Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் தினசரி ஒரு வேத வாக்கியம்! 19. அசையாதவன் சூரியன்!

தினசரி ஒரு வேத வாக்கியம்! 19. அசையாதவன் சூரியன்!

வேத வாக்கியம்

அசையாதவன் சூரியன்!

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன் 

“யாத்ருகேவ தத்ருஸே தாத்ருகுச்யதே” – -ருக் வேதம்.

“எவ்வாறு தென்படுகிறதோ அவ்வாறு கூறப்படுகிறது”.

இந்தக் கூற்று சூரியனைப் பற்றி வேதம் கூறிய வாக்கியம். சூரியனை ஆராய்ந்து, பலப்பல விஸ்வ ரகசியங்களையும்… இறுதியில் பிரம்ம வித்யையும் கூட வெளியிட்டுள்ளது வேதக் கலாச்சாரம்.

சூரியன் உதிக்கிறான் என்றும் மறைகிறான் என்றும் நகர்கிறான் என்றும் நம் புராணங்கள் கூறுவது மேற்கூறிய வாக்கியத்தை ஆதாரமாகக் கொண்டே .

எப்படிப்பட்டவர் பற்றியும் நம் அனுபவத்தைப் பொறுத்து தான் நாம் பேசுவோம்.

சூரியனுக்கு ‘ஸ்தாணு:’, ‘ஸ்திர:’ என்ற  பெயர்களை வேதம் குறிப்பிடுகிறது. ‘அசையாதவன்’ என்பது இந்தச் சொற்களுக்கு பொருள்.

ஆனால் சூரியன் அசையாவிட்டாலும் நமக்கு நகர்வது போலவே தென்படுகிறான். நகரும் பூமி அசையாதது போல் தென்படுகிறது. இதில் எது உண்மை? இரண்டுமே உண்மைதான். எந்த நிலையில் உள்ளவர்களுக்கு அந்த நிலையே உண்மை.  

மண்ணாலான தேகம் உயிர்ப்போடு கூடியதாக தோன்றுவதற்கு எந்த சைதன்யம் மூல காரணமோ, அந்த சைதன்யமே உடலெங்கும் பாய்கிறது. இவ்வாறு அசைந்தும் அசைத்தும் வரும் சைதன்யத்தின் மூலப் பொருளான ஆத்மா, இதய குகையில் ஸ்திரமாக அசையாமல் உள்ளது. இப்போது சொல்லுங்கள்… எது அசைகிறது? எது அசையவில்லை? எதுவும் நம்மால் கூற இயலாது.

அதனால்தான் “ததைஜதி தன்னைஜதி” – “அது அசைகிறது, அசையவில்லை.  “தத்தூரே தத்வந்திகே” – “அது அருகில் உள்ளது, தூரத்தில் உள்ளது”.  “ததந்தரஸ்ய சர்வஸ்ய தது சர்வஸ்யாஸ்ய பாஹ்யத” – “அனைத்தின் உள்ளேயும் இருப்பது அதுவே, அனைத்திற்கும் வெளியே உள்ளது அதுவே” – இந்த வாக்கியம் நம் ஈசாவாஸ்ய உபநிஷத்தில் உள்ளது என்று கூறினால், ஏதோ குழப்பமாக உள்ளதே என்று மூஞ்சியை சுருக்குவார்கள். இதே கூற்றை ஒரு அணு விஞ்ஞானி எவ்வாறு கூறுகிறார் பாருங்கள்.

If we ask, for instance, the position of the electron remains the same, we must say ‘no’. If we ask whether the electron’s position changes with time, we must say ‘no’. If we ask whether the electron is at rest, we say ‘no’. If we ask whether the electron is in motion, we may say ‘no’. – டாக்டர் ராபர்ட் ஓ பென் ஹீமர்.

வேதாந்த ஞானத்தை வெளியிடுவதற்கு சூரியனை ஆராய்ந்து பல ஒப்பீடுகளைக் கூறியுள்ளார்கள். சூரியனும்  அவனுடைய ஈர்ப்பு சக்தியும் இல்லாவிட்டால் பூமிக்கு அசைவே இருக்காது. ஆனால் சூரியன் அசைவதில்லை. சைதன்யம் சூரியனுடையதா? பூமியுடையதா? என்று வினா எழுப்பினால் பூமியில் காணப்படும் சைதன்யம் அனைத்துமே சூரியனிடம் இருந்து வந்ததே என்று விஞ்ஞான புரிதலோடு பதில் கூறமுடியும். 

அதேபோல் மண்ணாலான உடலுக்கு உயிர்ப்பளிக்கும் உண்மையான சைதன்யம் ஆத்மா. நாம் பார்க்கும் ஜகத்திற்கு ஆத்மா சூரியன்தான் என்று வேதம் தெளிவுபடுத்துகிறது. “சூர்ய ஆத்மா ஜகத:”

“ஒரே சூரியன் அனைத்து ஜீவன்களுக்கும் தனித்தனியாக தென்படுவதை போல சர்வ வியாபகமான ஆத்மா ஒவ்வொருவரிலும் தனித்தனியாக இருப்பது போல் தோன்றுகிறது” என்று தெலுங்கு கவி போத்தனா விவரிக்கிறார்.

ஆத்ம தத்துவத்தை விளக்கிக் கொள்வதற்கு சூரிய உபாசனை பலவிதங்களில் உதவுகிறது. சூரியன் உதயமாகும், மறையும் நேரங்களுக்கு ஏற்றார் போல உலகில் ஒவ்வொரு உயிரும் பணிபுரிகிறது. விழித்தல், உறங்குதல் போன்ற செயல்களில் ஈடுபடுகிறது சூரியன் அந்த செயல்களைப் புரியும்படி தூண்டினானா? இல்லையே! ஆனால் சூரியன் இல்லாவிட்டால் இவை எதுவும் நடக்காது. ஆனால் சூரியன் இவற்றுக்கு பொறுப்பாளி கிடையாது. சாட்சி வடிவாக இருப்பவன். 

அதேபோல் ஈஸ்வரன், பரமாத்மா, ஆத்மா என்று கூறப்படும் பரம சைதன்யம் கூட அனைத்தையும் நடத்தி வைத்து, அதன் சாட்சியாக நிற்கிறது. அனைத்தும் தானே ஆனாலும் எதுவும் அதுவல்ல.

சூரியனின் கிரணங்களால் நீர் ஒளிவீசுகிறது, கல் தென்படுகிறது. மரங்களும் தென்படுகின்றன. பூக்கள் மலர்கின்றன. ஆனால் நீரின் குணமோ, கல்லின் இயல்போ, மரத்தின் பசுமையோ, மலரின் மணமோ அந்தக் கிரணங்களுக்கோ 
சூரியனுக்கோ ஒட்டாது. இவ்விதம் பலவிதங்களில்   சூரியனை ஒப்பிட்டு ஆத்ம தத்துவத்தை விளக்கி உள்ளார்கள்.

“யதா ப்ரகாசயத்யேக: க்ருத்ஸ்னம் லோகமிமம் ரவி:” – “ஒரே சூரியன் முழுமையான விஸ்வத்தையும் பிரகாசிக்கச் செய்வது போல உடலில் உள்ள ஆத்மா முழு உடலையும் சைத்தன்யத்தோடு பிரகாசிக்கச் செய்கிறது” என்பது கீதை வாக்கியம்.

கடவுளுடைய தத்துவ ஞானத்தைப் புரிந்து கொள்வதற்கு இயற்கையை பரிசீலிப்பது எத்தனை பயனளிக்கிறது என்பதை சாஸ்திரங்களை ஆதாரமாகக் கொண்டு அறியலாம். இவ்விதம் சூரிய சக்தியை ஆராய்வதன் மூலம் நாம் அனுபவிக்கும் வஸ்வ ரகசியங்கள் தெரியவருகின்றன.

நம் சாதனைகள் அனைத்தையும் காலப் பரிணாமங்களை அனுசரித்து ஏற்பாடு செய்து கொள்கிறோம். காலப் பரிணாமங்கள் அனைத்தும் சூரியனை அனுசரித்து ஏற்பட்டவையே.

நம் முன்னோர் சூரியனிடம் உள்ள பல்வேறு தெய்வ சக்திகளை தரிசித்து, விடியற் காலையில் இருந்து மாலை வரை வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு வித உபாசனைகளையும் நல்ல பழக்க வழக்கங்களையும் ஏற்படுத்தியுள்ளார்கள்.

ஒரே சத்தியத்தை சிறப்பான அறிவாற்றல் உள்ளவர்கள் பலவிதமாக கூறுவார்கள் –  “ஏகம்சத் விப்ரா பஹுதா வதந்தி” என்ற பிரசித்தி பெற்ற வேத வாக்கியம் கூட சூரிய மந்திரங்களோடு தொடர்புடையதே!

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version