நவராத்திரி ஸ்பெஷல்… ஆன்மீக கேள்வி பதில்!
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
கேள்வி: லலிதா தேவியின் மறுவடிவமான ஸ்ரீசக்ரத்தை எவ்விதம் வழிபடவேண்டும்? ஸ்ரீசக்கரம் வீட்டில் வைத்து பூஜிக்கலாமா?
பதில்:ஸ்ரீசக்கரம் வீட்டில் இருக்கலாமென்றாலும் வீட்டில் வைத்துக் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பது தெரிய வேண்டும்.
ஏனென்றால் மந்த்ரம், யந்த்ரம் இவை இரண்டுக்கும் தொடர்பு உண்டு. அம்பிகையின் யந்திரங்கள் பல உள்ளன. காளி யந்திரம், லலிதா யந்திரம் என்று… எத்தனையோ உள்ளன.
ஆனால் யந்த்ரத்தை உபாசிக்க வேண்டும் என்றால் அதன் மந்திரம் என்ன என்று தெரியவேண்டும். தந்த்ரம் என்ன என்று தெரியவேண்டும். யந்திரம், தந்திரம், மந்திரம் இவை மூன்றுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பு உண்டு.
தந்த்ரம் என்றால் தொழில்நுட்ப அறிவு. அந்த யந்திரத்தின் தேவதை என்ன? அந்த தேவதைக்கான மந்திரம் என்ன? அவற்றின் பரிவார தேவதைகள் யார் யார்? எந்த ஆவரணத்தில் யார் இருப்பார்கள்? இவற்றை அறிந்து கொண்டு, பூஜிக்க வேண்டிய வழி முறையை உணர்ந்து வழிபட வேண்டும். அவ்விதம் ஆராதிக்கக் கூடிய ஞானம் இருந்தால்தான் ஸ்ரீசக்கரம் வீட்டில் வைத்திருக்கலாம்.
சத்குருவை சரணடைந்து அந்த வழிமுறைகளை தெரிந்து கொண்டு அவ்விதமாக ஆராதிக்கும் போது கட்டாயம் ஸ்ரீசக்கரத்தை வீட்டில் வைத்திருக்கலாம்.
ஶ்ரீசக்ரமும் அம்பிகையின் சொரூபமே. அம்பிகை ஸ்ரீசக்கரத்தில் மட்டுமே அல்ல. அநேக ரூபங்களில் உள்ளாள்.
ஆனால் ஸ்ரீசக்கர பூஜை செய்வதாக இருந்தால் அதன் வழிமுறை தெரிந்து வழிபட முடிந்தால் மட்டுமே வீட்டில் வைத்து வழிபடலாம். வெறுமே வீட்டில் வைத்துக் கொண்டால் பலன் இல்லை.
யந்த்ரம் என்று ஒன்று இருந்தால் வழிபாடு என்று ஒன்று நடக்க வேண்டும். வழி முறையை அறிந்து பூஜிக்க வேண்டும்.