― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்ராமர்தான் வேண்டும்: பிருந்தாவனத்தில் துளசி ராம தரிசன மண்டபம் ஏற்பட்ட வரலாறு!

ராமர்தான் வேண்டும்: பிருந்தாவனத்தில் துளசி ராம தரிசன மண்டபம் ஏற்பட்ட வரலாறு!

- Advertisement -
tulsirammandir1

வால்மிகியின் மறு அவதாரமாக துளசிதாசர் கருதப்படுகிறார். பவிஷ்யத் புராணத்தில் பரமசிவன், பார்வதியிடம் கூறுகிறார், “ஹனுமானிடம் வால்மீகி முனிவர் கலி யுகத்தில் பிறந்து எளிய பேச்சு நடையில் ராமாயணத்தை பாடும் பொருட்டு வரம் பெற்றுள்ளார்” என்று.

வால்மீகி ராமாயணத்தை போலவே துளசி ராமாயணமான ‘ராமசரித மானஸும்’ பக்தியுடன் வட இந்திய பக்தர்களின் வீடுகளில் நித்திய பாராயணமாக வாசிக்கப் படுகிறது. ‘சௌபாயி ‘ எனப்படும் இரண்டிரண்டு வரிப் பாடல்களாக மனத்தைக் கவரும் வகையில் ராமசரிதமானஸ் இயற்றப் பட்டுள்ளது.

tulsirammandir4

சித்ரகூடத்தில் வாழ்ந்த மக்களின் பேச்சு வழக்கு மொழியிலும், போஜ்புரி மொழியிலும், வ்ரஜ பாஷையிலும் கலந்து ‘அவதி’ என்ற மொழியில் ராமசரித மானசைப் புனைந்துள்ளார் துளசிதாசர். ராமசரித மானசில் உபயோகப்படுத்தப் பட்ட சொற்களும், உவமைகளும், ஹிந்தி மொழி மற்றும் உருது மொழி பேசும் வட இந்திய மக்களால் இன்றளவும் பழமொழிகளாகவும், உதாரணங்களாகவும் பேசப்பட்டு வருகின்றன.

துளசிதாசர் தனக்கென்று எந்த மடத்தையோ ஆச்ரமத்தையோ உருவாக்கவில்லை என்றாலும் அவருடைய வாழ்க்கையும், எழுத்துக்களும் பலருக்கும் சமய வாழ்விலும், அன்றாட வாழ்விலும் வழி காட்டும் விதமாக அழுத்தமான முத்திரையைப் பதித்துள்ளன.

tulsirammandir2

ராமசரித மானசைத் தவிர ஐந்து பெரிய நூல்களும், பல சிறிய நூல்களும் இயற்றி உள்ளார் துளசிதாசர்.

துளசிதாசர் எழுதிய மிகப் புகழ் பெற்ற ‘ஸ்ரீ ஹனுமான் சாலிசா’ என்ற நாற்பது வரிகள் கொண்ட பாடல் இன்றும் மக்களால் பக்தியுடன் பாடப்பட்டு வருகிறது. மக்களால் நித்திய பிரார்த்தனை கீதமாக மிகவும் நம்பிக்கையுடன் பாடப்படும் ஸ்லோகம் ஸ்ரீஹனுமான் சாலிசா.

ராமசரித மானசின் ஆரம்பத்தில் துளசிதாசர், ‘இந்நூல் நம் சனாதன தர்மத்தின் வேத, புராண, இதிகாசங்களை அடிப்படையாகக் கொண்டது’ என்று கூறியுள்ளார்.

ராமரை விட ராம நாமம் உயர்ந்தது என்று அறுதியிட்டுக் கூறியுள்ளார் துளசி தாசர். ராம நாம ஜபம் செய்வதின் அவசியத்தை மிகவும் வலியிறுத்தி உள்ளார்.

தென்னிந்தியாவில் சிவ பக்தர்களான 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்று தொகுப்பை பெரியபுராணமாக சேக்கிழார் எழுதியதைப் போலவே, வட இந்தியாவில் நபாதாஸ் என்பவர் ஹரி பக்தர்களின் கதைகளை தொகுத்து ‘பக்தமால்’ என்ற நூலை எழுதி யுள்ளார். இந்த ‘பக்த மால்’ என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு தான் மகிபாடி (Mahipaati) என்ற பக்தர் ‘மகா பக்த விஜயத்தை’ எழுதி உள்ளார். நபாதாஸ் என்பவர் துளசி தாசரின் சம காலத்தவர். அவரும் துளசிதாசரை வால்மிகியின் மறு அவதாரம் என்றே பக்த மாலில் போற்றுகிறார்.

