விநாயகர் நான்மணி மாலை – பகுதி 33
விளக்கம்: முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
நிறைவு செய்வதற்கு முன்…
நண்பர்களே பாரதியார் அருளிய விநாயகர் நான்மணி மாலையின் நாற்பது பாடல்களின் விளக்கவுரையை இத்தனை நாட்கள் படித்து வந்தீர்கள். இது ஒரு பிரபந்த நூல். பவளம், முத்து, பச்சை, நீலம் ஆகிய நான்கு மணிகளைக் கோத்து ஒரு மாலையாக்கினால் எவ்வாறு இருக்குமோ அது போல வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் இவை நான்கும் ஒழுங்காக அமைத்து பாடப்பெறுவது நான்மணிமாலை.
தனி மனிதனின் ஆன்மீக விடியலை நோக்கி இட்டுச் செல்லும் படைப்பு இது. உலகியல் வாழ்வும், உலகியல் இன்பங்களும் மெய் எனக் கொண்டு, அவற்றை அருள வேண்டும் என வேண்டும் வேளையிலே, சமூகத்தில் புரையோடி போயுள்ள மூட நம்பிக்கைகள், தீமைகள் அகன்று சமூக மறுமலர்ச்சி பெற வேண்டும் என விநாயகனிடம் வேண்டுவது புதுமையானது. இத்தகைய புதுமையை பாடல்கள் 4, 7, 9, 24, 25, 32, 33 ஆகியவற்றில் காண முடிகிறது.
எந்த மதமாக இருந்தாலும், தெய்வம் ஒன்றே என்ற பாரதியாரின் கொள்கை இந்தப் படைப்பிலும் காணப்படுகிறது. உண்மையான யுகமாகிய ‘கிருதயுகம்’ மீண்டும் வர வேண்டும் வர வேண்டும் என பாரதியார் இப்பாடலிலே வேண்டுகிறார். பழைய மரபினிலே ஒரு படைப்பினைச் செய்து அதிலே புதிய கருத்துகளை பாரதியார் சொல்லியிருக்கிறார்.
பாரதியாரின் சிந்தனையில் பெரும்பங்கு வகித்த ஆன்மீகம் பற்றியும், பாரதியின் ஆன்மீகத் தேடலின் நோக்கம் பற்றியும், எதை இலக்காகக் கொண்டு பாரதி தன் ஆன்மீகத் தத்துவத்தைக் கட்டமைத்தான் என்பது குறித்தும் நாம் தெளிவுபெறுதல் அவசியம். இத்தகைய பாரதி ஆய்வுக்கு உரிய களமாக அமையும் பாரதியின் படைப்புகள் இரண்டு. அவை, பாரதியின் பகவத் கீதை முன்னுரை, பகவத் கீதை உரை, விநாயகர் நான்மணி மாலைஆகியஇரண்டும்ஆகும். பாரதியின் புதுவை வாழ்க்கையில் அவர் படைத்த உயர்ந்த இலக்கியங்கள் என்று போற்றப்படும் கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு என்ற மூன்று இலக்கியங்கள் தோன்றிய அதே காலக்கட்டத்தில் இவை இரண்டும் பாரதியாரால் எழுதப்பட்டன.
பாரதி 1912 ஆம் ஆண்டில் பகவத் கீதையை மொழி பெயர்த்தார் என்று அறிகிறோம். 1924 -25 காலகட்டத்தில் பகவத் கீதை முன்னுரை, பகவத்கீதை மூலமும் உரையும் ஆகிய நூல்களைப் பாரதி பிரசுராலயத்தார் முதன் முதலில் பதிப்பித்தனர். பாரதி, கீதை உரை நூலுக்கு எழுதிய முன்னுரையை அதன் சிறப்பு நோக்கித் தனி நூலாகப் பாரதி பிரசுராலயத்தார் பகவத் கீதை முன்னுரை என்ற பெயரில் பதிப்பித்தார்கள். பாரதி தாம் எந்தக் கோணத்திலிருந்து கீதையை ஆராய்கிறார் என்பதைப் பகவத் கீதை முன்னுரை புலப்படுத்துகின்றது.
எல்லாம் கடவுள் மயம் அன்றோ? எவ்வுயிரினும் விஷ்ணுதானே நிரம்பியிருக்கிறான், ஸர்வமிதம் ப்ரம்ஹம்! பாம்பும் நாராயணன், நரியும் நாராயணன். பார்ப்பானும் கடவுளின் ரூபம், பறையனும் கடவுளின் ரூபம். இப்படியிருக்க ஒரு ஜந்துவை எக்காரணம் பற்றியும் தாழ்வாக நினைத்தால் அஞ்ஞானத்திற்கு லட்சணம். அவ்விதமான ஏற்றத்தாழ்வு பற்றிய நினைப்புகள் உடையோர் எக்காலத்தும் துக்கங்களிலிருந்து நிவர்த்தியடைய மாட்டார். வேற்றுமையுள்ள இடத்தில் பயமுண்டு, ஆபத்துண்டு, மரணமுண்டு, எல்லா வேற்றுமைகளும் நீங்கி நிற்பதே ஞானம். அதுவே முக்திக்கு வழிஎன்றுபாரதியார்தனதுபகவத் கீதைமுன்னுரையில்குறிப்பிடுவார். எவ்வுயிரிடத்தும் எம்மனிதரிடத்தும் எவ்வித வேற்றுமையும் பாராதிருப்பதே, அதாவது சமத்துவமே விடுதலைக்குரிய வழி, அதுவே ஞானம் என்கிறார் பாரதி.
பாரதி காலத்தில் அரசியல் அரங்கிலும் ஆன்மீக அரங்கிலும் நவீன இந்தியாவிற்கான எழுச்சியை பகவத் கீதையிலிருந்தே பலரும் பெற்றார்கள். குறிப்பாக, பாலகங்காதர திலகர், மகாத்மா காந்தி, அரவிந்த கோஷ், ஜவாஹர்லால் நேரு, சுவாமி விவேகானந்தர் போன்ற பலருக்கும் கீதையே ஆற்றல் மிக்க வழிகாட்டியாக இருந்தது. பாரதி இவர்கள் அனைவரின் பார்வையிலிருந்தும் முற்றிலும் வேறான நோக்கில் கீதையை தரிசித்தார். கீதை உரைக்கு அவர் எழுதிய நீண்ட முன்னுரை பகவத் கீதையின் உட்பொருள் என்ற பெயரிலேயே தனிநூலாகப் பதிப்பிக்கும் பெருமை பெற்றது. பாரதி கீதையில் தரிசித்த ஆன்மீகத்திற்கு ஒரு வடிவம் கொடுக்க நினைத்து உருவாக்கிய இலக்கியமே விநாயகர் நான்மணிமாலை.