக்க கொடுக்க வந்துள்ளேன்” என்று கூறினார்.

ஆளவந்தார் தருமாறு வேண்ட, நம்பி அவருக்குக் கீதை, திருவெழுத்து முதலானவற்றைப் புகட்டினார். நாதமுனிகள் குருகை காவலப்பனுக்கு அட்டாங்க யோக பயிற்சி அளித்தார். தன் மகன் ஈசுவரமுனிக்குப் பிறக்கப்போகும் மகனுக்கு அட்டாங்க யோகப் பயிற்சி அளிக்குமாறு வேண்டிக்கொண்டு காலமானார்.

ஈசுவரமுனிக்குப் பிறந்த குழந்தைக்கு மணக்கால் நம்பி யமுனைத்துறைவன் எனப் பெயர் சுட்டி, எட்டெழுத்து மந்திரத்தைப் புகட்டினார். அட்டாங்க யோக மறையைக் குருகை காவலப்பனிடம் கற்றுத் தெளியுமாறு அறிவுறுத்தினார்.

ஆளவந்தார் குருகை காவலப்பனை வேண்டியபோது, வேறொரு நாளில் வரும்படி எழுதி ஓலை ஒன்றைக் கொடுத்து பின்னொரு நாளில் படிக்கும்படி கூறி அனுப்பிவிட்டார். ஆளவந்தார் காஞ்சிபுரத்தில் சிலநாள் தங்கி திருவரங்கம் வந்து ஓலை பார்த்தபோது, குருகை காவலப்பன் பரமபதம் அடைந்தார்.

ஒரு முறை ஆளவந்தார், காஞ்சிபுரம் வந்தபோது, யாதவப்பிரகாசரின் சீடராய் விளங்கிய ராமானுஜரை திருக்கச்சி நம்பி மூலம் அறிந்து, இவரே ‘‘முதல்வன் பிற்காலத்தில் வைணவத்தின் சிறப்பினை பெருக்குவார்’’ என்று ஆசி வழங்கினார்.

ஆளவந்தார், தமது முடிவுநாள் நெருங்கும்போது தமது சிஷ்யரான பெரிய நம்பியை அனுப்பி இராமானுசரை அழைத்துவரச் சொன்னார். ஆனால், இராமானுசர் வருவதற்கு முன்னர் ஆளவந்தார் திருநாடு எழுந்தருளினார்.

பெரிய நம்பி (மகாபூரணர்) ஆளவந்தாரின் முதன்மை சீடர்களுள் ஒருவராய், அவருக்கு அடுத்தபடியாக ஆச்சாரியானாக மடத்தை அலங்கரித்தவர். இராமானுசரின் ஆச்சாரியர்களில் ஒருவர்.

ஆளவந்தாரின் பூதவுடலில் மூன்று விரல்கள் மடிந்து இருந்ததைக் கண்டு அங்கு கூடியிருந்தவர்களிடம், ஆளவந்தாரின் நிறைவேறாத மூன்று ஆசைகள் பற்றி அறிந்து, ‘அவரது அருளாலே அந்த ஆசைகளை அடியேன் நிறைவேற்றுவேன்’ என்று சூளுரைத்தார், இராமானுசர். உறுதி எடுத்துக்கொண்ட உடனே ஆளவந்தாரின் மடிந்த விரல்கள் நீண்டு ராமானுஜருக்கு ஆசி வழங்கின.

பிரம்ம சூத்திரத்திற்கு விசிஷ்டாத்வைதத்தை நிலைநாட்டி ஒரு உரை எழுதுவது; விஷ்ணுபுராணம் இயற்றிய பராசரர் மற்றும் பாகவதம் இயற்றிய வேதவியாசர் ஆகியோரின் பெயரை வைத்து அழியாத புகழுக்கு வழி கோலுவது; வேதத்தை அழகுத்தமிழில் பாசுரங்களாய் ஈந்த நம்மாழ்வாரின் பெயர், உலகில் என்றென்றும் வாழும்படிச் செய்வது. ராமானுஜர், அதன்படியே வியாஸ சூத்திரத்திற்கு பாஷ்யம் எழுதினார்.

நம்மாழ்வார் திருவாய் மொழிக்கு விரிவுரை அளித்தார். முதன் முதலில் வைணவ சம்பிரதாயத்தில் ஸ்லோகங்களை செய்தார். பராசரர் மற்றும் வேதவியாசர் பெயர்களை தன் சீடனாகிய கூரத்தாழ்வானின் குழந்தைகளுக்கு இட்டார். இவர்களில், விஷ்ணு ஸகஸ்ர நாமத்திற்கு எழுதிய விரிவான உரை இன்றும் பராசர பட்டரின் உரை என்று சிறந்து விளங்குகிறது.

ஆளவந்தார் சீடர்கள்
பெரிய நம்பி
திருக்கோட்டியூர் நம்பி
மாறனேரி நம்பி
பெரிய திருமலை நம்பி
திருமாலையாண்டான்
திருக்கச்சி நம்பிகள்.
(இவர்களில் சிலர் பகவத் ராமானுஜருக்கே ஆசார்யர்களாய் விளங்கினார்கள்.)

ஆளவந்தார் செய்த வடமொழி நூல்கள்:
சதுஸ்லோகி
ஸ்தோத்திர ரத்னம்
சித்தி த்ரயம்
ஆகம பிராமாண்யம்
கீதார்த்த சங்கிரகம்
புருஷ நிர்ணயம்
ஆத்மசித்தி
சம்வித்சித்தி
ஈச்வரசித்தி

நிதியைப் பொழியும் முகிலென்று நீசர்தம் வாசல்பற்றி
துதிகற்றுலகில் துவள்கின்றிலேன், இனி தூய்நெறிசேர்
எதிகட்கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்
கதிபெற்றுடைய, இராமானுசன் என்னைக் காத்தனனே

என்று இராமானுசர் துதிபாடும் பிரபந்தமான ப்ரபன்ன சாவித்திரி என்று வழங்கப்படும் இராமானுச நூற்றந்தாதியில் திருவரங்கத்தமுதனார், ஸ்ரீ ஆளவந்தாரின் பெருமையைக் கூறி, அவருக்கும் அப்பேர்பட்ட மகானின் திருவடித் தாமரைகளைத் தஞ்சமாகக் கொண்ட இராமானுசருக்கும் மங்களாசாசனம் செய்துள்ளார்.

ஆளவந்தார், ஆண்டாள் பாசுரங்களைப் போற்றி கீழ்காணும் இரண்டு தனியன்கள் பாடியுள்ளார்.

அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப் பன்னு திருப்பாவைப் பல்பதியம் – இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

சூடிக் கொடுத்தாள் சுடர்க் கொடியே தொல்பாவை பாடி அருளவல்ல பல்வளையாய் – நாடி நீ
வேங்கடவற்கு என்னை விதி ஒன்ற இம்மாற்றம் நாங்கடவா வண்ணமே நல்கு.

“ராமானுஜாங்க்ரிஸராணோஸ்மி குலப்ரீதீபஸன்
வாஸீத் ஸ யாமுனமுனேஸ் ஸச நாதவம்ஸ்ய |
வஸ்ஸ்ய பராங்குஸமுநேஸ்ஸ ச ஸோ தேவ்யா:
தாஸஸ்தவேதி வரதாஸ்மி தவேக்ஷணீய:
(கூரத்தாழ்வான் அருளிய “வரதராஜஸ்தவம்” ஸ்லோகம்)

ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்

  • அடியேன் சேஷாத்ரி ராமானுஜ தாசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe