Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் தினசரி ஒரு வேதவாக்கியம்: 6. சிவ சங்கல்பம்!

தினசரி ஒரு வேதவாக்கியம்: 6. சிவ சங்கல்பம்!

dhinasari oru vedha vaakyam

தினசரி ஒரு வேதவாக்கியம்
சிவ சங்கல்பம்! 

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா 
தமிழில்: ராஜி ரகுநாதன் 

தன்மே மன: சிவ சங்கல்பமஸ்து||
— யஜுர்வேதம்

“என் மனம் சிவ (சுப) சங்கல்பத்தில் இருக்குமாக!”

எல்லாவற்றுக்கும் மனம்தான் காரணம். புலன்களின் உயிரோட்டத்திற்கு மனமே மூலம். மனம் செய்யும் சங்கல்பங்களே நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன.

“மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ:”

பந்தத்திற்கும் மோக்ஷத்திற்கும், சுகத்திற்கும் துக்கத்திற்கும் மனம்தான் காரணம்.

சங்கல்பத்தை பொறுத்தே செய்யும் பணியும்  அதன் விளைவும் இருக்கும். சங்கல்பம் தூய்மையாக இருந்தால் பணி சரிவர நடைபெறும். பலனும் சிறப்பாக இருக்கும்.

அத்தகைய சங்கல்பத் தூய்மையை அளிக்கும் வேத மந்திரம் இது. சுக்ல யஜுர் வேதத்தில் இந்த சிவ சங்கல்பம் ஒரு சூக்தமாக பல மந்திரங்களோடு  இணைந்து காணப்படுகிறது.

சிவம் என்பது சாஸ்வதமான சுபத்தை குறிக்கிறது. ‘சிவ’ என்ற சொல் உயர்ந்த தெய்வீக அர்த்தங்கள் நிறைந்தது.  இதற்கு ஸ்ரேயஸ், மங்களம், மோட்சம் என்ற பொருட்கள் உள்ளன.

சுயநலமான பொருளீட்டல் சிவம் அல்ல. தற்காலிக சுகமும் சிவம் அல்ல. பரிணாமத்திலும் கூட சுபமாக விளங்குவதே சிவம்.
அப்படிப்பட்ட ‘சிவம்’ நம் சங்கல்பமானால்  அனைத்தும் சத்தியமாக விளங்கும். சுந்தரமாகத் திகழும்.

இன்னுமொரு சிறப்பு ‘சிவ’ என்ற பதம் பரமேஸ்வரனைக் குறிக்கும் நாமம். சாசுவதமான மங்கள சொரூபமே சிவன். இந்த ஜகம் அனைத்தும் அவருடைய சங்கல்பமே! நம் சங்கல்பங்கள் அனைத்தையும்விட ஈஸ்வர சங்கல்பமே முக்கிய தூண்டுதலாகவும் பிரேரணையாகவும் உள்ளது.

அதனால் நம் சங்கல்பம் மகாதேவனின் சங்கல்பத்திற்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்பது கூட இந்த மந்திரத்தின் பொருளாகக் கருதலாம்.

நம் சங்கல்பம் ஈஸ்வர சங்கல்பமாக ஆக வேண்டும். அதாவது ஈஸ்வர சங்கல்பத்தோடு ஒன்றிணைய வேண்டும். அப்போது சாஸ்வதமான, கடக்க முடியாத கடவுளின் சங்கல்பத்திற்கு நம் சங்கல்பம் விரோதமாக மாறாது. அதன்மூலம் நினைத்தது ஒன்று நடப்பது வேறொன்றாக இருக்காது.

அது மட்டுமின்றி சிவனை நினைப்பதால் நம் சங்கல்பம் சக்தியோடு கூடியதாகி ஈசுவர சங்கல்பத்தைப் போலவே கச்சிதமான செயல்வடிவம் பெற்று நிறைவேறுகிறது.

இத்தனை உயர்ந்த அர்த்தங்களும் இன்னும் பல தெய்வீக கருத்துக்களும் இந்த வேத  வாக்கியத்தில் மறைந்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version