நபாதாஸ், தன் குரு ஸ்ரீஅக்ரதாஸ் என்பவரால், பாரத வர்ஷத்தில் உள்ள அனைத்து ஹரி பக்தர்களின் வரலாற்றையும், அவர் எந்த சம்பிரதாயத்தைச் சேர்ந்தவராயினும், சேகரித்து எழுதும்படி கட்டளை இடப்பட்டார்.

“எளிமையானவன் நான். என்னால் அது எப்படி சாத்தியம்?” என்று நபாதாஸ் கேட்ட போது, குரு அருளினார், “அனைத்து பக்தர்களும் அவர்களாகவே உன்னிடம் வந்து தங்களின் கதையைக் கூறி எழுதிவிட்டுச் செல்வார்கள் ” என்று.

tulsirammandir3

இவ்விதமாக சத்திய யுகத்து பிரம்மாவின் வரலாறு முதல் அனைத்து அறிந்த மற்றும் அறியாத பக்தர்களின் வரலாறுகள் எல்லாம் இந்நூலில் தொகுக்கப் பட்டுள்ளன. நபாதாசுக்குப் பிறகு அவருடைய சிஷ்யரான பக்த பிரியாதாஸ் என்பவரால் சைதன்ய மகாபிரபு போன்ற பக்தர்களின் வரலாறுகள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு சேர்க்கப் பட்டுள்ளன. பக்தமாலில் முஸ்லிம் மகான்களின் வரலாறுகளும் இடம் பெற்றிருப்பது சிறப்பான அம்சம். மற்ற கிறிஸ்தவ முஸ்லிம் மத நூல்களில் இது போல் வேறு மத மகான்களைப் பற்றி போற்றி இடம் பெற்றிருக்குமா என்பது சந்தேகமே!

பக்தமாலில் நபாதாஸ், தான் துளசிதாசரை நேரே சென்று பார்த்ததாக விவரித்துள்ளார். ஒரு முறை பக்தமாலில் அவர் அறியாமலே, துளசி தாசரின் சரித்திரம் விரிவாக இடம் பெற்று இருப்பதை கவனித்து வியந்தார். ஸ்ரீ ராமரின் சரித்திரத்தை துளசி எழுதியதற்காக மகிழ்ந்து ஸ்ரீராமரே துளசி தாசரின் சரித்திரத்தை எழுதிச் சென்றதாக உணர்ந்து, துளசிதாசரை அயோத்யா சென்று தரிசித்தார் நபாதாஸ். ஆனால் ஆழ்ந்த தியானத்தில் இருந்த துளசி தாசர் நபாதாசைக் கவனிக்கவில்லை. நபாதாஸ் பிருந்தவனத்திற்குத் திரும்பி விட்டார். பின் விவரம் அறிந்த துளசிதாஸ், நபாதாசைப் பார்க்க பிருந்தாவன் வந்தார்.

அங்கு ஒரு மரத்தடியில் அமர்ந்து தவம் செய்கையில் துளசிதாசரின் எதிரில் ஸ்ரீகிருஷ்ணர் தரிசனம் அளித்தார். கண் திறந்து பார்த்த துளசி தாசர், கிருஷ்ணனின் அழகில் சொக்கிப் போனார்.

கண்களை மூடியபடி அவர் கூறினார், “பிரபோ! உன் அழகை நான் என்ன வென்று வர்ணிப்பேன்? ஆனால் இந்த துளசி தாசரின் கண்கள் நீ வில்லும் அம்பும் பிடித்து ஸ்ரீ ராமனாக தரிசனம் கொடுத்தால்தான் திருப்தி அடையுமே தவிர, வேறு உருவத்தில் அல்ல. தனுஷ் பாணம் பிடித்த ஸ்ரீ ராமனுக்கு தான் என் தலை வணங்குமே தவிர வேறு அல்ல”

“kya baranau chabi aap ki, bhale bane ho nath, Per Tulsi mastak tab name jab dhanush baan lo haath”.

tulsirammandir4 1

என்று பிடிவாதம் பிடிக்கவே, ஸ்ரீ கிருஷ்ணரும் வேறு வழி இன்றி, தன் பிரிய பக்தரை திருப்தி படுத்துவதற்காக புல்லாங்குழலை போட்டு விட்டு வில்லும் அம்பும் பிடித்த ஸ்ரீ ராமனாக தரிசனம் அளித்தார்.

(நாரதர், துளசி தாசரை பிருந்தாவனத்தில் ஒரு கிருஷ்ணர் கோவிலுக்கு அழைத்து சென்றதாகவும் அங்கு தான் இந்நிகழ்ச்சி நடந்ததாகவும் கூட கூறப் படுகிறது.)

