தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
சூரியனுக்கு அர்க்ய பிரதானம் எவ்வாறு செய்ய வேண்டும்? சூரியனுக்கு நமஸ்காரம் எத்தனை பிரியமானதோ அர்க்யமும் அதேபோல் பிரியதிமானது.
அர்க்யம் என்றால் ‘பூஜா திரவியம்’. அதனை எவ்வாறு அளிப்பது? இது குறித்து சற்று பார்ப்போம்.
இது மிக எளிதாக அனைவரும் செய்யக்கூடிய முறைமையை! இதில் கடினமானது எதுவுமில்லை. தினம் கூட செய்யலாம். அல்லது பிரத்தியேக பண்டிகைகளின் போது இந்த பூஜை முறையை கடைபிடிக்கலாம். அல்லது சப்தமி திதியிலோ ஞாயிற்றுக்கிழமைகளிலோ செய்யலாம். தினமும் சூரியனுக்கு அர்க்கியம் சமர்ப்பிப்பவர்களும் உள்ளார்கள்.
எவ்வாறு செய்ய வேண்டுமென்றால்…. தாமிர (செப்பு) பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவேண்டும். சூரியனுக்கு தாமிரம்தான் மிகவும் விருப்பமானது. வெள்ளிப் பாத்திரத்தில் செய்தால் செல்வச் செழிப்பு வெளிப்படுமே தவிர சூரியனுக்கு விருப்பமானதாக ஆகாது.
ஆதித்ய புராணத்தில் சூரியன் கூறுகிறான், “எனக்கு தாமிரமே மிகவும் பிடித்தமானது” என்று. எனவே சூரிய உபாசனைக்கு தாமிரப்பாத்திரம் சிறப்பானது. சில வீடுகளில் ஆண்டுக்கணக்காக தேய்த்து சுத்தம் செய்யாமல் இரும்பு போல கருத்து காணப்படுகிறது. ஆனால் செப்பு பாத்திரத்தை அப்போதைக்கப்போது தேய்த்து சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
தாமிர கலசத்தில் பவித்திரமான சுத்த ஜலம் நிரப்பி அதில் சிவப்பு சந்தனம் அல்லது குங்குமம் சேர்த்து சிவப்பு அட்சதை இட்டு சிவந்த மலர்களும் அருகம்புல்லும் சேர்த்து முழங்காலில் அமர்ந்து எதிரில் ஒரு தாம்பாளத்தில் ஒவ்வொரு நாமம் சொல்லி ஒவ்வொரு முறை அர்க்கியம் விட வேண்டும். அதுபோல் பன்னிரண்டு நாமங்கள்.
ஸ்காந்தபுராணத்தில் 72 நாமங்கள் கூறியுள்ளார்கள். அந்தப் பெயர்களைப் பார்த்தாலே வியப்பு ஏற்படுகிறது. அந்த நாமங்களின் பொருளைத் தெரிந்து கொண்டால் சூரிய சக்தியை இத்தனை விரிவாக அறிந்து கொண்ட பாரதிய மகரிஷிகளை வணங்காமல் இருக்க முடியாது.
பிரதானமாக துவாதச ஆதித்ய நாமங்களை எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு நாமமாக 12 முறை அர்க்யம் விடலாம். அல்லது பன்னிரண்டையும் ஒரு முறை கூறி ஒரே அர்க்யமாக விடலாம்.
மித்ரா, ரவி, சூர்யா, பானு, ககா, பூஷா, ஹிரண்யகர்பா, மரீசி, ஆதித்யா, ஸவிதா, அர்க்கா, பாஸ்கரா… இவற்றை ஒன்றாகக் கூறி ஒரே அர்க்கியமாக விடுபவர்களும் உள்ளனர்.
