நவராத்திரி ஸ்பெஷல்…
ஆன்மீக கேள்வி பதில்!
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
கேள்வி: லலிதா சகஸ்ரநாமத்தை யார் வேண்டுமானாலும் படிக்கலாமா? தெரியாமல் தவறுமாகப் படித்தால் அது தோஷம் ஆகுமா? அதாவது சிறுவர் சிறுமியர், கணவனை இழந்தவர்கள், தீட்டு உள்ளவர்கள் போன்றோர் படிக்கலாமா?
பதில்: லலிதா சஹஸ்ரநாமத்தை அனைவரும் படிக்கலாம் என்றாலும் எந்த எந்த சந்தர்ப்பங்களில் படிக்கலாம்… எந்தெந்த சூழ்நிலைகளில் படிக்கக்கூடாது என்று நியமம் உள்ளது. ஏனென்றால் இந்த ஸ்தோத்திரம் மந்திரங்களால் ஆனது.
அடுத்து… தெரியாமல் தப்பும் தவறுமாக படிக்கலாமா என்று ஒரு கேள்வி. நன்கு தெரிந்துகொண்டு தவறு இல்லாமல் படிக்க வேண்டும் என்பதே இதற்கு சரியான பதில்.
ஏனென்றால் சிலருக்கு பொருள் புரிந்து படிப்பது என்பது தெரியாமல் இருக்கலாம். இந்த நாமங்கள் பொருள் நிரம்பிய சொற்கள். உச்சரிப்பதில் தவறு நேர்ந்தால் பொருள் மாறிவிடும் அபாயம் உள்ளது. அப்போது மந்திரத்தை தவறாக உச்சரித்தால் ஏற்படும் தீய பலன்கள் ஏற்பட்டுவிடும். அதனால் தெரியாமல் தவறாகப் படிக்கலாமா என்று கேள்வி கேட்பதற்கு பதில் தெரிந்து கொண்டு தப்பில்லாமல் படிக்க வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை அழுத்தமாக கூற வேண்டியுள்ளது.
உதாரணத்திற்கு… “துஷ்டதூரா துராசாரசமனீ தோஷவர்ஜிதா” என்ற இந்த பாதத்தில் மூன்று நாமங்கள் உள்ளன. ஆனால் “துஷ்டதாரா, துராசாரா, சமனீதோஷவர்ஜிதா” என்று படித்தால் அது தவறாகிவிடும். அம்பிகையை நிந்தித்த தோஷம் ஏற்பட்டு விடும்.
அதனால் மொழி அறிந்தவர்களிடம் கற்றுக்கொண்டு தவறில்லாமல் படிப்பதற்கு முயற்சிக்க வேண்டும். எத்தனை முயற்சித்தாலும் தெரியாமல் ஏதாவது சிறு தவறு நேர்ந்து விட்டால் அப்போது அம்பிகையிடம் மன்னிப்பு கேட்பதற்கு நமக்கு தகுதி வரும். அப்படியின்றி தெரியாமல் தவறு செய்தாலும் அம்பாள் மன்னித்து விடுவாள் என்று கூறிக்கொண்டு தெரிந்து கொள்ளும் முயற்சியே எடுக்காமல் படிக்கக் கூடாது. அதனால் சிரத்தையோடு கற்றுக்கொண்டு படிக்க வேண்டும். இது மிகவும் முக்கியம்.
மேலும் ஒரு கேள்வி… யார் வேண்டுமானாலும் படிக்கலாமா என்று.
நியமத்தோடு தூய்மையாக படிக்க வேண்டும். தூய்மை என்றால் விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்றவற்றை படிப்பதற்கு எத்தகைய தூய்மை, எத்தகைய ஆச்சாரம் தேவையோ லலிதா ஸகஸ்ர நாமத்திற்கும் அதே தூய்மை தேவை. ஆனால் தீட்டு இருப்பவர்கள் படிக்கக்கூடாது. தீட்டுள்ளவர்கள் எந்த அனுஷ்டானமும் செய்யக் கூடாது. ஏனென்றால் மந்நிரங்கள் அனைத்தும் தெய்வீக சொரூபங்கள். அந்த நேரங்களில் அந்த மந்திரங்களை உச்சரிக்கக் கூடாது.
யாரானாலும் சரி தப்பில்லாமல் நியமத்துக்கு கட்டுப்பட்டு படிக்கலாம்.