இந்த இடம் இன்றும் பிருந்தாவனத்தில் ‘துளசி ராம தரிசன ஸ்தலம்’ என்று போற்றப் பட்டு மக்களால் தரிசிக்கப் படுகிறது. இங்கு ஒரு மண்டபம் கட்டப் பட்டு, கர்பக்ரஹத்தின் வாயிலில் மொகலாயர் கால சிற்ப வேலைப் பாடுடன் சிறந்து பராமரிக்கப் பட்டு வருகிறது. துளசிதாசர் தவம் செய்த குடிலும் இங்கு உள்ளது.

துளசிதாசர் வரலாறு… சுருக்கமாக:

பரம பவித்ர தீர்த்த தலமான பிரயாகையின் அருகில் ராஜ்பூர் என்ற கிராமத்தில் ஆத்மாராம் துபே, ஹுலசி தம்பதிகளுக்கு 1532 ல் மகனாக பிறந்தார் துளசிதாஸ்.

துளசிதாசர் பிறந்தவுடன் அழவில்லையாம். அதோடு கூட அவர் வாயில் முப்பத்திரண்டு பற்களும் இருந்தனவாம். அவர் பிறந்த வேளை சரியில்லை என்றும், அதனால் தங்கள் குடும்பத்திற்கு கெடுதல் நேரலாம் என்றும் எண்ணிய பெற்றோர் அக்குழந்தையை வீட்டு வேலைக்காரியிடம் கொடுத்து வளர்க்கச் செய்தனர். துளசிதாஸின் இயற்பெயர் துளசிராம். அவருக்கு ஐந்து வயது ஆவதற்கு முன்பே தாய் தந்தையர் மரணமடைந்தனர். சிறிது காலத்திற்குள் வேலைக்கார மாதுவும் மரணமடைந்தாள்.

tulsidas

திக்கில்லாதவராக பிச்சை எடுத்து பிழைக்க ஆரம்பித்தார் துளசிராம். இரக்கமுள்ள சிலரார் போஷிக்கப்பட்டார். சிறிது காலம் கழித்து நர நாராயணானந்த சுவாமிகள் என்பவர் துளசிராமின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அவருக்கு ராம்போலா என்று பெயரிட்டார். அயோத்யாவிற்கு அழைத்து வந்து உபநயனம் செய்வித்தார். தாரக மந்திரத்தை உபதேசம் செய்தார். முதலில் அவரிடமிருந்துதான் துளசிதாஸ் ராம சரித்திரத்தை செவியாரக் கேட்டார்.

பின் காசியில் தங்கி, சேஷ சனாதன சுவாமிகளிடமிருந்து வேதங்களைக் கற்று கல்வி கேள்விகளில் சிறந்து, சொந்த கிராமமான ராஜ்பூர் திரும்பினார். அங்கு பாதுஷாவின் அரசாங்கத்தில் உத்தியோகத்தில் சேர்ந்து, இராமாயண பிரவசனம் செய்யத் தொடங்கினார். சில காலம் கழித்து ரத்னாவளி என்ற அழகான குணவதியை திருமணம் புரிந்தார்.

எவ்வளவு வித்யை கற்றிருந்தாலும் ஆன்மிக சாதனையில் முன்னேற முடியாமல் உலக இன்பம் துரத்தியது. மனைவி ரத்னாவளியின் உபதேசத்தால் தீவிர வைராக்கியம் பெற்று ஞானோபதேசம் செய்த தன் மனைவியை குருவாக எண்ணி வணங்கி, ராம தரிசனம் செய்யாமல் ஜன சமூகத்திடம் திரும்பக் கூடாது என்ற திட நிச்சயத்துடன் வெளி நடந்தார்.

“பகவான் பதித பாவனன்! நானோ பதிதன்… ஆகா! எங்களுக்குள் எப்பேர்பட்ட உறவு! பிரபு! உன் நாம பிராபவத்தை அறிந்து நான் உன் பாத சந்நிதியை சார்ந்துள்ளேன்” என்று ஆனந்த பாஷ்பத்துடன் ஏங்கியபடி துளசிதாசர் நடக்க தொடங்கினார். ஸ்ரீராமரின் தரிசனத்திற்காக ஏங்கி வாரணாசியை சென்றடைந்து தவம் செய்யத் தொடங்கினார் துளசிதாசர்.

ஒரு ராக்ஷசியின் உதவியால் ஹனுமானின் தரிசனமும், ஹனுமானின் அருளினால், ஸ்ரீ ராம தரிசனமும் பெற்றார் துளசி தாசர். ஸ்ரீ ராமரின கருணையினால் பல அற்புத அனுபவங்களை பெற்றார் துளசி தாசர்.

  • கட்டுரை: ராஜி ரகுநாதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version