அல்லது மித்ராய நமஹ, ரவயே நமஹ, சூர்யாய நமஹா, பானவே நமஹ, ககாய நமஹ, பூஷ்ணே நமஹ, ஹிரண்ய கர்பாய நமஹ, மரீசயே நமஹ, ஆதித்யாய நமஹ, சவித்ரே நமஹ, அர்க்காய நமஹ, பாஸ்கராய நமஹ… என்றோ, சவித்ர சூர்ய நாராயணாய நமஹ என்று 13வது நாமத்தை இணைத்தோ அர்க்யம் விடலாம். பன்னிரண்டையும் ஒன்றாகச் சேர்த்து ஏழு முறை விடுவதும் உண்டு.
இந்த அர்க்ய விதானம் எளிதாகத் தோன்றினாலும் இதனால் கிடைக்கும் பலன்கள் அற்புதமானவை. இது ஆரோக்கியத்தை அளிக்க கூடியது. முன்வினைப் பயனால் நோய் உண்டாகிறது. எந்த பாவச்செயலால் நோய் ஏற்பட்டாலும் அந்த பாவங்களை நீக்கும் சக்தி சூரியனுக்கு உள்ளது. இதில் ஐயம் ஏதும் இல்லை.
சூரிய ஆராதனையில் சிறப்பானவை நமஸ்காரமும் அர்க்ய ப்ரதானமும்.
அடுத்து, சூரியன் ‘சப்த ப்ரியன்’. தேவதைகள் ஒலிப் பிரியர்கள். சப்தத்தில் இருந்து மந்திரங்கள் ஏற்பட்டன. மந்திரம் உச்சரிப்பதோ, நாமம் செல்வதோ சாமான்யமானவை அல்ல. அவற்றிலிருந்து எழும் அதிர்வுகளின் சக்தி அமோகமானது. நாமங்களை நாம் உருவாக்கவில்லை. வேதத்தில் அவை வெளிப்பட்டன.
பரமேஸ்வரனின் நாமங்களை மகரிஷிகள் திவ்ய செவிகளால் கேட்டார்கள். அவற்றையே நமக்களித்தார்கள். அவர்கள் உருவாக்கவில்லை. ஒவ்வொரு நாமமும் பகவான் எடுத்த ‘சப்தாவதாரம்’. ஒவ்வொரு நாமத்திற்கும் ஒவ்வொரு சக்தி உண்டு. சூரிய நாமங்களை கூறும் ஸ்தோத்திரங்கள் சூரியனின் அருளை நமக்கு பெற்றுத் தரும்.
சூரிய அர்க்ய மந்திரம்:
ஏஹி சூர்ய சஹஸ்ராம்ஸோ தேஜோராஸே ஜகத்பதே|
அனுகம்பயமாம் பக்த்யா க்ருஹாணார்க்யம் நமோஸ்துதே||
பன்னிரண்டு நாமங்களைக் கூறி அர்க்யம் விட்ட பின் இறுதியில் இந்த ஸ்லோகத்தை கூறி அர்க்யம் விட வேண்டும்.
‘ஏஹி’ என்றால் வரவேற்பு கூறுவது. “ஆயிரம் கிரணங்களைக் கொண்ட சூரிய பகவானே! ஜகத்திற்கு பதியான நீ தேஜஸ்ஸான பிரகாசங்களின் கூட்டம். என்னிடம் கருணை கொள்வாயாக! நான் நமஸ்கரித்து அளிக்கும் அர்க்கியத்தை ஏற்பாயாக!” என்பது இதன் பொருள்.
இன்னும் நிறைய கிரியைகள் இருந்தபோதிலும், இந்த ஒன்றை நாம் சரியாகச் செய்தாலே போதுமானது. இத்தனை எளிதாக அனைவரும் செய்யக் கூடியதாக உள்ள சூரிய வழிபாடு இது.
தினமும் சூரியனுக்கு நமஸ்காரம் செய்து விட்டு ஞாயிற்றுக் கிழமைகளிலாவது இந்த 12 நாமங்களைக் கூறி அர்க்யம் விடுவது சிறப்பானது. அதிலும் ரத சம்தமியான இன்று தவறாமல் சூரியனுக்கு அர்க்யம் சமர்ப்பித்து அவனருளைப் பெறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!